Thursday, November 20, 2025

03. 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை


நூல் கண்ணோட்டம்:- 

பவானி சச்சிதானந்தன், கொழும்பு.


மீண்டும் ஓர் நூலாய்வின் ஊடாக தங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இன்று நான் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூல் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'பிஞ்சு மனம்' என்ற சிறுகதைகளடங்கிய நூலாகும்.

வெள்ளை மஞ்சள் சிகப்பு கலந்த பல அழகிய வண்ணத்தில் சிறு குழந்தையின் புன்னகைக்கும் முகத்துடன் 'பிஞ்சு மனம்' சிறுகதைகள் என தலைப்பிட்டு வண்ணாத்துப் பூச்சிகள் இரண்டையும் பதிவிட்டு முன்னட்டை அழகுற, பின்னட்டை ஆசிரியரின் புகைப்படத்துடன் கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களின் வாழ்த்துரை சிறந்திட பூங்காவனம் இலக்கிய வட்ட முகவரி அடங்கலுடன் வெளிவந்திருக்கின்றது இந்த சிறுகதை நூல். உள்ளே நூலாசிரியரின் ஏனைய வெளியீடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு பதிவுத் தரவுகளை அடங்கியுள்ளார். 

நூலுக்கான அணிந்துரையை கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களும், முன்னுரையை கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுப் பிரிவு பிரதி ஆணையாளர் லெனின் மதிவானம் அவர்களும், வாழ்த்துரையை முன்னாள் உளவியல் (வருகைதரு) விரிவுரையாளர் அல்ஹாஜ். யூ.எல்.எம். நௌபர் அவர்களும் எழுதியுள்ளார்கள். ஈற்றில் என்னுரையை முன்வைத்த நூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத், தனது மாமாவான எழுத்தாளர் எஸ்.ஐ.எம். ஹம்ஸா அவர்களுக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

நூலின் உள்ளடக்கம் பதினெட்டு சிறுகதைகளின் தலைப்புகளைத் தாங்கியதாக 152 பக்கங்களில் வெளிவந்துள்ளது. நான் ஏழு சிறுகதைகளை மட்டுமே இங்கு எனது ஆய்வுக்காக எடுத்து, வாசகர்களுக்காக முன்வைத்துள்ளேன். 

முதலாவது சிறுகதை 'பிஞ்சு மனம்' என்ற நூலின் தலைப்பிலேயே நூலை அழங்கரித்து நிற்கின்றது. இக்கதையில் ஏதோ ஒரு காரணமாக சிறார்கள் வளரும் போது தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும் இறுக்கமான மனதோடும் இருக்கிறார்கள். ஒப்பீடு வகையிலும் மனம் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களால் சிறுபராயம் தொட்டே கவலைப்படும் நிலையில் நிறம் ஒரு பிரச்சினையாகக் காண்பிக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதன் பின்னர் வளர்ந்து பெரியவளான நிலையில் தெளிவான சிந்தனையோடு தன் மனதை இலகுவாக்கிய விதத்தில் கூறியுள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது.

'மனிதம் வாழும்' என்ற கதை ஏழ்மையை மதிக்கத் தெரிந்த அற்புதமான மனிதராக ராஸிக் மௌளவியை விவரித்துள்ள விதமும் ஒரு நல்லவரின் மரணம் எத்தனை இதயங்களை வலிக்க வலிக்க பேச வைக்கின்றன என்ற கருத்தையும் கூறி, இறுதியாக மூன்று பெண் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்த தகப்பனாரான ராஸிக் மௌளவி சுவர்க்கம் புகுவார் என்பதற்கு இணங்க நஸீராவுடன் இணைந்து நாமும் இணைந்து துஆக் கேட்போம் என்று கதையை அழகாக நிறைவு செய்துள்ளார். 

அடுத்த கதையாக 'பலன்' என்ற கதை ஏழையானவர்களிடம் திறமை கலந்த நல்ல பண்பை நிதர்சனமாக உணர கடவுள் பல சந்தர்ப்பங்களைக் கொடுப்பார் என்ற கருத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பணக்கார வர்க்கத்தினரின் தேவைப்பாடுகள் முழுமையுமே பணத்தைக் கொண்டே ஈடு செய்ய பணக்காரர்கள் பழகியிருப்பார்கள். அங்கே ஏழைக்கு மரியாதை என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரமாய் நிற்க, ஏழ்மையை இகழ சாதாரணமாக ஒழுக்கத்தையே நிந்தனை செய்து குறை சொல்ல துணிந்திடுவது யதார்த்தமே. இருந்தும் அதற்கான பலன்களை இம்மையிலேயே இறைவன் கொடுத்துவிடுகிறான் என்ற உண்மையை இக் கதை சுட்டிக்காட்டுகின்றது. 

இன்னும் ஒரு சிறந்த கதையாக 'உறவுகள்' என்ற கதை நூலை அலங்கரித்து நிற்கின்றது. காவியா - ஹாசினியுடனான நட்பில் வழிகாட்டியாகி எந்தவிதமான எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல் உதவும் மேன்மையான குணம் கொண்ட காவியா, ஹாசினியின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பல சுகமான வழிகளை அமைத்துக் கொடுத்து அகம் மகிழ்கின்றாள். வயது வித்தியாசமற்ற நட்பின் அழகை உயிரோட்டமாகக் கூறுகின்ற இனிய கதையாக இக்கதை அமைந்துள்ளது. 

'மௌனம' இன்னுமொரு உயர்வான சமூக ரீதியாக நிரூபிக்க பால்ய சிநேகிதர்களான சாமில் - சாஜித் இருவரையும் காண்பித்து சுயநலமாக தனது தேவைகளை நிறைவேற்றி பெற்றோரையும் சகோதரங்களையும் எண்ணிட மறந்த சாமிலுக்கு, சாஜித் கூறும் அறிவுரை மற்ற சுயநலமிகளும் படிப்பினையாக உணர்ந்து செயல்பட சிறந்த கதையாக அமைகின்றது.

'வாழ்க்கை வளைவு' என்ற கதையில் தனது மனைவி இறைவனடி சேர்ந்ததும் காதர் நானாவின் வாழ்நாள் தலைமைத்துவத்தை இழந்து வயதுக்கேற்ற சாப்பாடு, தண்ணீர் கிடைக்காது தடுமாறி பால்ய நண்பன் மக்கீனிடம் கூறி கவலைப்படும் நிலை பரிதாபமாகரமானதாக இருக்கிறது. பிள்ளைகளுக்காக சொத்து பிரிக்கப்பட்டுள்ள நிலையில் தனக்காக எதுவும் வைத்துக்கொள்ளாத தந்தை தனிமைப்பட மறைந்த மனைவியின் இடத்திலான வெற்றிடம் நிறைக்கப்படாத கொடுமை, கலங்கி நிற்க வைத்துள்ள கடினமான வாழ்க்கை ஆகியவற்றை தொட்டுக்காட்டி நகரும் இக்கதையும் சிறப்பாக அமைந்துள்ளது. 

அடுத்ததாக 'வீடு' என்ற கதை நிஸாம், பரீத், நவ்பர் ஹாஜி என சில நல்ல உள்ளம் கொண்டவர்களை நினைவில் நிறுத்தி வடித்த கதையாக நூலில் இடம்பிடித்துள்ளது. சமூக நலன்களுக்காக பலர் முயற்சிக்க சரியான முறையில் சிறப்பாக நடந்து வலுப்படுத்தினால் வெற்றிபெற முடியும் என்ற உண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. இக்கதையும் நூலாசிரியரின் சிறந்த சமூக நல சிந்தனையை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. 

ஆக நூலில் இடம்பெற்றுள்ள அத்தனை கதைகளும் பல நல்ல விடயங்களை ஒப்புவித்து வாசிப்போரை சளைக்காத வகையில் இழுத்துச் செல்கின்றது. இப்படியாக இன்னும் பல சமூக நலக் கதைகளை நூலாசிரியர் படைக்க வேண்டுமென்ற வேண்டுதலை முன்வைத்து வாழ்த்துகளைக் கூறுவதில் மகிழ்கின்றேன்.


நூல் - பிஞ்சு மனம்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

தொலைபேசி - 0775009222

வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்

விலை - 1,000 ரூபாய்



நூல் கண்ணோட்டம்:- 

பவானி சச்சிதானந்தன், கொழும்பு.


02. 'பிஞ்சு மனம்' நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்

 'பிஞ்சு மனம்' நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்


நூல் விமர்சனம்:- மரீனா இல்யாஸ் ஷாபீ


இனிப்பும் கசப்புமான அனுபவங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்படுகின்றன. நாம் வாழும் சூழலில், பழகும் மக்கள் மத்தியில் நிகழும் அன்றாட அவலங்களும் ஆச்சரியங்களும் வெறும் செய்தித் துணுக்குகளாக எம்மைக் கடந்து செல்கின்றன. ஆனால், ஓர் எழுத்தாளன் அத்தகைய அனுபவங்களை வெறும் கண்களால் பார்த்துவிட்டுக் கடந்து செல்வதில்லை. அவன் அதை இதயத்துக்கு எடுத்துச் செல்கிறான். மூளைக்கும் கடத்துகிறான். சமூகப் பின்னணியுடன் சேர்த்துப் பிசைந்து, அதற்கு உணர்வுகள் ஊட்டி வேறு ஒர் உருவம் கொடுத்து மீண்டும் நம்மிடமே கொண்டு வந்து சேர்க்கிறான். அந்தவகையில் 'பிஞ்சு மனம்' என்னை வந்தடைந்தபோது நான் ஒரு நீண்ட பயணத்தில் இருந்தேன். நூலில் சேர்த்துக்கொள்வதற்கு ஒரு கருத்துரை கேட்டார்  நூலாசிரியை ரிம்ஸா முஹம்மத். ஆனால் அவர் கேட்கும் அவசரத்தில் நூலை வாசிக்கவோ, கருத்துரை எழுதவோ எனக்கு அவகாசம் இருக்கவில்லை. அதற்குப் பிரதியுபகாரமாக இன்று இந்த நூல் கண்ணோட்டத்தை எழுதுகிறேன்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் கணக்கீட்டுக் கற்கை நூல்கள், கவிதை நூல்கள், நூல் விமர்சனங்களடங்கிய தொகுதிகள், சிறுவர் நூல்கள், ஆய்வு நூல் என்பவற்றை வெளியிட்டுள்ளதுடன் 'பூங்காவனம்' என்ற காலாண்டு இலக்கிய சஞ்சிகையையும் வெளியிட்டு இலக்கிய உலகுக்கு வளம் சேர்த்து வருகிறார்.

சிறுகதைத் துறையில் 'பிஞ்சு மனம்' என்ற இந்தச் சிறுகதைத் தொகுதி அவரது கன்னி நூலாகவே வெளிவருகிறது. இலங்கை வாழ் தமிழ் பேசும் சமூகங்கள் மத ரீதியாக வேறுபட்டிருந்தாலும் மொழி ரீதியாக ஒன்றுபட்டவர்கள். அதனால் ஒரு சமூகத்தின் வாழ்வியல் அம்சங்கள் அடுத்த சமூகத்துக்குள்ளும் இயல்பாக ஊடுருவிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு மதம் கடந்து நிற்கும் மானுட வாழ்வின் அனுவபவங்களை தன் எழுத்துக்கு உரமாக்கி இருக்கிறார் ரிம்ஸா முஹம்மத்.

'பிஞ்சு மனம்' தொகுதியில் இடம்பெற்றுள்ள 18 கதைகளுள், 9 கதைகள் தமிழர் வாழ்வியல் பின்னணியில் தமிழ்க் காதாபாத்திரங்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. ஏனைய 9 கதைகளும் முஸ்லிம் சமூகப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. 

இந்தத் தொகுதியில் இருக்கும் கதைகளில் முக்கியமான கருப்பொருள்களில் ஒன்றாக குழந்தை உளவியல் காணப்படுகிறது. மகுடத் தலைப்பிலமைந்த முதல் சிறுகதையான 'பிஞ்சு மனம்' (பக்கம் 17) என்ற கதையில் வரும் பவித்ரா என்ற சிறுமி தன் தங்கைகளை விடவும் நிறம் குறைந்தவளாக இருப்பதால், பாரபட்சமாக நடாத்தப்படுகிறாள். அதனால், அவளுக்குள் தாழ்வுச் சிக்கல் ஏற்படுகிறது. பொறாமை அவளை ஆட்டிப் படைக்கிறது. எங்கள் சமூகத்தில் எங்களுடன் ஒட்டி உறவாடும் பெரியவர்களின் எண்ணங்களும் சின்னச் சின்னச் செயல்களும் எப்படி குழந்தைகளைப் பாதிக்கின்றன என்ற குழந்தை உளவியலின் தெளிவான மற்றும் யதார்த்தமான சித்தரிப்பாக 'பிஞ்சு மனம்' என்ற சிறுகதை இந்தத் தொகுதிக்கு நல்லதொரு ஆரம்பத்தைக் கொடுக்கிறது.

