Saturday, May 21, 2011

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி பற்றிய திரு. சூசை எட்வேர்ட் அவர்களின் கருத்து

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி பற்றிய
திரு. சூசை எட்வேர்ட் அவர்களின் கருத்து


இப்போது ஏராளமாக கவிதைகள், கவிதை நூல்கள் வெளிவந்த வண்ணமாகவே இருக்கின்றன. என்ன சொல்கிறார்கள் என்று விளங்கிக்கொள்வதே என் சிற்றறிவுக்கு சிரமமாக இருக்கின்றது. மறைபொருளாக, விளங்கிக்கொள்வது சிரமமானதாக எழுதுவதுதான் மேதாவிகளின் அதி மேதாவித்தனம் என்ற மனப்பான்மையோ என்னவோ! ஆனால் தென்றலின் வேகம் கவிதைத் தொகுதியைப் படித்தவுடனேயே பளிச்சென்று புரிந்து விடுகின்றது. தேனாய் இனித்து நெஞ்சில் நிறைந்து விடுகின்றது. கவிஞர் இத்தொகுதியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். எங்களை மனங்களிக்கச் செய்திருக்கிறார். கவிஞனின் நெஞ்சம் எப்படியிருக்க வேண்டுமோ, கவிஞரின் உள்ளமும் அப்படியே இருக்கிறது. காலங்காலமாக அடக்கி, அமுக்கி வைத்திருக்கும் பெண்களிலிருந்து இப்படியொரு கவிதாயினி தோன்றியிருப்பது ஆச்சரியமே.

இலக்கிய பூங்காவனத்தில் இன்னும் பல மனம் வீசும் அழகுப் பூக்களை தமிழ் உலகு எதிர்பார்க்கிறது. அற்புதம். அருமை. வாழ்த்துக்கள்!!!

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் திருமதி. வசந்தி தயாபரன் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம்

எனது 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் திருமதி. வசந்தி தயாபரன் அவர்கள் ஆற்றிய உரையின் சாராம்சம்

கவிஞன் ஒரு படைப்பாளி. படைப்பாளியின் இதயத்திலிருந்து பிறப்பது கவிதை. கவிதை அவனது முகம். வெலிகம ரிம்ஸாவின் இந்த நூல் எமது கவிதை உலகுக்கு ஒரு புதுமுகம். ஆனால் அவரது கவிதைகள் பல எமக்கு பத்திரிகைகள் வாயிலாக அறிமுகமானது.

கவிஞனின் அகத்தில் எழும் உணர்வுகள் கவிதை வடிவம் பெறுகின்றன. ஆழ்மனத்தின் ஓலங்கள், இன்பகரமான எண்ணங்கள் இவற்றுக்கு கவிதை ஒரு வடிகாலாகின்றது. அவற்றை வெளிப்படுத்துவதற்கான மொழிக்கு அங்கே ஒரு முக்கியமான இடமுண்டு.

இந்த நூலின் தலையாய சிறப்பாக நான் குறிப்பிட விரும்புவது இதன் மொழிநடை. எளிமையான கவிதை மொழி. இரண்டு மூன்று தடவைகள் வாசித்து புரிந்துகொள்ள வேண்டியதில்லை. வாசகர்களை மருட்டுகிற சிக்கலான மொழிநடை இங்கு இல்லை. பழகு தமிழில் இலகு கவிதை. தனது தேவைக்கேற்ப உருவத்தை அமைத்துக்கொண்டுள்ளார். ஒருவரை விழித்து பல கவிதைகளில் அவருடன் உரையாடுகிறார். புதிய தேவைகள் எப்போதும் புதிய வடிவங்களைப் பிரசவிப்பதில் ஆச்சரியமில்லை. கவிதை சொல்லும் முறைமை சிறப்பாக உள்ளது. எடுத்துக்காட்டாக

உடைந்த கண்ணாடியாய் மாறி
உள்ளத்தை கீறிச் செல்கின்றன
தெரியாமல் நீ
வீசிச்செல்லும் பார்வைகள்

ரிம்ஸாவின் பாணியிலும் ஒரு தனித்தன்மையுண்டு. கவிதைகளில் எதுகை மோனைகள் வந்து விழுந்திருக்கின்றன. அவ்வாறே சந்த ஒழுங்கும் சிறப்பாக அமைந்துள்ளது.

