Monday, September 24, 2012

யாழ் இலக்கிய குவியம் - வெலிகம ரிம்ஸா , முஹம்மத் பற்றி

வெலிகம ரிம்ஸா, முஹம்மத்

தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதியைச் சேர்ந்த கவிதாயினி வெலிகம ரிம்ஸா அவர்கள், முஹம்மத் - லரீபா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.

கணக்கீட்டுத் துறையில் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தனியார் நிறுவனத்தில் உதவிக் கணக்காளராக கடமையாற்றி வருகிறார்.

இவர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற சொந்தப் பெயரிலும், வெலிகம கவிக்குயில், வெலிகம நிலாக்குயில் என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. 2004 இல் தினமுரசு பத்திரிகையில் 'நிர்மூலம்' என்ற கவிதையை எழுதியதையடுத்து இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 30க்கும் மேற்பட்ட நூல் விமர்சனங்களையும் எழுதியுள்ளார்.

தற்போது பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் சேவையாற்றி வருகிறார்.

இவரது கவிதை நூல்
தென்றலின் வேகம்.

இவரது கவிதையொன்று.

விரைந்தோடி வா!

இறந்தகாலம் முடிந்திற்று..
நிகழ்காலமும் கழிந்திற்று.. 

எதிர்காலம் நமக்காக
பன்னீர் தூவி வரவேற்கும்!

என் இளமையின்
பாதங்களில்
உன்னுடைய சுவடுகள்..
கரைதேடும் அலையாக
காதலின் நினைவுகள்!

வாழ்வென்றாலும்
சாவென்றாலும்
உன்னுடனே சேருவேன்..
வாடைக்காற்றை சாட்சியாக்கி
உனக்கிதை நான் கூறுவேன்!

உன் கைகோர்த்து
நடக்கும் சமயங்களில்
கவலைகள் யாவும்
காலடியில் வீழும்!

கற்பனையில் உனை எண்ணி
நானே ரசித்தேன்..
பிடிக்காத பாவற்காயையும்
இனிப்பாக ருசித்தேன்!

அர்த்தராத்திரி தூக்கத்தின்
கனவுகளில் வண்ணங்கள்..
கருவறைக் குழந்தையாய்
தலைகீழாய் எண்ணங்கள்!

என் அகத்தைப் புரிந்த
ஆருயிர் நீ..
என் வாழ்வை பகிரும்
உரிமையும் நீ!

எங்கிருக்கிறாய் எனைவிட்டு
என் மன்னவா..
உனக்காக காத்திருக்கிறேன்
விரைந்தோடி வா!!! 

நன்றி - யாழ் இலக்கிய குவியம்