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் சில கதைகள், உண்மைச் சம்பவங்களாக இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு யதார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன. 'மனிதம் வாழும்' (பக்கம் 34) என்ற கதையில் ராசிக் மௌலவிக்காக துஆ கேட்போம் என்று கதையை முடித்திருக்கும் பாணி, அந்த எண்ணத்துக்கு வலுவூட்டுகின்றது.

'இறையச்சம்' (பக்கம் 48) என்ற கதையில் வரும் ஆயிஷா என்ற சிறுமி தொழுவதில்லை என்பதற்காக பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படுகிறாள். வீட்டில் ஆயிஷாவின் தந்தை தொழுவதில்லை. வீட்டுக்குள் அதற்கான சூழலையோ, முன்மாதிரியையோ உருவாக்காமல் ஒரு காரியத்தை செய்வதற்கு குழந்தைகளை வற்புறுத்தினால் அவர்களிடம் உண்மையையும் நேர்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்த்த முற்படுகிறது 'இறையச்சம்' என்ற சிறுகதை. 

'சப்பாத்து' (பக்கம் 70) என்ற சிறுகதை வறுமையில் வாடும் ஒரு சிறுமியின் சப்பாத்துக் கனவுகளை மட்டும் சிதைத்து விட்டுச் செல்லவில்லை. பாடசாலைகளில் போட்டி நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும்போது, ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, திறமையான ஏனைய மாணவர்கள் ஓரம்கட்டப்படும்போது, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும்  மாணவர்களின் நிலையை நாசுக்காக சுட்டிக் காட்டுகிறார் கதாசிரியர். அது மட்டுமல்ல, பாடசாலைகளில் கொண்டு வரப்படும் நிர்வாக ரீதியான மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கூட, பாடசாலையை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். காய்ச்சல் என்று பொய்ச்சாக்குச் சொல்லிப் படுத்திருக்கும் பரீனாவின் உளவியல் போராட்டம் பாடசாலை நிர்வாகத்துக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இவ்வாறு குழந்தைகளின் உளவியல் போராட்டங்களை வைத்தே சில கதைகளை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார் ரிம்ஸா முஹம்மத்.

எழுத்தாளர்கள் சமூகத்தின் வழிகாட்டிகள், நேர்மையானவர்கள் என்ற பிரமை பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் அவர்களைத் தரம் தாழ்த்தி விடுகின்றன. இன்றைய இலக்கிய உலகில் விருது வழங்கும் நிகழ்வுகள் திறமைக்கான அங்கீகாரம் என்ற நிலை மாறி, காசுக்கு விற்கப்படும் கலாச்சாரமாக உருமாறி வருவதை 'பொறாமை' (பக்கம் 123) என்ற கதை மூலம் தோலுரித்திக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்.

மனிதனின் தார்மீகக் குணங்கள் மரித்துவிட்டதா என்று நினைக்கும் அளவுக்கு நம்மைச் சுற்றி அருவருக்கத் தக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்பதை ரிம்ஸாவின் சில கதைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதே வேளை, 'உறவுகள்' (பக்கம் 77), 'வீடு' (பக்கம் 146)  போன்ற கதைகள் மூலம் மனிதம் மீது நம்பிக்கையை விதைக்கவும் கதாசிரியர் ரிம்ஸா முஹம்மத் முயற்சித்திருக்கிறார். 

சில இடங்களில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை வைத்தும் தன் கதைகளை நகர்த்தி இருக்கிறார் ரிம்ஸா. இறையச்சம், வாழ்க்கை வளைவு போன்ற சிறுகதைகள் இதற்கு நல்ல உதாரணங்களாகும். சில கதைகள் நேரடியாகப் பிரச்சாரம் செய்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துவதாக நான் நினைக்கிறேன். அதாவது, கதாபாத்திரங்களில் இருந்து பிரிந்து, கதாசிரியராக அவரே சில இடங்களில் பேசி இருக்கிறார். இதில் தவறு இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.

'ஒரு எழுத்தாளன் தன் சமூகத்தை, அவனது உலகத்தை பிரதிபலித்து விளக்க வேண்டும்;. அவனது எழுத்துக்கள் உத்வேகம் அளிக்க வேண்டும். வழிகாட்ட வேண்டும்' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் இ.பி. வைட் அவர்கள். ஆனால், வாசகரிடம் பிரசங்கிப்பது போல் அல்லாமல்,   கதையை கதாபாத்திரங்களின் பார்வையில் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. 

தென்னிலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களான மர்ஹூம் எம்.ஐ.எம். ஹம்ஸா, மர்ஹூம்  திக்குவல்லை ஷம்ஸ், திக்குவல்லை கமால், திக்குவல்லை ஸப்வான், திக்குவல்லை ஸும்ரி  போன்றோர் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வரிசையில் வெலிகம ரிம்ஸா முஹம்மதும் இன்னும் காத்திரமான படைப்புகளை இலக்கிய உலகுக்குத் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!


நூல் - பிஞ்சு மனம்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்

விலை  - 1,000 ரூபாய்

தொலைபேசி - 0775009222



நூல் விமர்சனம்:-

மரீனா இல்யாஸ் ஷாபீ



Wednesday, November 19, 2025

01. 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

நூல் கண்ணோட்டம்:- சுமைரா அன்வர்


சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 15 ஆவது நூலாக அண்மையில் வெளியிட்ட 'பிஞ்சு மனம்' (சிறுகதைகள்) நூலை வாசிக்கும் வாய்ப்பெனக்குக் கிடைத்தது. 'பிஞ்சு மனம்' தொடங்கி 'வீடு' வரை 152 பக்கங்களில் பதினெட்டு சிறுகதைகளை உள்ளடக்கியிருக்கும் இந்த நூல் அழகான அட்டைப் படத்துடன் கருத்தைக் கவர்ந்துவிடுகிறது. இந்தக் கதைகளை வாசித்து நான் பெற்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நாம் வாழும் சூழலிலுள்ள சமகால நிகழ்வுகளை மையமாகக் கொண்ட நம்மோடு உலவும் சக மாந்தர்களையே காத்திரமான கதாபாத்திரத்திரங்களாக்கி, உயிரோட்டமும் உணர்வும் மிக்க சிறந்த கதைகளைப் படைத்துள்ளார் சகோதரி ரிம்ஸா முஹம்மத். இந்த நூலில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சிறுகதைகளுமே நிறைய செய்திகளைச் சொல்லுகின்றன. மனதில் பதிந்து நிற்கின்றன. சமூகத்துள் இலைமறை காயாக இருக்கும் பல பிரச்சினைகளைத் சகோதரி ரிம்ஸா முஹம்மத் துணிவுடன் முன்வைத்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

நூலில் முதல் சிறுகதையாக பக்கம் 17 இல் இடம் பெற்றுள்ள 'பிஞ்சு மனம்' என்ற அருமையான சிறுகதை மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. உரிய அன்பு கிடைக்காது அநியாயமாக நிராகரிக்கப்பட்ட பிஞ்சு மனம் படும் அவஸ்தையை  யதார்த்தமாக வெளிப்படுத்தும் கதாசிரியை எம்மையும் அழ வைக்கிறார். அதேவேளை கதையின் நிறைவு எம் மனதையும் சற்று ஆறுதல் படுத்துகிறது. இக்கதையில் பிரச்சினையையும் எடுத்துக் காட்டி அதற்கான தீர்வையும் வெளிப்படுத்தியுள்ளமை சிறப்பாக உள்ளது.

பக்கம் 24 இல் அமைந்துள்ள 'பணம் பந்தியிலே', 'நன்றிக்கடன்' (பக்கம் 138) ஆகிய இரு கதைகளின் மூலம்; 'கடன்' படுத்தும் பாட்டையும் உறவுகளின் முறிவுக்கு எப்படியெல்லாம் கடன் காரணமாகின்றது என்பதையும் அச்சொட்டாக கதாசிரியர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

'மனிதம் வாழும்' (பக்கம் 34), 'வீடு' (பக்கம் 146) ஆகிய சிறுகதைகள் மூலம் மனித நேயம் மிக்க மனிதர்களும் எங்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை, மனதை ஆகர்ஷிக்கும் வகையில் கதாசிரியர் சகோதரி ரிம்ஸா முஹம்மத் எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

'சப்பாத்து' (பக்கம் 70) என்ற தலைப்பிலான சிறுகதையும் பிஞ்சு மனமொன்றின் 'வலிகளை' மிக ஆழமாகப் பதித்துள்ளது. புறக்கணிப்பும் அடுத்தவர் நிலையைப் புரிந்துகொள்ளாமையும் திறமைக்கு வாய்ப்பளிக்காமையும் எமது சமூகத்தில் சாதாரணமாக நிகழும் சம்பவங்களாகி வருவதைக் கண்கூடாகவே காண்கிறோம். இந்த சிறுகதை மூலம் அவ்வாறான ஒரு சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டு நிற்கின்றது.

'வாழ்க்கை வளைவு' (பக்கம் 100) அருமையான 'பேசுபொருளை' உள்ளடக்கிய சிறுகதையாகும். வாழ்க்கைத் துணையை இழந்த ஒருவரின் (கணவனின்) மனத் துயரங்களை, சகோதரி ரிம்ஸா மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறான கருப்பொருளை தேர்ந்தெடுத்த சகோதரியை பாராட்டியேயாக வேண்டும்.

இந்நூலிலிருந்த 18 சிறுகதைகளில் சில கதைகளையே எனது பார்வையில் நானிங்கு பதிவேற்றியுள்ளேன். எளிமையான மொழிநடையில், எதுவித அலட்டலுமில்லாமல், மிக யதார்த்தமான முறையில், ஆனால், கனதியான 'கருப்பொருளாக்கி', சமூகத்துள் தன் சிறுகதைகளைப் பேசுபொருளாக்கி தன் திறமையைப் புடம்போட்டிருக்கும் இலக்கிய ஆளுமை, பன்னூலாசிரியர் சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களின் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அத்தோடு, இனிவரும் காலங்களில் மேலும் பல சிறுகதை நூல்களை வெளியிட வேண்டுமென்பதென் அன்பான வேண்டுகோள். 


நூல் - பிஞ்சு மனம்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 1,000 ரூபாய்


நூல் கண்ணோட்டம்:- சுமைரா அன்வர்

Friday, January 10, 2025

2025.01.05 தினகரன் வாரமஞ்ரியுடன் வெளிவரும் இணைப்பிதழான செந்தூரம் இதழில் எனது அட்டைப் படம் தாங்கி வெளிவந்த நேர்காணல்.

 தெற்கிலிருந்து புலர்ந்த புதுமை இலக்கியப் புலரி 

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


செந்தூரம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர். இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், விமர்சகர், சஞ்சிகையாசிரியர்  மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.


'பிஞ்சு மனம்' நூல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, பன்னூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்களுடனான சிறப்பு நேர்காணல்

நேர்கண்டவர்:- கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான்


உங்களை நான் எப்படியாக தெரிந்து கொள்ள முடியும்?



நான் ஈழத்தின் தெற்குப் பகுதியிலுள்ள வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்டவள். ஊரின் பெயரை எனது பெயரோடு சேர்த்துக்கொண்டு வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரிலேயே இலக்கிய உலகில் அறிமுகமாகினேன். எனது குடும்பத்தில் நான் மட்டுமே இலக்கியத் துறையுடனும் ஊடகத் துறையுடனும் தொடர்புடையவள். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியும், தேசிய கல்வி நிறுவக முன்னாள் செயற்திட்ட அதிகாரியும், அபிவிருத்திப் புவியியல் நூலின் ஆசிரியருமான திக்குவல்லை ஹம்ஸா என்று இலக்கியத் துறையில் நன்கு பெயர் பதித்த, உறவு முறையில் எனக்கு மாமாவான மறைந்த எஸ்.ஐ.எம். ஹம்ஸாவின் மூலமே எனக்குள் கலை இலக்கிய ஆர்வம், எழுத்துத் துறை, படைப்பாக்கத் துறை போன்றவை ஊடுகடத்தப்பட்டதாக நினைக்;கின்றேன்.


