Wednesday, November 11, 2020

2020.08.30 தினகரன் வாரமஞ்ரியுடன் வெளிவரும் இணைப்பிதழான செந்தூரம் இதழில் எனது அட்டைப் படம் தாங்கி வெளிவந்தத நேர்காணல்.

2020.08.30 தினகரன் வாரமஞ்ரியுடன் வெளிவரும் இணைப்பிதழான செந்தூரம் இதழில் எனது அட்டைப் படம் தாங்கி வெளிவந்தத நேர்காணல்.

நன்றி - கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம்


தெற்கிலிருந்து ஒரு பெண் ஆளுமை - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

(ஓர் எழுத்தாளர். இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், விமர்சகர், சஞ்சிகையாசிரியர்  மற்றும் ஊடகவியலாளர்)


செந்தூரம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர். இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்?

பாய்ந்தோடும் இயற்கை எழிலாய் நில்வளா கங்கையும் நீலவானின் நிறத்தையொத்த அழகிய கடலும் கொண்டமைந்த இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள வெலிகமையே எனது பிறப்பிடமாகும். இந்த ஊரின் நாமத்தை எனது பெயரோடு இணைத்து, வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரில் எழுதி வருகின்றேன்.

2004 ஆம் ஆண்டு தினமுரசுப் பத்திரிகையில் நிர்மூலம் என்ற கவிதையை எழுதியதைத் தொடர்ந்து 17 ஆண்டுகளாக எழுதி வருகின்றேன். இதுவரை 13 நூல்களை வெளியிட்டுள்ளேன். இவை கணக்கீடு, கவிதை, நூல் விமர்சனம், சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள், ஆய்வு ஆகிய வகைகளிலான நூல்களாகும்.

அகம் சார்ந்தவை, பெண்ணியம், நட்பு, சமூக அவலம், சீதனக் கொடுமை, போர்ச் சூழல், போரின் அவலங்கள், நாட்டு நடப்புகள், உலக நடப்புகள், உறவுகளின் விரிசல், தனிமனித வாழ்வு, சமூக அக்கறை, மானிட நேயம், இயற்கையின் வனப்பு, இயற்கை அனர்த்தங்கள், போதையின் அவலம், வறுமைப் புயல், சுயநல உறவுகள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஜீவகாருண்யம், ஆன்மீகம் போன்றவற்றைப் பாடுபொருள்களாகக் கொண்டே எனது படைப்புக்கள் அமைந்துள்ளன.


இலக்கியத் துறையில், உங்களுக்கு எப்படி நாட்டம் ஏற்பட்டது? அந்த முதல் அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துகொள்ளலாமே?

வாசிப்பு அனுபவம்தான் என்னை ஓர் எழுத்தாளராக உருவாக்கியது. நான் பத்திரிகை உலகத்தையோ அல்லது எழுத்துத் துறையையோ அறிந்திருக்கவில்லை. எதுவும் தெரியாமல்தான் வாசிக்க ஆரம்பித்தேன்.

நான் வாசிக்க ஆரம்பித்த காலங்களில் எமது உறவினரான மாமா ஒருவர் அந்தக் காலத்தில் ஒரு பிரபல்யமான எழுத்தாளராக இருந்தார். அவரது பெயர் எஸ்.ஐ.எம். ஹம்ஸா என்பதாகும். அக்காலத்தில் அவர் திக்குவல்லை ஹம்ஸா என்ற பெயரில் தனது படைப்புக்களை பத்திரிகைகளில் களப்படுத்தி வந்தார். இந்த மாமாவே தனது சிறுகதைகளை எனக்கும் வாசித்துக் காட்டி, என்னை இத்துறையில் ஈடுபாடு காட்ட ஒரு அடிக்கல்லை நாட்டினார். நிச்சயமாக இந்த மாமா இன்று உயிரோடு இருந்தால் என்னைப் பார்த்து மிகவும் சந்தோசப்படுவார். அவரின் இழப்பு இன்றும் எனக்கு ஆ(மா)றாத வடுவாகவே உள்ளத்தில் பதிந்துள்ளது.

2004 ஆம் ஆண்டில் திக்குவல்லை ஸப்வான் என்ற ஆசிரியரே முதன் முதலில் என்னைப் பற்றிய அறிமுகத்தை தினகரனின் இணைப்பிதழான செந்தூரத்தில் இடம்பெறச் செய்து, என்னை ஊக்கப்படுத்தினார்.