பாலைச் சிரிப்பால்
பணயக் கைதியாய் - என்னை
பிணைத்துக்கெண்டவளே
அன்பால்
அணைத்துக்கொண்டவளே

படிமம், குறியீடு என்கிற புதுக்கவிதை உத்திகளைவிட இவற்றில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். அதனால் கவிதைகளின் ஒலி நயம் சிறந்திருக்கின்றது. ஆனால் அதுவே சொற்களின் கனதியைக் குறைப்பதற்கும், கட்டுக்கோப்பைக் குலைப்பதற்கும் சில இடங்களில் காரணமாகி விடுகின்றன. துக்கம் கனத்துத் துயில்கிறதா... என்ற வரியை இங்கே சுட்டிக்காட்டலாம். அதே சமயம் சில கவிதை வரிகள் அருமையாக அமைந்துவிட்டிருக்கின்றன.

காதல் சொல்லும் சுதந்திரத்தை
விட்டுவைத்தேன்...
உனை என் மனசில் நிரப்பி
இறுக தைத்தேன்!

மரபுக்கவிதையும், புதுக்கவிதையும் இணைந்த ஒரு புதுப்பாணி. மரபுக்குள் இருந்து கவிதை எழுதும் புதுக் கவிதையாளர் வழியில் ரிம்ஸாவும் முகிழ்ந்து நிற்கும் ஒரு புதிய கவிஞர்.

ரிம்ஸா பல கருப்பொருள்களைக் கையாண்டுள்ளார். தாய்ப்பாசம், நம்பிக்கை, காதல் ஏக்கம் இப்படிப் பல... ஆனாலும் காதல் பெருமளவு இடத்தைப் பிடித்துவிட்டது. காதல் உணர்வின் பல்வேறு நிலைகள், காதலில் வீழ்தல், தவித்தல், பிரிந்து தவித்தல், புறக்கணிப்புக்கு ஆளாதல், ஏமாற்றம் என்று அவை பல. உதாரணமாக மௌனத் துயரம் என்ற கவிதையைக் குறிப்பிடலாம். கவிஞரிடம் கற்பனை இருக்கிறது. உணர்ச்சி வேகம் இருக்கிறது. கவிபுனையும் ஆற்றலும் இருக்கின்றது. அதனால்தான் காதலின் நுண்ணிய வேறுபாடுகளோடு வெவ்வேறு படிநிலைகளை அவரால் காட்ட முடிகி;றது. எனினும் சமூக நோக்குடனான கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளன. இது கவனிக்கப்பட வேண்டியதொன்று. தனிமனித உணர்வு நிலைக்கு ஈடாக சமூகம் பற்றிய அக்கறையும் புலப்படவில்லை. அக உணர்வுகளுடன் சமூகம் மோதும்போது சில கவிதைகள் பீறிட்டுக் கிளம்பியுள்ளன. அதே போல தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கை அவலங்கள் சமூகத்தின் சிந்தனை பற்றி இன்னும் சில கவிதைகள் தந்திருக்கலாம். அது கவிஞரை இன்னுமொரு மேலான தளத்திலே ஏற்றி வைக்கும். விடியலைத் தேடும் வினாக்குறிகள் போன்ற கவிதைகள் தேவை.

ஒரு பெண் தனித்து இயங்கும் போது அச் சமூகத்தால் விடுப்பு பார்க்கப்படுகிறாள். அந்தப் பார்வை வித்தியாசமான கோணத்தில் இருக்கும். மௌனித்துப்போன மனம் என்ற கவிதை இதை உரக்கவே பேசுகிறது. முடிவில் மௌனித்துவிடும் பெண்ணைக் கோடிட்டுக் காட்டுகிறார். பெண்ணின் இருப்பு மறுதலிக்கப்டுகையில் அவள் நிழலாக இயங்குகின்றாள். துவண்டுவிட்ட அவள் மனதை, உள்ளக் குமுறலை ஒரு கவிதையில் வடிக்கிறார். கொள்ளைப்போன தனது கனவுகளை உரக்கக் கூறி அவள் தனது இருப்பை நிலைநாட்டுகிறாள். உதாரணமாக ரணமாகிப்போன காதல் கணங்கள் என்ற கவிதையைக் குறிப்பிடலாம்.