இலக்கியமானது எப்படியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

போராட்டகரமான மனித வாழ்வில் ஒரு சாதாரண மனிதனுக்கு மன அமைதி தருவதாகவே இலக்கியம் இருக்க வேண்டும். ஒரு பயனுள்ள பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும். அத்துடன் அறிவை வளர்த்துக்கொள்ளவும் வாசிப்பு, இலக்கியம் போன்றவை உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை அதாவது அவர்களின் துன்ப துயரங்கள், அவலங்கள், போராட்டங்கள் போன்றவற்றை எடுத்துச் சொல்லி அவர்களின் வாழ்வின் எழுச்சிக்கு நல்லதொரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தித் தரக்கூடியதாகவே இலக்கியம் இருக்க வேண்டும். மொத்தத்தில் வாசிக்கின்றவர்கள் மனதில் ஒரு உந்துசக்தியை ஏற்படுத்துவதாகவே இலக்கியம் இருக்க வேண்டும்.


தனிப்பட்ட வாசிப்புகள் எந்தவகையில் உங்களின் எழுத்துகளுக்கு உதவியாக இருக்கிறது?

வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்று சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை தீவிர வாசிப்பு ஒரு மனிதனை நிச்சயமாக எழுத வைக்கும் என்றும் நான் சொல்வேன். உள்நாட்டு மூத்த எழுத்தாளர்களது நூல்கள் பலவற்றையும் நான் விரும்பி வாசிப்பேன். அவற்றுள் ஒரு சில நூல்கள், நான் புத்தக விமர்சனங்களை பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதி வருவதால் நூலாசிரியர்களிடமிருந்து எனக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. ஏனையவை புத்தக வெளியீட்டு நிகழ்வுகளுக்கு அழைப்புக் கிடைக்கும் பட்சத்தில் அந்தந்த வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்குச் சென்று, காசு கொடுத்து, வாங்கி வந்து வாசிக்கும் பழக்கமாகவே இருக்கிறது.

இந்திய எழுத்தாளர்களது நூல்களை காசு கொடுத்து வாங்கி அல்லது வாசிகசாலையால் பெற்றே வாசிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து ஒரு சில நூல்களையும் வாசித்திருக்கிறேன். ஆனால் தரவிறக்கம் செய்யப்பட்ட நூல்களை வாசிப்பதில் சில அசௌகரியங்கள் இருக்கின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை. இவ்வகையிலான வாசிப்பே எனது எழுத்து முயற்சிகளுக்கு பெரிதும் உதவியாக அமைந்தது என்று உறுதியாகக் கூறலாம். 


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக ஊடகங்களில் எழுதி வரும் நான் இதுவரை 15 நூல்களைப் பிரசுரித்துள்ளேன். நான் எழுதி பிரசுரித்துள்ள நூல்களை பின்வருமாறு பட்டியலிட்டுக் குறிப்பிடலாம்.


01. வங்கிக் கணக்கிணக்கக் கூற்று (கணக்கீடு) 2004

02. கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) 2008

03. கணக்கீட்டின் தெளிவு (கணக்கீடு) 2009

04. தென்றலின் வேகம் (கவிதை) 2010

05. ஆடம்பரக்கூடு (சிறுவர் கதை) 2012

06. என்ன கொடுப்போம் (சிறுவர் கதை) 2012

07. பாடல் கேட்ட குமார் (சிறுவர் கதை) 2013

08. இதுதான் சரியான வழி (சிறுவர் கதை) 2013

09. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்) 2013

10. வண்ணாத்திப் பூச்சி (சிறுவர் பாடல்) 2014

11. அறுவடைகள் (விமர்சனம்) 2015

12. எரிந்த சிறகுகள் (கவிதை) 2015

13. விடியல் (ஆய்வு) 2017

14. எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம் (ஆவணம்) 2021

15. பிஞ்சு மனம் (சிறுகதை) 2024


இதில் கிடைசியாக பிரசுரமான 'பிஞ்சு மனம்' என்ற நூலே 2025 ஜனவரி 05 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.


நீங்கள் வெளியீடு செய்துள்ள படைப்புகளின் முழுமையான பட்டியலைப் பார்த்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உங்களது இந்த வயதுக்குள் நீங்கள் அதிகமாக எழுதிக் குவித்துள்ளீர்கள் என்று நினைக்கத் தோன்றுகின்றதே?

இலக்கியத் துறையில் மிகவும் ஆர்வமாக ஈடுபாடு காட்டி வருகின்றேன். வாசிப்புப் பழக்கம் என்னில் ஆரம்பித்தது நான் தரம் 08 இல் படிக்கும் காலத்திலாகும். அதிகமான வாசிப்பே என்னை எழுத வைத்தது. அப்படி ஆயிரக் கணக்கில் எழுதியவற்றை அவ்வப்போது கால இடைவெளிவிட்டு நூலாக வெளியிட்டு வருகின்றேன். கொரோனாக் காலங்களில் நூல் வெளியீடுகளைச் செய்ய முடியவில்லை. சுமார் 06 வருடங்களுக்குப் பின்னர் இப்போதைய காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொண்டேன்.


சிறுகதைகள் என்றால் அவற்றில் முக்கியமாக எந்தெந்த அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்?

முதலில் கதைக்காக நல்ல கரு அமைய வேண்டும். அதன்பின் அதனைச் சுற்றிப் பின்னப்படும் இசைவான சம்பவங்கள், சம்பவத்தின் துணையோடு அவற்றைக் கொண்டு செல்லும் ஆற்றொழுக்கமான எழுத்து நடை, பிரதேசப் பேச்சு வழக்கிலமைந்த கதைக்கு வலுவூட்டும் உரையாடல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக சிறுகதையாசிரியரின் மொழியாட்சி போன்றன எல்லாம் நல்லதொரு சிறுகதைக்கு அவசியமாகவே இருக்கின்றன.


ஒரு நல்ல சிறுகதையின் பண்புகளாக எவற்றை முன் வைப்பீர்கள்? பொதுவாக சிறுகதைகளில் வர்ணனைகள் இடம் பெறலாமா?

சிறுகதைகளின் முக்கியமான பண்புகளாக பின்வருவனவற்றை முன்வைக்கலாம். தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு சிறுகதைகள் பிரதிபலிக்க வேண்டும். சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் போன்றவைதான் தலை தூக்கியிருக்க வேண்டும். விரிவான வர்ணனைகளுக்கு சிறுகதைகள் இடம் கொடுக்கக்கூடாது. குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக் காட்டப்பட வேண்டும்.

பாத்திரங்களின் உரையாடல்களில் சிறப்பான முறையில் சொற்கள் அமைக்கப்பட வேண்டும். சிறுகதை அளவிற் சிறியதாய் இருப்பதோடு முழுமை பெற்றிருக்க வேண்டும். சிறுகதைகள் நம்பக் கூடிய உண்மைத் தன்மை பொதிந்ததாகக் காணப்பட வேண்டும். மொத்தத்தில் நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் (நாவலாக) விரிவாகக் கூடிய கதைக் கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல சிறுகதை என்பது மனதோடு கலந்த இசை போன்றது. கேட்ட மாத்திரத்திலேயே மனம் அதில் இலயிக்க வேண்டும். பாடலின் இறுதிவரை அதே குதூகலம் இருக்க வேண்டும். இசையும் இதயத் துடிப்பும் இரண்டரக் கலக்க வேண்டும். அதுபோலவே சிறுகதையும் வாசித்த மாத்திரத்திலேயே ஒரே அமர்வில், முழுவதும் வாசித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தர வேண்டும்.

வர்ணனைகளைப் பொறுத்தவரை சிறுகதைகளில் அமையும் பாத்திரங்களின் தேவைக்கு ஏற்ப இடம்பெறச் செய்யலாம். ஆனால் வர்ணனைகளை அதிகமாகப் பயன்படுத்துவது சிறுகதைகளின் காத்திரத் தன்மையைப் பாதிக்கச் செய்வதாகவே அமையும்.

 

உங்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை எழுத்தாளர் என்று யாரைக் கூறுவீர்கள்?

பொதுவாக எனக்குக் கிடைக்கும் எல்லாக் கதாசிரியர்களது சிறுகதை நூல்களையும் நான் வாசிப்பேன். ஒருவரது பெயரை மட்டும் இங்கு குறிப்பிட முடியவில்லை. குறிப்பாகச் சொல்வதென்றால் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம், வண்ணதாசன் என்ற புனை பெயரில் சிறுகதைகளை எழுதுகின்ற சி. கல்யாண சுந்தரம், கு.ப.ரா என பரவலாக அறியப்பட்ட கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, தியாகராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, பாலகுமாரன், சுஜாதா, ரமணி சந்திரன் ஆகியோரது சிறுகதைத் தொகுதிகளை வாசித்துள்ளேன்.

உள்நாட்டு எழுத்தாளர்களான மறைந்த எழுத்தாளர்களான நீர்வைப் பொன்னையன், கவிஞர் ஏ. இக்பால், எஸ். முத்துமீரான், எ.எஸ்.எம். நவாஸ் மற்றும் திக்குவல்லைக் கமால், சி. சிவசேகரம், சுதாராஜ், இரா. சடகோபன், மு. சிவலிங்கம், அஷ்ரப் சிஹாப்தீன், பதுளை சேனாதிராஜா, மலரன்பன், திக்குவல்லை ஸப்வான், உ. நிசார், தீரன் ஆர்.எம் நௌசாத், சூசை எட்வேட், உமா வரதராஜன், டாக்டர் நௌஷாத் முஸ்தபா, காத்தநகர் முகைதீன் சாலி, செங்கதிரோன், நஜ்முல் ஹுசைன், மருதூர் ஜமால்தீன், திக்குவல்லை ஸும்ரி, எஸ்.ஆர். பாலசந்திரன், பவானி சிவகுமாரன், சுலைமா சமி இக்பால், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, எம்.ஏ. ரஹீமா, கெக்கிறாவ ஸஹானா, வசந்தி தயாபரன், மரீனா இல்யாஸ் ஷாபி, கீதா கணேஷ், இன்னும் பலரது சிறுகதை நூல்களையும் நான் விரும்பி வாசித்துள்ளேன். 

அத்துடன் தமிழ்நாட்டில் இலக்கியம் படைக்கும் கா.சி. தமிழ்க்குமரன் என்ற மூத்த எழுத்தாளர் ஒருவர் எனக்கு அவருடைய நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் ஒரு நாவலையும் கூடவே கவிப்பேரரசு வைரமுத்துவின் கருவாச்சி காவியத்தையும் அண்மையில் இந்தியாவிலிருந்து எனக்கு அனுப்பி வைத்தார். இந்த 06 புத்தகங்களடங்கிய பொதியைக் கண்ட நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவ்வப்போதைய ஓய்வு நேரங்களில் இவ்வகையான நூல்களின் வாசிப்பே எனக்கு மிகுந்த ஆறுதலைத் தருகின்றது என்ற உண்மையையும் இங்கு பதிவு செய்யத்தான் வேண்டும்.


உங்களது படைப்புகளுக்குக் கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?

நான் கதைகளை எழுதி முடிந்தவுடனே எனது நண்பியும் படைப்பாளியுமான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு அனுப்பி வைப்பேன். ரிஸ்னா சுடச்சுடவே கதைக்கான விமர்சனங்களைச் சொல்வார். அத்தோடு எனது புத்தக வெளியீடுகள் பலவற்றில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் பலரும், எனது பல படைப்புகளைப்பற்றி கருத்துக்களைச் சொல்லும் போது சிலாகித்துப் பேசினார்கள். இப்படி எனது படைப்புகளுக்குக் கிடைத்த விமர்சனங்கள் எல்லாம் என்னை உற்சாகமூட்டும் டொனிக்காக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்துடன் எனது ஆக்கங்கள், நூல் விமர்சனங்கள் போன்றவை பலரையும் கவர்ந்திருக்கிறது. அப்படி அவர்களைக் கவர்ந்ததால்தான் மூத்த எழுத்தாளர்களும் இளந்தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் அவர்களது நூல்களை எனக்கு விமர்சனம் எழுதுவதற்காக அனுப்பி வைக்கின்றார்கள். அவர்களது நூல்களுக்கு நான் எழுதிய நூல் விமர்சனங்களைப் பார்த்துவிட்டு அவர்கள் திருப்தியடைகிறார்கள். எனது இரசனைக் குறிப்பு தொடர்பாக அவர்களது மகிழ்ச்சியை எனக்கு தெரியப்படுத்துகிறார்கள்.


முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தில் ஓர் அங்கத்தவராக இருந்திருக்கின்றீர்கள். இந்த அமைப்பு ஈழத்து இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய அதிர்வுதான் என்ன?

திரு நீர்வை பொன்னையன் அவர்களைத் தலைவராகக் கொண்டு செயல்பட்ட ஒரு இலக்கிய அமைப்பே முற்போக்கு கலை இலக்கிய மன்றமாகும். இந்த இலக்கிய அமைப்பில் 2007 ஆம் வருடம் மறைந்த கவிஞர் ஏ. இக்பால் அவர்களே என்னை அங்கத்தவராகச் சேர்த்துவிட்டார். இந்த மன்றத்தில் மறைந்த ஆளுமையாளர்களான ஜனாப் ஏ. முகம்மது சமீம், தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் திரு சிவா சுப்ரமணியம், திரு. பாலசிங்கம், கவிஞர் ஏ. இக்பால், திரு. கே. ராசரத்னம், திரு. கே. சோம சுந்தரம் போன்றவர்களுடன் வாழும் ஆளுமையாளர்களான திரு கே. சிவபுத்திரன், திரு வீ. கருணைநாதன், திருமதி சுமதி குகதாசன், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோருடன் நானும் அங்கத்துவம் வகித்திருந்தோம். 

இலக்கியத் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்த மறைந்த முற்போக்கு எழுத்தாளர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கான நினைவுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, அவர்களை கௌரவிப்பதில் இம்மன்றம் முன்நின்று செயற்பட்டது. அதேபோன்று இலக்கிய நூல் வெளியீடுகள், அறிமுக விழாக்கள் போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்ததோடு கருத்தாழமிக்க திரைப்படங்களையும் இம்மன்றம் அவ்வப்போது திரையிட்டது. இலக்கிய ரீதியான செயல்பாடுகளில் என்றும் முன்னணியாக செயல்பட்ட இம்மன்றத்தின் மூலமே 2010 ஆம் ஆண்டில் 'தென்றலின் வேகம்' என்ற எனது முதலாவது கவிதை நூலும் வெளிவந்தது என்பதையும்  நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.


நேர்கண்டவர்:- கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான்


2024.12.29 தமிழன் பத்திரிகையுடன் வெளிவரும் இணைப்பிதழான தமிழ் முரசு இதழில் எனது அட்டைப் படம் தாங்கியதாக வெளிவந்த நேர்காணல்

தெற்கில் விளைந்த விலைமதிக்க முடியாத இலக்கிய முத்து

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


தமிழ் முரசு இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர். இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், விமர்சகர்,  சஞ்சிகையாசிரியர்  மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.


பன்னூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்களுடனான சிறப்பு நேர்காணல்

நேர்கண்டவர்:- கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்? உங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?


தென் மாகாணத்தில் அமைந்துள்ள வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் குடும்பத்தின் மூத்த பிள்ளை. எனது தந்தை ஏ.எச். முஹம்மத், தாயார் காலஞ்சென்ற எம்.ரீ.எப். லரீபா ஆவர். வெலிகம அறபா தேசிய பாடசாலையில் தரம் ஒன்றில் சேர்ந்து இரண்டு மாதங்கள் கற்ற பின்னர் மீண்டும் தரம் ஒன்றிலேயே வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் சேர்ந்து உயர் தரம் வரையும் கல்வி கற்றேன். தொழில் ரீதியாக தனியார் நிறுவனத்தில் கணக்கீட்டுத் துறையில் பணி புரிந்துகொண்டே, கணக்கீட்டுப் பாடத்தைப் பிரத்தியேகமாக கற்பித்த அனுபவத்தையும் பெற்றுக்கொண்டேன். அத்துடன் இலக்கியத் துறையில் மிகுந்த ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றேன். எனது ஓய்வு நேரங்களில் பெரும் பகுதியை இலக்கியத் துறைக்காகவே அர்ப்பணித்துள்ளேன்.


கணக்கீடு, எழுத்து ஆகிய இருவேறுபட்ட துறைகள் உங்களை எப்படி வசப்படுத்தின?

தரம் ஒன்பது கற்கும் காலத்தில் வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் என்ற பாடம் எனக்கு அறிமுகமாகியது. இந்தப் பாடத்தில் எனக்கு கணக்கீட்டுப் பகுதி மிகவும் பிடித்துப் போனது. வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் எனக்குக் கற்பித்த ஆசிரியர்களையே இதற்குக் காரணமாகக் கூறலாம். இந்த இடத்தில் எனக்குக் கணக்கீட்டுக் கல்வியைக் கற்பித்த ஆசிரியர்களான ஜனாப். எம்.வை.எம். புகாரி, திருமதி. எம்.எச்.எஸ். ஆசியா, ஜனாப். எம்.ஏ.எம். ரூமி, ஜனாப். எம்.வை.எம். இக்ரான், திரு. ஐ.பீ. சதாரூபன், திரு. வீ. சரவணபவன், திரு. ஜீ. ஜெயசீலன் ஆகியோரை மனம் நிறைந்த நன்றிகளோடு இப்போதும் நினைத்துக்கொள்கிறேன். உயர் தரத்தை வணிகப் பிரிவில் கற்றதனால் கணக்கீட்டை ஒரு முக்கியமான பாடமாகக் கற்றேன். உயர் தரத்துக்குப் பின்னரும் ஐஏபீ மற்றும் ஏஏரீ ஆகிய கற்றை நெறிகளை விரும்பிக் கற்றேன். பின்னர் இத்துறையில் எனது தொழிலையும் அமைத்துக்கொண்டேன். அத்துடன் கணக்கீட்டுப் பாடத்தை சாதாரண தர மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் கற்பித்த அனுபவமும் எனக்கு இருக்கிறது.

அதேபோல எனக்கு பாலர் வகுப்பில் கல்வி கற்பித்த ஆசிரியையான திருமதி. எப்.ஐ.எம். இப்றாஹீம் என்று அழைக்கப்பட்ட காலஞ்சென்ற பௌசுல் இனாயா இப்றாஹீம் ஆசிரியை அவர்களே தமிழ் பாடத்தை சிறப்பாகக் கற்பித்தார். அகரம் கற்பித்த இந்த ஆசிரியையை இப்போதும் மிகுந்த அன்போடு நினைவுகூர்ந்து பிரார்த்தித்துக் கொள்கின்றேன். இத்தோடு எனக்கு ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ்ப் பாடத்தை சிறப்பாகக் கற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள் எப்போதும் உண்டு. எனக்கு இலக்கிய உலகை அறிமுகப்படுத்தி, தனது சிறுகதையை வாசித்துக் காட்டிய எனது மாமா, தேசிய கல்வி நிறுவக முன்னாள் செயற்திட்ட அதிகாரியும் எழுத்தாளருமான காலஞ்சென்ற திக்குவல்லை எஸ்.ஐ.எம். ஹம்ஸா அவர்களும் ஒரு முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார். அவ்வப்போது சிறந்த ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து தந்த திக்குவல்லை ஸப்வான் அவர்களையும் நான் இந்த இடத்தில் நன்றியோடு நினைத்துக்கொள்கின்றேன். இந்த ஸப்வான் ஆசிரியரே இலக்கிய உலகுக்கு 2004 ஆம் ஆண்டில் செந்தூரம் இதழ் மூலமாக என்னை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தார்.


உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

1998 இல் பாடசாலையில் கற்கும் காலங்களிலேயே சூரியன், சக்தி ஆகிய தனியார் வானொலி நிகழ்ச்சிகளுக்கு எனது ஆக்கங்களை அனுப்பியுள்ளேன். அவை ஒலிபரப்பாகும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். 2004 இல் தினமுரசு பத்திரிகையில் நிர்மூலம் என்ற எனது சிறிய கவிதையை எழுதியதிலிருந்தே தீவிரமாக எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து தேசியப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறேன். இவ்வாறு களப்படுத்திய எனது படைப்புகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் சுமார் ஆயிரத்தையும் தாண்டியதாக இருக்கும். இவற்றில் பெரும்பகுதி எனது சேமிப்பில் கைவசம் உள்ளது.


உங்களது பால்யத்தின் நாட்களுக்கும் உங்களது எழுத்துகளுக்கும் எவ்வளவு தொடர்புகள் இருக்கிறது?

தரம் எட்டு படிக்கும் காலத்திலேயே வாசிப்பின் மீது ஒருவகையான ஈர்ப்பு என்னிடம் இருந்தது. இதற்குக் காரணம் வரக்காப்பொலயைச் சேர்ந்த அக்ரம் ஜுனைட் என்ற ஆசிரியர்தான். அவர் எமது பாடசாலையின் அல் ஹிக்மா வாசிகசாலையிலிருந்து வாரா வாரம் புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்க வேண்டும் என்று கூறினார். மட்டுமல்லாமல் வாசிகசாலையின் முகப்புச் சுவரில் ஓர் அறிவித்தல் பலகையைத் தொங்க வைத்திருந்தார். அதில் ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் பல்வேறு வகையான ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்படும். எமது வகுப்பு மாணவர்களது ஆக்கங்களும் அதில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறி அவர் எங்களை உற்சாகப்படுத்தினார். அந்த ஊக்குவிப்பின் காரணமாகவே மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று ஆக்கங்களை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. இப்படி எழுதிக்கொண்டு போன ஆக்கங்களை காட்சிப் பலகையில் காணும் போது உள்ளம் மகிழ்ச்சியில் குதூகலிக்கும். எனவே பாடசாலைக் காலத்திலேயே எனக்கு வாசிப்புப் பழக்கமும் எழுத்துப் பழக்கமும் ஏற்பட்டது.


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கணக்கீடு, கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் படைப்பு, ஆய்வு ஆகிய துறைகளில் இதுவரை 15 நூல்களை வெளியிட்டுள்ளேன். இதில் கடைசியாக வெளிவந்த நூலே எனது 'பிஞ்சு மனம்' என்ற சிறுகதைத் தொகுதியாகும். எனது இந்த நூல்களை பின்வருமாறு பட்டியல் படுத்திக் குறிப்பிடலாம்.


01. வங்கிக் கணக்கிணக்கக் கூற்று (கணக்கீடு) 2004

02. கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) 2008

03. கணக்கீட்டின் தெளிவு (கணக்கீடு) 2009

04. தென்றலின் வேகம் (கவிதை) 2010

05. ஆடம்பரக்கூடு (சிறுவர் கதை) 2012

06. என்ன கொடுப்போம் (சிறுவர் கதை) 2012

07. பாடல் கேட்ட குமார் (சிறுவர் கதை) 2013

08. இதுதான் சரியான வழி (சிறுவர் கதை) 2013

09. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்) 2013

10. வண்ணாத்திப் பூச்சி (சிறுவர் பாடல்) 2014

11. அறுவடைகள் (விமர்சனம்) 2015

12. எரிந்த சிறகுகள் (கவிதை) 2015

13. விடியல் (ஆய்வு) 2017

14. எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம் (ஆவணம்) 2021

15. பிஞ்சு மனம் (சிறுகதை) 2024


சிறுகதைகள் மீதான ஆர்வம் எப்போது இருந்து ஆரம்பித்தது?

பொதுவாக பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்து ஆரம்பித்தது என்றுதான் சொல்ல முடியும். பின்நாட்களில் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்ற போது சிலரது சிறுகதை நூல்கள் பற்றியும் கலந்துரையாடல்கள் நடக்கும். அங்கு சிலாகிக்கப்பட்டு பேசப்பட்ட நூல்களை நான் எப்படியாவது பெற்று வாசித்து விடுவேன். சிறுகதைகள் பலவற்றை பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வாசிப்பேன். சிறுகதைகளில் ஆர்வம் ஏற்பட்ட போது மூத்த எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிறுகதை நூல்களை வாங்கி வாசிப்பேன்.