இப்படிப் புலம்புகின்ற பெண் புயலாக எழுகிறாள். புயலாடும் பெண்மை - இங்கே தான் இந்த நூலின் தலைப்புடன் ஏதோ ஒரு பொருத்தப்பாட்டை நான் காண்கிறேன். தென்றலின் வேகம் கூடினால், அது புயலாகவும் உருவெடுக்கக்கூடும். மொத்தத்தில் தனது மன ஆழத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை, உறவுச் சிக்கல்களாலும், உணர்வுச் சிக்கல்களாலும் அலைக்கழிக்கப்படும் பெண்ணை எமக்குக் காட்டுகிறார் கவிஞர். புறக்கணிக்கப்படும் பெண்ணின் அழுகையாக, வலியாக, வேதனையாக, ஏமாற்றமாக, கனவாக... இப்படி பல பதிவுகள் இந்நூலில் உள்ளன. கவிஞருக்கு இந்த எழுத்து ஒரு வடிகாலாகும். அதே சமயம் பெண் எழுத்திற்கு இது ஒரு வெற்றியாகவும் அமைந்து விடுகின்றது.

வாழ்வில் நம்பிக்கை வேண்டும் என்று அடித்துக்கூறுகிற சில கவிதைகளும் இத்தொகுப்பில் உள்ளன. வெற்றியின் இலக்கு, வானும் உனக்கு வசமாகும் முதலிய கவிதைகள் மனிதனின் ஆற்றலை உணர்த்தி நம்பிக்கையை விதைத்துச் செல்கின்றன.

ரிம்ஸாவின் கவிதைகள் இலகுவான நடையில் நீரோட்டம்போல தவழ்ந்து, தென்றலைப்போல எம்மைத்தடவி சுகம் சேர்க்கின்றன. ஆத்மார்த்தமான அனுபவங்கள் முகங்காட்டுகின்றன. சொற்கள் கவிஞரின் கைவண்ணத்தில் கைகட்டி நிற்கின்றன. ஆனால் தலைப்புக்களில் சிலவற்றை கவிதையின் கருத்துக்கு ஏற்ப மாற்றியமைத்திருக்கலாம்.

பெண்ணைப் பற்றி ஒரு பெண்ணே பேசுவதில் உள்ள சிறப்பை பல கவிதைகளில் காண்கிறோம். இன்னும் அவரது பார்வையை விசாலமாக்கியிருக்கலாம். குடும்ப அமைப்பிலே பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் கவிதைகளில் பரிணமித்திருக்கலாம். இனிவரும் கவிதைகளில் சமூகத்தின் பல பரிமாணங்களையும் உற்று நோக்கல் சிறப்பு தரும். ஒரே அச்சாணியில் பல கவிதைகள் சுழல்வதையும் தவிர்க்கலாம்.

கவிதை என்பது மனிதர்களின் மனங்களும், முகங்களும் சம்மந்தப்பட்டது. கவிஞரின் முகம் அங்கே தெரிகிறது. சமூகத்தின் முகமும் அங்கே தெரிகிறது. அதனால்தானோ என்னவோ ஓவியர் ஸ்ரீதர், முகங்களிலே தனது கவனத்தை செலுத்தியுள்ளார். இதுபோல இன்னும் சிறப்புகளுடன் கூடிய பல கவிதைகளை கவிஞரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்!!!

Monday, May 2, 2011

04. 'தென்றலின் வேகம்' நூல் விமர்சனம் - கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி - ஒரு கண்ணோட்டம்

தந்திச் செய்திகள் போல் தற்காலத்தில் எழுந்துள்ள கவிதை இலக்கியமானது சொற்சுருக்கமாக வாழ்க்கையின் பெரும் பகுதிகளை விமர்சித்துச் செல்கிறது. செய்யுளாக, பாக்கலாக, கவிதைகளாக உருமாறி, மரபு தாண்டிய புதுவடிவக் கவிதைகளையே நாம் இன்று படிக்கிறோம்.