சிறுகதை வாசிப்பினால் ஏற்பட்ட ஒரு வகையான அருட்டுணர்வின் காரணமாகவே நான் சிறுகதைகளை எழுதினேன். இப்படி எழுதிய சிறுககைளை பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும் அனுப்பி வைத்தேன். அவை பிரசுரமாகின. நான் எழுதிய ஒரு சில சிறுகதைகளை போட்டிகளுக்கும் அனுப்பி வைத்தேன். அவற்றுள் முக்கியமாக ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை தேசிய ரீதியாக நடாத்தும் அமரர் செம்பியன் செல்வன் (ஆ. இராஜகோபால்) ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த சிறுகதைப் போட்டி, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இரத்மலானை பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த சிறுகதைப் போட்டி, தென் மாகாண கலாசார மற்றும் கலை விவகார அமைச்சு ஏற்பாடு செய்த திறந்த சிறுகதைப் போட்டி, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தேசிய ரீதியாக நடத்திய வியர்வையின் ஓவியம் - உழைக்கும் மக்கள் கலை விழா சிறுகதைப் போட்டி போன்றவற்றுக்கு எனது சிறுகதைகளை அனுப்பி வைத்தேன். அவற்றுக்கு முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் என்றும் ஆறுதல் பரிசுகளும் கிடைத்துள்ளன.

மட்டுமல்லாமல் 2024 நன்னூல் பதிப்பகத்தால் சர்வதேச ரீதியாக நடாத்தப்பட்ட பன்னூலாசிரியர், எழுத்தாளர் டாக்டர் ஹிமானா சையத் நினைவு சிறுகதைப் போட்டியில் எனது 'இறையச்சம்' என்ற சிறுகதைக்காக இரண்டாம் இடமும் 7,500 ரூபா இந்தியப் பணப் பரிசும் கிடைத்தமை மிகுந்த மனநிறைவைத் தருகிறது. எனவே எனது எழுத்துக்களுக்கு ஓர் அங்கீகாரம் இருப்பதாய் உணர முடிந்தது. இதுவே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவலை என்னுள் விதைத்தது. மட்டுமல்லாமல் சிறுகதை நூல் வெளியிட வேண்டும் என்ற உந்துதலையும் தந்தது.


முதல் சிறுகதை எப்போது வெளியானது? அந்த நேரத்தில் எப்படிப்பட்ட மனநிலை இருந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிட அதுவே உந்துதலாக அமைந்ததா?

நான் எழுதிய சிறுகதைகள் பலவற்றில் 'மனிதம் வாழும்' என்ற தலைப்பில் அமைந்த எனது சிறுகதையே 2013.10.10 இல் விடிவெள்ளி பத்திரிகையில் முதன் முதலாகப் பிரசுரமானது. பிரசுரமான சிறுகதையின் பத்திரிகைப் பக்கத்தைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த உற்சாகத்தோடு அவ்வப்போது சிறுகதைகளையும் எழுதி வந்தேன். தொடர்ந்து எழுதிய கதைகளில் ஒரு சில ஏனைய தேசியப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. நான் எழுதிய இன்னும் சில கதைகளை சிறுகதைப் போட்டிகளுக்கு அனுப்பி வைத்தேன். அவற்றுக்கு பரிசுகளும் கிடைத்துள்ளன. எனது கதைகளுக்குக் கிடைத்த பாராட்டுகள், சான்றிதழ்கள், பணப் பரிசுகள் எல்லாம் எனக்கு மேலும் பல கதைகளை எழுத வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது.


உங்கள் சிறுகதைகளில் யதார்த்தமான விடயங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. யதார்த்தம் படைப்பாகின்ற போதுதான் அது முழுமையாகின்றது என்று எண்ணுகின்றீர்களா?

ஆம் நிச்சயமாக. யதார்த்தத்தைப் பிரதிபலிக்காத எந்தவொரு இலக்கியமுமே முழுமை அடைவதில்லை. சிறுகதைகளின் முக்கியமான பண்புகளில் ஒன்றாக அமைவது, தான் சார்ந்த சமூகத்தை அது பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்பதுதான். நான் பார்த்த, நான் கேள்வியுற்ற, ஏதோ ஒரு வகையில் என்னைப் பாதித்த சம்பவங்களையே கதை வடிவில் வெளிக்கொண்டு வருகின்றேன். எனது 'பிஞ்சு மனம்' என்ற கன்னிச் சிறுகதைத் தொகுதியை வாசிப்பதனூடாக இதனைப் புரிந்துகொள்ளலாம்.


பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஆண் சமூகத்திலிருந்து மட்டுமே வருகிறது என்று சொல்ல முடியுமா?

ஒட்டுமொத்தமாக அவ்வாறு கூறிவிட முடியாது. சில பல காரணங்கள் இவ்விடத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. திருமணத்தின் பின்னரான வாழ்வில் இலக்கியத்தில் கூட நிலைத்து நிற்பவர்கள் சொற்பமே. ஒடுக்குமுறை என்று இல்லாவிட்டாலும் தம்மீது சுமத்தப்படுகின்ற பொறுப்புகளைத் தவறவிடாமல் தம்மை வருத்திக் கொள்பவர்களும் உண்டு. அல்லாமல் மாமியார் மருமகள் பிரச்சினை பற்றியும் இவ்விடத்தில் கோடிட்டுக் காட்டுவது பொருத்தமாக அமையும். கணவரும் அவரது குடும்பத்தாரும் ஒரு பெண்ணின் மீது எதிர்பார்க்கும் விடயங்கள் சில வேலைகளில் ஒடுக்கு முறையாகவே காணப்படுகின்றது. மட்டுமின்றி வேலைக்குச் செல்லும் பெண்கள் தமது உயர் அதிகாரிகளாலும் (ஆண் அல்லது பெண்) ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறார்கள். பெண்களால் ஒடுக்கப்படும் வீட்டுப் பணிப் பெண்கள் கூட சில வேளைகளில் இவ்வாறான அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். சூழ்நிலைகளே இவற்றுக்குக் காரணமாக அமைகின்றன என்பது எனது கணிப்பு. எனவே ஆணாதிக்கம் மட்டுமே, பெண்கள் மீதான ஒடுக்கு முறைக்குக் காரணம் என்று கூற முடியாது. 


இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எனது இலக்கியப் பயணத்தில் எனது வெற்றிகளுக்கு உதவிய அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை நான் இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன். விசேடமாக எனது நூல் வெளியீடுகளின் போது முதற்பிரதிகளை வாங்கியவர்கள், சிறப்புப் பிரதிகளை வாங்கியவர்கள், எனது படைப்புகளுக்கான இரசனைக் குறிப்புகளை எழுதித் தந்தவர்கள், எனது படைப்புகளைக் களப்படுத்திய ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகைகளின் பிரதம, துணையாசிரியர்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையங்களில் என்னை நேர்காணல் செய்தவர்கள், சஞ்சிகைகளில் எனது அட்டைப் படத்தைப் பிரசுரித்து என்னைப் பற்றிய ஆக்கத்தையும் எனது நேர்காணலையும் பிரசுரித்த சஞ்சிகையாசிரியர்கள் போன்ற எல்லோருக்கும் பொதுவாகவே எனது நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன். அவர்களது பெயர்கள் விடுபடக் கூடாது என்பதற்காக அந்தப் பெரிய பெயர்ப் பட்டியலை நான் இங்கு முன்வைக்க விரும்பவில்லை.

அத்துடன் எனது இந்த நேர்காணலை நடத்திய கிண்ணியாவை சேர்ந்த மூத்த ஆளுமையாளர், கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸுக்கும், தமிழன் பத்திரிகையின் தமிழ் முரசுக்கும் நன்றி!!!


நேர்கண்டவர்:- கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா

Tuesday, October 15, 2024

தெற்கின் இலக்கியப் பொற்சித்திரம், பன்முகப் பெண் ஆளுமை வெலிகம ரிம்ஸா முஹம்மத்

தெற்கின் இலக்கியப் பொற்சித்திரம், பன்முகப் பெண் ஆளுமை வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கனல் கவி, கவிமணி அப்துல் றஸாக் சேகுதாவூத் 

கோட்டக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை),

ஏறாவூர்.



தென் மாகாணம், மாத்தறை மாவட்டம், வெலிகம தேர்தல் தொகுதி வழங்கிய வியப்பிற்குரிய பெண்மணி, மாங்காய் வடிவ தேசத்தின் இலக்கிய மகோன்னதம் "வெலிகம ரிம்ஸா முஹம்மத்" அம்மணி அவர்களின் ஆற்றல்கள் ஆலமரமாய் விரித்து பரந்து இருக்க அறிமுகம் எதற்கு இந்த இலக்கியப் பெருந்தகையாளருக்கு என்பதே என் முடிவு.

பேராற்றல் நிறைந்த பெண்மையை - இலக்கியவாதி, எழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர், சிறந்த நூல்கள் விமர்சகி, ஆய்வாளர், சிறுவர் படைப்பாளி, நேர்காணல்களிலோ நேர்த்தியானவர், பன்னூலாசிரியர், உன்னத ஊடகவியலாளினி, சஞ்சிகையாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் இப்படிப் பல முகங்களைக் கொண்டவரை எப்படி விழிப்பேன்? இத்தனை செயற்பாடுகளில் கோலோச்சும் இவரை, அத்துணை ஆற்றல் நிறை செயற்பாட்டுத் திறனாளியை எப்படி விழிப்பேன்? 


நான் சொல்வதெல்லாம் உண்மை, பொய்யுமில்லை, புனைவுமில்லை. தலைக்கனமில்லாத பல்லாளுமை, அனைத்துப் படைப்புகளிலும் இவரது சொல்லாளுமை கண்டு சொக்கிப் போனேன். சறுக்கல்களும் கிறுக்கல்களும் இல்லாத சுயம் கொண்ட சரிதங்கள், இயலுமையின் இயங்கு சக்தியினூடான இலக்கியத் தட(ய)ங்களும் சொற் செதுக்கல்களும், பல்லாளுமை வெளிப்பாடுகளும் இருபத்தியாறு வருடங்கள் கடந்தும் முடிவிலியாய்த் தொடர்கின்றது.

"வெலிகம ரிம்ஸா" என்ற பெண் குயில், சொந்தக் குரலிலும் பாடுகின்றது, வெலிகம கவிக்குயில், நிலாக்குயில், கவித் தென்றல், ஆர்.எம். ஆகிய புனைப் பெயர்களிலும் கூவுகின்றது. இவரது இலக்கியச் சிந்தனைகள், இவரது பாடுபொருள் கொண்ட கவிதைகள் இலங்கையில் என்றென்றும் பேசுபொருள்தான் என்பதில் ஐயமில்லை.

வெலிகம அறபா தேசிய பாடசாலை மற்றும் வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியான இவரது பாடசாலை ஆரம்பக் காலம் முதலே சூரிய, சக்தி அலைகளிலே (1998 இல்) ஆக்கங்கள் தவழ்ந்திருக்கின்றன. தினமுரசு வாரந்தரி கவி வரிகள் "நிர்மூலம்", (2004 இல்) மூலம் கொடுத்தது முதல் முகவரி. இன்று 300 கவிப் பாக்கள் தாண்டிப் பாடி நிற்கின்றது, மலையருவியாய்ப் பாய்ந்து கொட்டுகின்றது கவிதைப் பெருநதி.


ரிம்ஸா முஹம்மத் தனது படைப்புக்களுக்காக இணையத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றார். அதிலும் குறிப்பாக தனது பல்வேறு வகையான படைப்புகளுக்காக வென்றே ஒவ்வொரு துறைக்குமாக வெவ்வேறு ஆறு புளக்ஸ்பொட் (வலைப் பூக்கள்) வைத்து மிகுந்த அர்ப்பணிப்போடு இயங்(க்)கிக் கொண்டிருக்கின்றார்.

பன்முக ஆளுமைவாதி ரிம்ஸா முஹம்மத் அவர்களின் அடைவுகளில் என்னால் ஆழ்ந்த பார்வைக்குள், பாடசாலைப் பாடநூல் எழுத்தாக்கக் குழுவில் இடம்பெற்றிருப்பதும், இஸ்லாமியப் பாட நூல் மொழிப் பதிப்பு மற்றும் ஒப்பு நோக்குதலிலும் பங்களிப்பு வழங்கியிருப்பதும் அகப்பட்டுக் கொண்டது என்பேன். இது ஒரு தேசியத்திற்கான பங்குபற்றல் அல்லவா. இவருடைய சில படைப்புகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, சிங்கள மொழி ஊடகங்களிலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவரது அடுத்த விசேட தன்மையாக என்னைக் கவர்ந்த விடயம், கல்வி ரீதியாகத் தன்னை மேம்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டுக் கணக்கீட்டுத் துறைக்குள் AAT, IAB கற்கைகளைப் பூரணப்படுத்திய அதேநேரம், அதே துறைக்குள் "வங்கிக் கணக்கிணக்கக் கூற்று" (2004), "கணக்கீட்டுச் சுருக்கம்" (2008), "கணக்கீட்டின் தெளிவு" (2009) ஆகிய மூன்று நூல்களை வெளியீடு செய்தது மட்டுமல்லாது "அடிப்படைக் கணக்கீடு" என்ற நூல் அச்சேறு நிலையில் உள்ளது என்று அறியக் கிடைக்கின்ற போது விழிகள் அகல ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. நானறிந்த வரையில் வேறு கணக்காளர்களோ, கணக்கியலாளர்களோ, கணக்காய்வாளர்களோ இவ்வாறு நான்கு நூல்களின் வெளியிட்டு எழுத்தர்களாக இருக்க முடியும் என்று நினைக்கவில்லை.