தினம் தினம் பல கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்த வண்ணமிருப்பது அதன் வளர்ச்சிப் போக்கைக் காட்டி நிற்கிறது. இந்த வரிசையில் இளந்தலைமுறைக் கவிக்குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ''தென்றலின் வேகம்'' என்ற பெயரில் கவிதைத் தொகுப்பொன்று வெளிவந்திருக்கிறது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை இத்தொகுதியை வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் 64 கவிதைகள் பல தலைப்புக்களில் இடம்பெற்றிருப்பதோடு நூலின் பின் இணைப்பு போல கவித்துளி என்ற தலைப்பிட்டு வரிக்கவிதைகள் 29 உம் காணப்படுகின்றன.

கவிஞர் ஏ. இக்பால் தனது முன்னுரையில் இந்நூலில் அடங்கியுள்ள கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது ''அனுபவமும் அனுமானமும் நிறைந்தததாக இக்கவிதைகள் தென்படுகின்றன. மனிதத்துவ இயல்புகளை படம்பிடித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன. சாமான்யமாக வாசிப்போரை இழுக்கும் தன்மையுள்ள கவிதைகள் உண்மையில் அறிவூட்டி நிற்கின்றன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினர் தமது பதிப்புரையில் ''ரிம்ஸா தான் பிறந்த மண்ணிலேயே நின்றுகொண்டு தனது அவதானிப்புக்களையும், அனுபவங்களையும் உணர்ச்சிபூர்வமாக கவிதாலங்காரத்துடன் கவிதைகளாகப் புனைந்துள்ளார். இம்முயற்சிக்கு தற்துணிவு வேண்டும். இது இவரிடம் உள்ளது. இவரது கவிதைகளில் பெரும்பாலானவை தன்னுணர்ச்சிக் கவிதைகளாக உள்ளன. ரிம்ஸா தனது பார்வையை மக்கள் பக்கம் விசாலித்தால் மக்கள் படைப்பாளியாகக் கொள்ளப்படுவார்'' என்ற கருத்தையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

இளந்தலைமுறைக் கவிக்குயிலான ரிம்ஸா முஹம்மத் தனது நூலில் என்னுரை என்று உரைக்காவிட்டாலுங் கூட எண்ணங்கள் வண்ணமாகும் நேரத்தில்... என்று குறிப்பிட்டுள்ள கருத்துக்களை நோக்குகையில் அவரது கவியாற்றலையும், இலக்கியத் தாகத்தையும் உணரக் கூடியதாகவும் சறுக்குமர ஏற்றத்திலே விடாமுயற்சி கொண்டு உச்சியைத் தொடுவதற்கு எத்தனித்து நிற்கும் ஒரு சிறந்த கவிஞராக விளங்குகிறார் என்பதையும் அறிய முடிகிறது.

தாய்மை, அன்பு, காதல், மானிட தர்மம், மானிடநேயம், துணிவு, துன்பம், ஏமாற்றம் என்றெல்லாம் அவரது கவிதைகளின் பாடுபொருள்களாக கவிதா விலாசமிடுகின்றன.

தாயை இழந்த துயரத்தில் ஆராதனை என்ற கவிதையில்,

'துடுப்பிழந்த படகாய்
துயரக்கடலில்
தத்தளிக்கும் என்னை
கரைசேர்ப்பார் யாருண்டு?
தாயன்புக்கீடாக
தரணியிலே ஏதுண்டு?'

என்று தாயன்பின் பெருமைகளைப் பற்றிச்சொன்னவர்,

'உன் பிரிவுத்துயர் தாளாமல்
ஓயாது புலம்பும் எனக்கு...
ஒத்தடம் தர உனையன்றி
யார் வருவார் துணைக்கு?'

என துணையின்றி, ஆறுதலுக்கு யாருமற்ற கைவிடப்பட்ட ஒரு வெறுமை நிலையில் புலம்புகின்ற விதம் கரையாத கல்மனதையும் கரைத்துவிடும் தன்மை பெற்றுள்ளதை உணர முடிகின்றது.