கற்கைகளைப் பூர்த்தி செய்வதில் பூரணாதியான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல்துறை டிப்ளோமா (2013) கற்கை நெறியினைப் பூர்த்தி செய்துள்ளார். பிரதான ஊடகப் பங்காற்றுபவராக இருந்து வருவதையும் அவதானிக்கலாம். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபான முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்பட்டு வந்த - மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிகளுக்கு பிரதிகளைத் தயாரித்தல், குரல் கொடுத்தல் (2004 - 2005 காலப்பகுதி), பிரபலமான தமிழ் ஊடகங்களில் கவிதை வாசிப்பு, கவியரங்கப் பங்கேற்பு என்று நீள்கையில், பதினேழுக்கு மேற்பட்ட இலங்கையின் பிரபலமான தேசிய முன்னோடி நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகள் என்பவற்றிலும், இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட இலங்கை, இந்திய மற்றும் இணையவழி சஞ்சிகைகளிலும், இருபத்து ஆறைத் தாண்டியதான இணையத் தளங்களிலும், ஏழிற்கு மேற்பட்ட சர்வதேச வானொலிகளிலும் இவரது ஆக்கங்கள் மற்றும் இவருடனான நேர்காணல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன என்று வரலாற்று ரீதியான தடயப் பதிப்பை, தனது பெறுமான வீரியத்தை இமாலயச் சாதனையாக உயர்த்தி நிற்பதில் வேறு எவர் ஒருவரையும் என்னால் ஒப்பீட்டிற்கு நிறுத்த முடியவில்லை.



கவிதைகள், மெல்லிசைப் பாடல்கள், நூல் விமர்சனங்கள், சிறுவர் கதை, சிறுவர் பாடல், ஆவணம், கணக்கீடு என 14 நூல்களையும் வெளியீடு செய்து, மேலும் ஆறு நூல்களை வெளியீடு செய்யும் நிலையில் உள்ள படைப்பாளியை "சோர்விலாச் சொற்களின் சேயிழை" என அழைப்பதில் பொருத்தம் காண்கின்றேன். இவரது படைப்புகள் யாவுமே தனித்தனியாக வெவ்வேறு உட் பொருட்களைக் காட்டி நிற்கின்றன. பரிமாணங்கள் பலதாக, முக்காலப் பொருத்தக் கருத்தியலாக அவதானிக்க முடிகின்றது. பல்வேறு வகையான சிரமங்களுக்கு மத்தியிலும் இவர் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு, 2010 ஆம் ஆண்டிலிருந்து காலாண்டிதழாக பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையை, இவரது தோழி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுடன் சேர்ந்து தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார். இதுவரை 38 இதழ்கள் வரை வெளிவந்த பூங்காவனம் இதழ்கள் இலக்கியச் சோலைக்குள் நறுமணம் பரப்பி நிற்கின்றது. இவர்கள் 12 வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்த பூங்காவனம் சஞ்சிகை பற்றிய ஆய்வை தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவியான சரிப்தீன் சரீபா பீவி (அநுராதபுரம்) தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்டார். பின்னர் இந்த ஆய்வை "இலங்கைத் தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில் 'பூங்காவனம்' (கலை இலக்கிய சமூக சஞ்சிகை) - ஒரு மதிப்பீடு" என்ற தலைப்பில் நூலாகவும் வெளியிட்டார். 


அதேபோல தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவியான சுமையா சரீப்தீன் (தர்காநகர்) தமது பட்டப்படிப்பை பூரணப்படுத்துவதற்காக தென்னிலங்கைத் தமிழ்க் கவிதைகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வில் தென்னிலங்கைப் படைப்பாளியான ரிம்ஸா முஹம்மதின் கவிதைப் படைப்புகள் பற்றியும் சிறப்பாக நோக்கப்பட்டுள்ளது. சுமையா சரீப்தீன், தான் மேற்கொண்ட ஆய்வை "தென்னிலங்கைத் தமிழ்க் கவிதைகள்" என்ற தலைப்பில் 2021 இல் நூலாக வெளியீடு செய்துள்ளார். எனவே பல்கலைக்கழக மட்டத்திலும் இவருடைய இலக்கிய பங்களிப்புகள் கவனிப்பு பெற்றது என்பதில் மகிழ்ச்சியடையலாம்.

இதழ்கள், சிறப்பிதழ்கள், பத்திரிகைகள், எழுத்தாளர் அமைப்புகள் வெளியிட்ட நூல்கள், ஆய்வு நூல்கள், காற்றுவெளி இணைய இதழ், முத்துக்கமலம் இணையம், விக்கிப்பீடியா வலைத்தளம் என்பன இவரைப் பற்றி பல வகைமைக் குறிப்புகளையும், புகைப்படங்களையும் வெளியிட்டு கௌரவிப்புக் கொடுத்த பெருமை, கவிப் பெருந்தகையின் பேறாகும். அவைக்கும் பெருமையாகும். இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள இருபத்தைந்திற்கும் மேற்பட்ட அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் இவரை நேர்காணல்கள் செய்துள்ளன. இதன்மூலம் இவரது ஆளுமை, ஆற்றல், நடத்தைசார் கோலங்களின் விருத்தியின் உயர்ச்சியை உணரலாம்.

ரிம்ஸா முஹம்மதின் படைப்புகளின் கருத்துப் பொதிவின் கனதிக்காகவும், வெளிப்படுத்தல் திறனுக்காகவும் பன்னிரண்டிற்கு மேற்பட்ட பிற அமைப்புகளின் தொகுப்பு நூல்கள் இவரது ஆக்கங்களை உள்வாங்கி வெளியீடு செய்திருப்பதன் அடிப்படையில் அந்த நூல்கள் பெருமை தேடிக் கொண்டுள்ளன என்றே கூற முடியும். இவரது ஒட்டுமொத்த இயங்காற்றல் திறன்களுக்காகவும், சான்றுப் பத்திரங்கள், பாராட்டுப் பத்திரங்கள், பண முடிப்புகள், பொன்னாடைகள் ஆகியவற்றுடன் சாமஸ்ரீ கலாபதி, காவிய பிரதீப (கவிச்சுடர்), கலாபிமானி, கலைமதி, கவித்தாரகை ஆகிய பட்டங்களையும், விருதுகளையும் மற்றும் மகளிர் விருது, வெற்றியாளர் விருது போன்றவற்றையும் இவர் பெற்றுள்ளார். மூத்த இலக்கிய ஆளுமையாளரான பன்னூலாசிரியர், கவிஞர் மூதூர் முகைதீன் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்கள் தனது 08 ஆவது நூல் வெளியீடான "கனாக் கண்டேன்" எனும் இசைப் பாடல்கள் நூலை இவருக்கே சமர்ப்பணம் செய்துள்ளார். இது இவருக்குக் கிடைத்த விருதுகளையும் மிஞ்சிய கௌரவமாகும்.

நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் வாழ்த்துரைகள், நயவுரைகள், நூல் விமர்சனவுரைகள், நூல் ஆய்வுரைகள், சிறப்புரைகள், கருத்துரைகள், நினைவேந்தலுரைகள் என்பனவும் இவரது இலக்கிய இயங்கலுக்கும், துலங்கலுக்கும், புலமைக்கும் கிடைத்த சான்றுகளாகும்.

இந்த முற்போக்குப் பெண்ணியவாதியின் அமைப்பு ரீதியான அங்கத்துவம் பற்றி பேசுகின்றபோது பூங்காவனம் இலக்கிய வட்டத் தலைவராக செயற்படும் அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணி, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் என்பவற்றிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக நடைபெற்ற கவிதை, சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி தனது படைப்புகளுக்காக பல பரிசில்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், பணப் பரிசுகளையும் இவர் பெற்றுள்ளார். இந்தியா, தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த எழுத்தாளர், டாக்டர் ஹிமானா செய்யத் நினைவாக நன்னூல் பதிப்பகம் இணைந்து சர்வதேச ரீதியாக நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவர் இரண்டாம் பரிசு பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலக்கியச் சூரியன் ரிம்ஸா முஹம்மத் அவர்கள் தனது இருபத்தியாறு (1998 - 2024) வருடங்களைத் தொட்டுக் காட்டுகின்ற இலக்கிய அடையாளத்தின் ஆதராமாக இதுவரை பின்வரும் 14 நூல்களை வெளியிட்டுள்ளார். 


01. வங்கிக் கணக்கிணக்கக் கூற்று (கணக்கீடு) 2004

02. கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) 2008 

03. கணக்கீட்டின் தெளிவு (கணக்கீடு) 2009 

04. தென்றலின் வேகம் (கவிதை) 2010 

05. ஆடம்பரக் கூடு (சிறுவர் கதை) 2012 

06. என்ன கொடுப்போம்? (சிறுவர் கதை) 2012 

07. பாடல் கேட்ட குமார் (சிறுவர் கதை) 2013 

08. இதுதான் சரியான வழி (சிறுவர் கதை) 2013 

09. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்) 2013 

10. வண்ணாத்திப் பூச்சி (சிறுவர் பாடல்) 2014 

11. அறுவடைகள் (விமர்சனம்) 2015 

12. எரிந்த சிறகுகள் (கவிதை) 2015 

13. விடியல் (ஆய்வு) 2017 

14. எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம் (ஆவணம்) 2021 


இந்த 14 நூல்களுக்குள் "தென்றலின் வேகம்", "எரிந்த சிறகுகள்" என்ற தலைப்பில் அமைந்த இரண்டு கவிதைத் தொகுதிகளும் உள்ளடங்கும். இவ்விரண்டு கவிதைத் தொகுதிகளோடும் நான் உறவாடிய போது, காதல் உணர்வுகள் களி நடனம் புரிந்திருப்பதை உணர்ந்து கொண்டாலும், உலக வாழ்வியலாடு தொடர்புபட்ட பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதும் உருவகப்படுத்தப்பட்டிருப்பதையும் உணராமல் போவேனா.

2010 ஆம் ஆண்டில் வெளிவந்த "தென்றலின் வேகம்" ரிம்ஸா முஹம்மத் அவர்களின் கன்னிக் கவிதைத் தொகுப்பாகும். தென்றலின் வேகம் என்ற அழகான இலக்கணப் பிழைக்குள் இதமான கவிதைகளைப் படைத்துத் தொகுத்துள்ளார் "கவித்தையல்" அவர்கள். தென்றலுக்கு வேகமில்லாவிட்டாலும் கவிதைகள் புயல் வேகம் கொண்டதுதானே.


"தென்றலின் வேகம்" கவிதை நூலில் பக்கம் 36 இல் இடம்பிடித்துள்ள புத்தகக் கருவூலம் அழகான சொல்லாட்சி நிறைந்த கவிதையாகும். நூலகம் ஒன்றைக் கருவூலத்திற்கு ஒப்பிட்டு, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்தான் உலகை ஆழ்கின்றது என்ற உண்மையை வரிகளால் விரிவடையச் செய்துள்ளார் கவிஞர். வித்தகக் கோட்டம், புத்தகத் தோட்டம் என்ற இவரது சொற் புலர்வு என்னை மிகவும் ஆட்கொண்டது. வித்தகம் என்பது கல்வி, கலைகள், ஞானம் அனைத்தையும் உள்ளடக்கியது. தோட்டம் என்பது பல பூவினம், பயிர்கள், செடிகள், கொடிகளின் வாழ்விடம். இவ்வாறானதுதான் "புத்தகக் கருவூலம்" என்கிறார் கவிஞர். இந்தச் சித்தரிப்பு அழகு தருகிறது.


விஞ்ஞானப் புதுமையும்

விண்ணுலகப் பெருமையும்

விளக்கும்

வித்தகக் கோட்டம் அது 


மெய்ஞ்ஞான்றும் விளக்கேற்றி

எல்லார்க்கும் ஒளியூட்டும்

புத்தகத் தோட்டமும் அது


பக்கம் 54 இல் "நியாயமா சொல்?" என்ற தலைப்பில் அழகான காதல் ரசம் சொட்டும் கவிதை ஒன்று இடம்பிடித்துள்ளது.