வெற்றியின் இலக்கு என்ற கவிதை உழைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லுகிறது.

'உழைப்பே வெற்றியைத்
தேடித்தரும்..
வாழ்வில் முன்னேற்றம் உன்னை
நாடி வரும்'

என்று உழைப்பால் உயரலாம் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

'விடியலைத் தேடும் வினாக்குறிகள்' என்ற கவிதை மூலமாக கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட போர்ச்சூழலால் மக்கள் பட்ட அவலங்களையும், கஷ்டங்களையும், அவர்கள் அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் முடங்கிக் கிடப்பதை இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

'கோர இடிமுழக்கோடு அன்று
குண்டுமாரி பொழிந்த தீவில்
குருதிப்புனல் பெருக்கெடுத்ததால்
குடிபெயர்ந்து
குஞ்சி பூராண்களோடும்
கிழடுபட்டைகளோடும்
கணக்கற்றோர்
கண்ணீரும் கம்பலையுமாக
காப்பகங்களில் நெளிகிறார்கள்'

நிலவுரங்கும் நள்ளிரவு, நித்திரையில் சித்திரவதை, நிம்மதி தொலைத்(ந்)த நினைவுகள், ஜீவநதி, ஏற்றுக்கொள் இன்றேல் ஏற்றிக்கொல் போன்ற பல கவிதைகளில் சந்தமும், ஓசை நயமும் அழகாக காணப்படுகின்றன. அந்தக் கவிதைகள் இனிமையான வசனங்களால் புனையப்பட்டிருப்பதானது கன்னியரினதும் காளையரினதும் இதயத்தில் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றது.

குபேர வாழ்க்கை வாழும் கோடீஸ்வரர்கள், குடிசைவாழ் மக்களை சற்றும் எட்டிப் பார்ப்பதில்லை என்பதனை,

'குபேரபுரியில் கொலுவிருக்கும்
கோபுரவாசிகளே..
கொஞ்சம் குனிந்து கீழாக
குக்கிராமவாசிகளையும் பாருங்கள்'

என்று கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றையும் முன்வைத்திருக்கிறார் கவிஞர்.

பாவங்களின் பாதணி, வெற்றிக்கு வழி, வானும் உனக்கு வசமாகும், அழகான அடையாளம், வாழ்வு மிளிரட்டும் போன்ற கவிதைகள் நல்ல கருத்துக்களை சொல்லிப்போகின்றன.

பொதுவாக சிறந்ததொரு கவிதைத் தொகுப்பை ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். எம்மை விட்டுப் பிரிந்த பல்கலை வேந்தன் ஸ்ரீதர் பிச்சையப்பா கருத்தாழமிக்க கவர்ச்சியான ஓவியங்களை, ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்றவகையில் வரைந்து கவிதைகளுக்கு மெருகூட்டியிருக்கிறார்.

வளர்ந்துவரும் இளந்தலைமுறைக்  கவிதாயினிக்கு நிச்சயம் எதிர்காலம் பட்டுக்கம்பளம் விரிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அவரது இலக்கிய ஆர்வத்தையும், அவரது கவிதைகளின் தன்மைகளையும் பார்க்கும்போது புகழ்பெற்ற கவிஞர்கள் வரிசையில் புகழ்பூத்த பெண்கவிஞராக இவர் திகழ்வார் என்பது சர்வநிச்சயம்.

நூலின் பெயர் - தென்றலின் வேகம் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
முகவரி - 21E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
தொலைபேசி - 077 5009 222, 071 9200 580
விலை - 150/=



இந்த கவிதைத்தொகுதி பற்றிய விமர்சனத்தை கீற்று வலைத்தளத்தில் பார்வையிட

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14282:2011-04-25-10-31-42&catid=4:reviews&Itemid=267

எனது தென்றலின் வேகம்' கவிதைத் தொகுதி பற்றி 2011.04.24ம் திகதி தினகரன் பெண் பகுதியில் எம்.எம். மன்ஸூர் அவர்கள் எழுதி வெளிவந்த விமர்சனத்தைப் பார்க்க

http://thinakaran.lk/vaaramanjari/2011/04/24/?fn=g1104242