நியாயமா சொல் 

நியாயமாகச் சொல்

நிலவும் வானும் பள்ளி கொள்ளும் 

ஒரு அமாவசை நேரத்தில்

உன் நினைவுகள் துள்ளி வந்து

கொள்ளை இன்பம் தந்து

என் நித்திரையைக் கெடுப்பது

என்ன நியாயம்?


"நிலவும் வானும் பள்ளி கொள்ளும் ஒரு அமாவாசை நேரத்தில்" மிதமிஞ்சிய கற்பனை இரசனை இந்த வரிகளுக்குள் ஒழிந்திருக்கிறது. ஆம் பள்ளி கொள்கையில் இருளாய் இடம் இருப்பதுதானே நியதி. அதுதான் அமாவாசை நேரமாக இருக்கின்றதோ, பள்ளி நேர எண்ணங்களோடு என்பதும் இதற்குள் உறங்குகின்றது. நினைவுகள் எப்போதும் நித்திரையைக் கெடுப்பதுதான் அதன் கடமை, நித்திரை கெட்டாலும் சுகம் சுகமே, வரிகளில் நிழலாடுகிறது அதன் இன்பம். தீராத தாகம் தந்து நித்திரையைக் கெடுக்கின்றாய், விரக தாபம் தீர்க்காமல் தவிக்கவிட்டுச் செல்கின்றாய், எண்ணத்தில் தேன் வார்த்து எட்டியெட்டிச் செல்கின்றாயே என்ன நியாயம்? நியாயமா சொல் என்ற கவிஞரின் கேள்வி நியாயமானதுதானே. இக்கவிதையிலே உடல் உள உணர்ச்சி, பிழம்பாக எரிமலைக் குழம்பாக வடிகின்றது. காதல் வதை இதுதானோ? காதலன் வந்தால் வதைத்தேனாய் வளியுமோ? காதல் ரசம் அருமை அருமை.

பக்கம் 59 இல் இடம்பிடித்துள்ள "புயலாடும் பெண்மை" என்ற கவிதையில் பெண்மையின் குணாம்சங்களைக் குண நலனாகச் சொன்ன கவித்தகை அவர்கள் அடக்கியொடுக்க நினைத்தால் அடலேறாவாள். பெண்ணுக்கு அநீதி என்ற போது திண்ணிய நெஞ்சினளாய் நின்று எதிர்ப்பாள் என்று பெண்மையின் மென்மைக்குள் வன்மையும் உண்டென்று பெண்மைக்கு ஆக்ரோசம் ஊட்டுகின்றார்.


பெண்ணே நீ பாவலர் பேற்றும் 

மென்மையாவைள்தான்

ஆனால் அடக்கியொடுக்கி 

வாழ நினைக்கும் 

ஆடவர் மத்தியில்

அடல் சான்ற 

வன்மையானவள்


பக்கம் 80 இல் இடம்பெற்றுள்ள "வானும் உனக்கு வசமாகும்" என்ற கவிதையில் இளைஞர்களுக்கான விழித்தெழும் விடியலுக்கான அழைப்பை விடுக்கின்றார் கவிஞை. பாவலர் எழுச்சிமிகும் வரிகளுடே முடக்காதே இயங்கு, துணிவே துணை, புறப்படு காரியமாற்று, தடையுடை, கடினம் கணக்கிற் கொள்ளாதே, நம்பிக்கையை நம்பு போன்ற நம்பிக்கை வரிகளால் தும்பிக்கை ஊக்கியாக வழங்கியிருக்கின்றார்.

2015 இல் வெளிவந்த "எரிந்த சிறகுகள்" என்ற கவிதைத் தொகுதி இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதியாக அமைகின்றது. இந்தக் கவிதைத் தொகுதியில் பக்கம் 35 இடம்பிடித்துள்ள 'என்ன வாழ்க்கை' என்ற கவிதையை உரசியபோது தலைப்பிலேயே ஒரு உளச் சலிப்பு கவிஞரால் உணர்வூட்டம் செய்யப்பட்டுள்ளது.


செழிப்புடன் வாழ்ந்தோர் முகத்திலே

பட்டினித்துயர்தான் படிகிறதே

சூழ்ந்தது துன்பம் எமைச்சுற்றி

சுகமது உண்டோ வாழ்க்கையிலே


துன்பம் சுற்றியிருக்க எப்படி வாழ்க்கையில் சுகம் உண்டாகும் என்ற யதார்த்தமான கேள்வியை எழுப்புகின்ற போது, "முதியோர் இல்லத்தில் விழ்ந்ததால்" என்று கவிதை பதில் தருகின்றது. செழிப்பாக வாழ்ந்தவர் நிலை, இன்று முதியோர் இல்லத்தில் அவல நிலையாகிவிட்டது என்கிறார் கவிஞர். முதியோர் இல்லத்தில் தங்கள் உறவுகளைத் தள்ளிவிடும் உறவுகளின் உணர்தலுக்கு சிறந்த கவிதை இது. சகதிநிலை - அகதிநிலை, வாழ்கின்றோம் - வீழ்கின்றோம், அழிகிறதே - கழிகிறதே இவற்றில் சந்தம் சிந்து பாடுகின்றது.

அடுத்து பக்கம் 38 இலுள்ள "ஒப்பனைகள்" என்ற கவிதை மனிதர்களில் பெரும்பாலானோர் அரிதாரம் பூசிய நடிகர்கள், முகமூடியை முகமாய் அணிந்தவர்கள் - இவர்களின் சொல், செயல், நடத்தை அனைத்துமே ஒப்பனைதான் எனச் சாடியுள்ள அதேநேரம், வரிகளை முரண்களாகவும் வடிவமைத்துள்ளார் கவிதாயினி.


அவர்களின் முகத்திற்கும் அகத்திற்கும் 

சம்பந்தமேயில்லாத பின் 

ஒப்பனைகள் மட்டும் எதற்கு 

அகற்றிவிடட்டும் 


அடுத்து பக்கம் 42 இலுள்ள "சங்கீதமிசைக்கும் சமாதானப் புறா" என்ற கவிதையின் வரிகள் மூலம் யுத்தகால நிலையை நேரடியாகக் கண் முன்னே கொண்டுவரும் கவிஞர், யுத்தமற்ற தற்போதைய சூழலையும் எடுத்தியம்புகின்றார். 


அண்ணாந்து பார்த்தேன் 

அழுதபடி காட்சியளித்தது 

அகல விரிந்த வானம்


உயிர் பிழைத்த

அந்த சம்பவங்கள்

தற்போது இல்லாமல்

சங்கீதமிசைக்கிறது

சமாதானப் புறா


யுத்தக் கொடுமை கண்டு அகல விரிந்த வானம் அழுதது எனக் கூறும் கவிஞரின் வரிகளில் நயம் சுவைக்கின்றது. உயிர் பிழைத்த என்ற சொல்லில் இருபொருள் புதைந்து கிடக்கின்றது. உயிர் பிழையாகிப் போனால் அது மரணம் என்பது ஒரு பொருள். உயிர்கள் இன்று ஆபத்தில்லாமல் மரணம் இல்லாமல் பிழைத்திருக்கின்றது என்பது மறுபொருளாகும்.

எமது தேசத்தின் தனிப்பெரும் இலக்கிய முதுசமாக, கனதியான அத்தியாயமாக ரிம்ஸா முஹம்மத் அவர்களை நான் பார்க்கின்றேன். இவரது படைப்புகளையும், செயற்பாடுகளையும் விழுமியங்களும், மனப்பாங்கு விருத்தியும் கொண்ட எதிர்கால சமூக மாற்றத்தின் தூண்களாக அடையாளப்படுத்த முடியும் என்பது எனது நோக்கு. இவரை ஒட்டு மொத்தமாக வரையறைப்படுத்தும் போது, கூர் அவதானம், கூர் புத்தி, படைப்பியல் நுட்பத்திறன், ஆற்றல், அறிவு, அனுமானம், அனுபவம், மனப்பாங்கு, உள் வாங்கல் திறன், மனமுதிர்ச்சி என்பனவே இவரது தனியாள் விருத்தியை சிறப்பாக அமைக்க வழிச(ய)மைத்துக் கொடுத்துள்ளது கண்கூடு என்பதை ஏகமனதாக ஏற்கின்றேன். இவரைத்தேடி அடைபவர்கள் பல்துறை தேர்ச்சி அடைவர், அடையாளம் பெறுவர் என்பதும் திண்ணமாய் எனது எண்ணம்.

கவிதை எனப்படும் போது மரபுகள் தவிர்ந்த அனைத்தும் கற்றுக்கொள்வதோ, தெளிவுறுவதோ அல்ல அது உள்ளத்தினூடான உந்துதலின் ஊற்று எனச் சொல்வேன். ரிம்ஸா முஹம்மத் அவர்களின் கவிதைகள், மெல்லிசைப் பாடல்கள், சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள், நூல் விமர்சனங்கள், ஆய்வுகள் என்பன தொகுப்பாக்கம் பெற்றிருப்பதை இலேசுபட்ட காரியமாகப் பார்க்க முடியாதது. ரிம்ஸா முஹம்மத் அவர்கள் எமது புதிய தலைமுறைக்கும் வருங்கால சந்ததிக்கும், இலக்கியத் தடங்களைத் தடாகங்களாகக் கையளித்துள்ளார்.

உளவியல், சமூகப் பொருளாதாரம் போக்குகள், காதல், உளப்போராட்ட உணர்வுகள், அரசியல், பண்பாட்டுக் கோலங்கள், ஆன்மீகம் என்று பிரித்துப் பார்ப்பதைவிட இவரது ஆக்கங்களை உலக வாழ்வியல் சார் நடைமுறைக்குள் உள்ளடக்கப்பட்டவையாகவே என்னால் பார்க்க முடிகிறது. இவரது இலக்கிய ஆக்கவியல்களும், கவிதைகளும் பிரபஞ்சப் பரப்பாக, பதிவுகள் யாவும் ஆழமானவை, பெறுமதியானவை, பெருமைக்குரியவை.

இவரது படைப்புகள் சுவாசிப்பதற்கான மூச்சுக் காற்றின் பெறுமானம் கொண்டவை. உணரவும் அனுபவிக்கவும், பார்க்கவும் மற்றையவர்களோடு பகிரவும் பாத்தியதை உடையதான இவரது ஆன்மாவின் வெளிப்படுத்தல்கள், தமிழ் பேசும் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய தொகுப்புகளாகும். இவரது துறைசார் பங்களிப்புகள் யாவும் வானுயர வளர்ந்து நிற்கின்றது. வானளாவ வளர விரும்புவோருக்கு இவை வரப்பிரசாதமாகும். 

சமூக அவலங்களையும் ஆற்றாமைகளையும் தனக்குள்ளேயே அடக்கி வைத்திராது சீறும் சிங்கப் பெண்ணாக மிடுக்கான சொல்லடுக்குகளுடன் தனது படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். மட்டுமல்ல இலேசாக வளைந்து கொடுக்கவோ, வளைத்தெடுக்கவோ பல்லாயிரம் பாகைகள் வெப்பநிலையில் உருக்கினாலும் உருக மாட்டேன் என்ற எண்ணம் கொண்ட இரும்புப் பெண்ணாகவே இவரது படைப்புகளின் பல அம்சங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன. பிறப்பிலேயே போராட்டக் குணத்தினையே மெய் முழுக்க சுமந்தவராக இருப்பதை இவரோடு பேசும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது கண்டு இந்தக் கவிதாயினியை நினைத்து நான் விக்கித்து நின்றேன். 

இலங்கைப் பெண்கள் சமூகம், இப்பெண் பல்லாளுமையை அழகிய முன்மாதிரியாகக் கொள்ள முடியும். இலங்கையின் உயர் ஆளுமை கொண்ட ஒற்றைப் பெண்ணாகப் பேசப்படும் காலம் தொட்டுவிடும் தூரத்தில்தான் என்பதில் ஐயமில்லை. சர்வ எழுத்து இயங்கியல் பெண்மையே உங்களது கடமை மேலும், மேலும் பெயரையும் பெருமையையும் தேடித் தரும் செயல்களில் அர்ப்பணிப்பதுதான், இளைப்பாறுவதல்ல. எங்கள் பிள்ளைகள், பேரன், பேத்திகளுக்கே உங்கள் நவீன உயர்ந்த இலக்கியத்தைப் பரிசளிப்பீர்களாக, இந்த வனிதையை வாழ்த்த என்னிடம் வார்த்தைகள் இல்லாத போதும் உள்ளதைக் கொண்டு வாழ்த்துரைத்துள்ளேன். வாழ்க, வளர்க, வழிகாட்டுக!!!


இவருடனான தொடர்புகளுக்கு:-


Face Book - Rimza Mohamed

Telephone - 0775009222

Email - rimza.mohamed100@gmail.com

 



ஆக்கம்:-

கனல் கவி, கவிமணி அப்துல் றஸாக் சேகுதாவூத் 

கோட்டக் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு நிலை),

ஏறாவூர்.



இந்தச் சஞ்சிகையில் 66 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள எனது கவிதையொன்றை வாசகர்களின் இரசனைக்காக இங்கே பதிவேற்றுகின்றேன்.












நன்றிகள்:-

வெண்ணிலா சஞ்சிகை இதழாசிரியர்


வெலிகம ரிம்ஸா முஹம்மதின் "விடியல்" ஆய்வு நூல் ஓர் எளிய மதிப்பீடு

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் "விடியல்" ஆய்வு நூல் ஓர் எளிய மதிப்பீடு


நூல் மதிப்பீடு:- சிறீ சிறீஸ்கந்தராசா


வெலிகம ரிம்ஸா முஹம்மத் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைக் கற்கை நெறிக்காக ஆய்வு ஒன்றைச் செய்தார். அந்த ஆய்வை ஒரு சில மாற்றங்களோடு "விடியல்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். இந்த விடியல் என்ற நூலினையே இங்கே ஓர் எளிய மதிப்பீட்டிற்காக நான் எடுத்துக்கொள்கின்றேன். ஏனைய இலக்கிய வடிவங்களைப் போன்று ஆய்வுத் துறையானது தொடக்கம், வளர்ச்சி, உச்ச கட்டம், முடிவு போன்ற வளர்ச்சிப் படிமுறைகளைக் கொண்டதல்ல.

ஆய்வின் நோக்கம், ஆய்வின் பொருள், முன்னர் ஆய்வு செய்யப்பட்டதா? அப்படியாயின் மீள் ஆய்வு  செய்யப்பட வேண்டியதன் அவசியம் என்ன? இத்தகைய ஆய்வின் மூலம் சொல்ல வரும் செய்தி என்ன? போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக ஒரு ஆய்வு இருக்க வேண்டும். ரிம்ஸா முஹம்மத் இளம் ஆய்வாளர், கவிஞர், பன்னூலாசிரியர், சஞ்சிகையாசிரியர், ஊடகவியலாளர் என்ற வகையில் மூத்த எழுத்தாளர் மூதூர் முகைதீனின் கவிதைகளைத் தனது ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்.

நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத், முதலாவது அத்தியாயத்தில், கவிதை பற்றிய அறிமுகத்தைத் தந்துவிட்டு தான் எடுத்துகொண்ட ஆய்வின் பிரச்சனைகள், ஆய்வின் வரையறை, உள்ளடக்கம் பற்றிக் கூறுகின்றார்.  இரண்டாவது அத்தியாயத்தில் கவிதையின் வரைவிலக்கணம், கவிதையின் வகைகள், மரபுக் கவிதைகள் நவீன கவிதைகள் பற்றியும் பேசுகிறார். மூன்றாவது அத்தியாயத்தில் கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் கவிதைத் தொகுப்புகள், அவர் பெற்ற விருதுகள், பரிசில்கள், கௌரவங்கள் பற்றி மிகச் சிறப்பான முறையில் எழுதிச் செல்லுகிறார். நான்காவது அத்தியாயத்தில் "பிட்டும் தேங்காய்ப் பூவும்", "இழந்துவிட்ட இன்பங்கள்", "ஒரு காலம் இருந்தது" ஆகிய 03 கவிதைத் தொகுதிகளிலுள்ள கவிதைகள் பற்றியும் மிகவும் சிறப்பான எடுத்துக் காட்டுகளோடு பதிவு செய்து விளக்குகிறார். ஐந்தாவது அத்தியாயத்தில் கவிதைகளின் சமூக கலாசார பங்களிப்புகள் பற்றியும், வாசகர்கள் மத்தியில் கவிதை நூல்களுக்கான வரவேற்புப் பற்றியும் தனக்கே உரித்தான பாணியில் கூறுகிறார்.

கவிதை பற்றிய அறிமுகத்தின் போது, "கவிதை என்பது ஆழ்மனதில் புதைந்திருக்கும் வலிகளை, சந்தோசங்களை, ஏமாற்றங்களை, தவிப்புக்களை எல்லாம் வெளிக்கொணரும் ஒரு ஊடகம்" என்று கவிதைக்கு புதியதொரு இலக்கணம் வகுக்கின்றார். காலத்திற்கு ஏற்ப பொருள் புதைந்த இலக்கணம் ஒன்றை ரிம்ஸா முஹம்மத் இங்கே பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள். யாப்பிலக்கணம் மட்டும் தெரிந்தவர்களிடம் இருந்த கவிதை காலவோட்டத்தில் எளிதான முறையில் எல்லோரிடமும் மரபை மீறிய கவிதைகள் என்ற வடிவத்தில் வந்து சேர்ந்துள்ளன எனப் பெருமையுடன் கூறுகிறார். போர் கிழித்த தேசம் தான் சுமக்கும் வலிகள் வேதனைகள், உளவியல், உடலியல் தாக்கங்கள் அதனால் இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் பற்றிப் பேசும் கவிஞர் முகைதீனின் கவிதைகள் பற்றி மிகவும் யதார்த்தமான முறையில் ஆய்வு செய்கிறார்.

கவிதையின் வகைகள் என்ற பகுதியில் தலித் கவிதைகள், பெண்ணியக் கவிதைகள், பின் நவீனத்துவம், ஹைக்கூ, என்று வகைப்படுத்துகின்றார். கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெலிகம ரிம்ஸா முஹம்மத் இங்கே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். கவிஞர் மூதூர் முகைதீன் அவர்கள் சுமார் மூன்று தசாப்பதங்களாக இலக்கிய ஈடுபாடு கொண்டு, தமிழ்த் தொண்டு ஆற்றிவருகிறார். கிழக்கின் முன்னணிக் கவிஞர்களுள் ஒருவராகவும், தனது ஊரின் பெயரை முன்னிறுத்தி "மூதூர் முகைதீன்" என்று புனைபெயர் கொண்டு தொடர்ந்தும் எழுதி வருகிறார். இவரது இயற்பெயர் ஏ.எம். முகைதீன் ஆகும். இதுவரை இவர் மூன்று கவிதைத் தொகுப்புக்களை வெளியீடு செய்துள்ளார். "பிட்டும் தேங்காய்ப்பூவும்", "இழந்துவிட்ட இன்பங்கள்", "ஒரு காலம் இருந்தது" என்பனவே அவையாகும்.

"பிட்டும் தேங்காய்ப்பூவும்" என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் சிலவற்றை எடுத்துக் காட்டுக்களாகப் பதிவு செய்து தனது ஆய்வினை மேற்கொள்ளுகின்றார். யுத்தம் தந்த துன்பங்கள், துயரங்கள், வலிகள், வேதனைகள், எல்லோரையும் பாதித்திருக்கின்றது என்பதை இவரது கவிதைகள் தாங்கி நிற்கின்றன. ரிம்ஸா முஹம்மத் அவர்களின் நடையில் சொல்லவேண்டுமாயின் "எங்கு பார்த்தாலும் பிணங்களும் மண்டை ஓடுகளும், அந்த இருண்ட காலத்தை எம் கண் முன்னே காட்சிப்படுத்துகின்றார். புராதன பொருட்களை அகழ்ந்து ஆராய்ச்சி செய்வது போல இனி மண்டை ஓடுகளைத்தான் ஆராய்ச்சி செய்ய வேண்டுமெனச் சாடி நிற்கின்றார்". இந்தத் தொகுப்பிலுள்ள ஒரு உணர்வுமிக்க கவிதை ஒன்றினை இனம் காட்டுகின்றார்.


நோன்புக் கஞ்சியை 

விரும்பிச் சுவைத்திட 

மாலைப் பொழுதில் 

உரிமையுடன்

உம்மாவிடம் கேட்டு வாங்கி 

உறுஞ்சிக் குடிக்கும் 

விஜயன் விமலன் 

நட்பு மலர்கள் 

தினமும் மணக்கும்

பிள்ளையார் கோவிலில் 

சிவராத்திரிக்கு 

சின்னராசாவின் பக்கத்தில் 

அன்வர் இருந்து 

மோதகம் உண்பான்

ஐயர் வந்து 

சிரித்தபடியே

அவித்த கடலையையும் 

அள்ளிக் கொடுப்பார்.. 


இந்த வரிகள் யுத்தத்துக்கு முன்பு இனங்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமையினதும், அன்பினதும் அப்பட்டமாக எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறு தனது யதார்த்தமான, அரிதாரம் ஏதும் பூசாத வரிகளால்  பதிவு செய்து போகின்றார். உண்மையில் கவிஞரின் ஆளுமையும், ஆய்வாளரின் சொல்லாட்சி எழுத்தாற்றலும் இக்கவிதைக்கு மேலும் மெருகூட்டுகின்றது.


"இழந்துவிட்ட இன்பங்கள்" என்ற தொகுப்பிலிருந்து ஆய்வாளர் எடுத்துக் காட்டும் சிறப்பான கவிதை ஒன்றினை இங்கே பார்ப்போம்.


பொன்னகராம் நான் வாழும் பதியம் இன்று 

பொலிவிழந்து போனதுவோ போரால் வெந்து 

கண் போன்று காத்திட்ட கல்விக்கூடம்

கலையிழந்து காட்சிதரும் கோலம் கண்டு 

கண்ணீரை விட்டும் நான் கவலை கொண்டு

கரந்திட்ட காலத்தைக் கனவாய்ப் பார்த்தே

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி நெஞ்சில் 

ஏக்கத்தில் வாழுகின்றேன் இன்னும் மண்ணில்


போரின் கோர முகத்தை கவிஞர் மேலுள்ள கவிதை மூலம் மிகவும் அற்புதமாகப் படம்பிடித்துள்ளார்.


"ஒரு காலம் இருந்தது" என்னும் கவிதைத் தொகுப்பிலுள்ள இன்னொரு அற்புதமான கவிதையை அது காட்டும் அன்பின் பிணைப்புகளையும், இனங்களின் ஒற்றுமைகளையும் கவிஞர் வெளிப்பூச்சு ஏதுமின்றிப் இப்படி பதிவு செய்துள்ளார். கவிஞருக்கு வாழ்த்துக்கள். இந்தக் கவிதையை இனம் காட்டிய ஆய்வாளருக்கு எமது சிறப்பான பாராட்டுக்கள்.


ஒரு காலம் இருந்தது

அந்திப்பொழுது உச்சம் கொடுக்க 

ஆலய மணி ஓசையில் 

அரிசி உலை வைப்பதற்காய் 

ஆயிசா உம்மா

அவசரப்படுவதும்..


அதிகாலை

பாங்கொலியில்

அன்னம்மா எழுந்து 

புகையிலைத் தோட்டத்திற்கு

புறப்பட்டுப் போவதுமாய் 

ஒருவர் வழியில் 

இருவரும் இணைந்தே 

வரையப்பட்ட விதி வழியாய்

வாழ்ந்த

ஒரு காலம் இருந்தது..


இத்தகைய மூன்று தொகுப்புகளிலிருந்தும் தனக்கே உரித்தான பாணியில் கவிதைகளை எடுத்துக்காட்டி தனது ஆய்வினை மிகவும் சாத்தியமான முறையில் வெற்றிகரமாக நகர்த்திச் சென்ற ரிம்ஸா முஹம்மத் அவர்களின் ஆளுமையும் ஆற்றலும் கண்டு நாம் இங்கேவியந்து நிற்கின்றோம். இந்த உணர்ச்சிக் கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் இந்த மூன்று தொகுப்புகளையும் படிக்க வேண்டுமென்ற ஆவலினைத் தூண்டிய ஆய்வாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கு எமது சிறப்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் வழங்குவதில் நாம் பெருமைகொள்கிறோம்.

நூல் :- விடியல்

நூல் வகை :- ஆய்வு

நூலாசிரியர் :- ரிம்ஸா முஹம்மத்

தொலைபேசி :- 0775009222

மின்னஞ்சல் :-  rimza.mohamed100@gmail.com

விலை :- 400 ரூபாய்


நூல் மதிப்பீடு:-  சிறீ சிறீஸ்கந்தராசா