நீங்கள் இதுவரை எழுதி வெளியிட்ட நூல்கள் எவை? அவை, வாசகர்கள்; மத்தியில் எந்தளவு வரவேற்பைப் பெற்றுள்ளன?

இதுவரை நான் மொத்தமாகப் 13 நூல்களை நான் வெளியிட்டுள்ளேன். அதாவது தென்றலின் வேகம் (2010), எரிந்த சிறகுகள் (2015) என்ற இரண்டு கவிதை நூல்களை நான் வெளியிட்டுள்ளேன். அவை இளசுகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ளன. அவர்கள் ஒத்த மன நிலையில் கவிதைகளை வாசித்ததாகவும், ஒரே மூச்சாக புத்தகம் முழுவதையும் வாசித்து முடித்ததாகவும் கூறியதைக் கேட்டு மன நிறைவு கொண்டேன்.

கவிதைகளுடனான கை குலுக்கல் ஒரு பார்வை (2013) மற்றும் அறுவடைகள் (2015) என்ற இரண்டு நூல் விமர்சனங்கள் அடங்கிய நூல்களை நான் வெளியிட்டுள்ளேன். இந்த இரண்டு நூல்களைப் பற்றிச் சொல்லும் போது மூத்த எழுத்தாளர்கள் பலர் தங்களது நூல்களுக்கு, நானே நூல் விமர்சனம் எழுத வேண்டும் என்று விரும்பி, என்னிடமே அவர்களது நூல்களைத் தருகின்றார்கள். கிட்டத்தட்ட நான் இன்றுவரை எழுதிய நூல் விமர்சனங்கள் சுமார் 150 போல் இருக்கும். மூத்த எழுத்தாளர்கள் தொடக்கம் இளம் எழுத்தாளர்கள் வரை பாகுபாடின்றி நூல் விமர்சனங்களை எழுதியுள்ளேன். இத்துறையில் ஈடுபாடு காட்ட விரும்புபவர்கள் எனது நூல்களை வாசிப்பதன் மூலம் பல எழுத்தாளர்களது நூல்களை வாசித்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிறுவர் இலக்கிய நூல்கள் பற்றிச் சொல்லும் போது எனது நான்கு சிறுவர் கதைகளடங்கிய நூல்களை ரூம் டு ரீட் நிறுவனம் பிரசுரித்து வெளியீடு செய்துள்ளது. அவை ஆடம்பரக் கூடு (2012), என்ன கொடுப்போம்? (2012), பாடல் கேட்ட குமார் (2013), இதுதான் சரியான வழி (2013) ஆகியனவாகும். கூடுதலாக இலங்கையின் நாலா புறங்களிலும் உள்ள கஷ்டப் பிரதேச பாடசாலைகள் சகலதிலும் எனது இந்த நூல்கள் மாணவர்களது வாசிப்புக்காக வைக்கப்பட்டுள்ளன. அதுபோல எனது சிறுவர் பாடல் நூலான வண்ணாத்திப் பூச்சி (2014) என்ற நூலை வெளியீடு செய்ய இலங்கை நூலக ஆவணவாக்கல் சபை அனுசரணை வழங்கியது. இந்த நூலை இலங்கைக் கல்வி அமைச்சின், நூல் அபிவிருத்தி சபையானது பாடசாலைகளுக்குப் பொருத்தமான நூலாக அங்கீகரித்துள்ளது.

விடியல் (2017) என்ற ஆய்வு நூலானது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நான் இதழியல் கற்கும் போது சமர்ப்பித்த ஆய்வாக அமைகிறது. இந்த நூலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் என்னிடம் கேட்டு பார்வையிடுகின்றார்கள். ஒரு ஆய்வு நூல் எப்படியிருக்க வேண்டும் என்ற அறிமுகத்தை இந்த நூல் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்வதாக அறிந்து கொண்டேன்.

எனவே எந்த வகையான நூலாக இருந்தாலும் அவை பலருக்கும் பல வகைகளில் மிகுந்த பிரயோசனம் உடையதாக அமைய வேண்டும். இப்படியான நூல்கள் தான் காலத்தின் தேவையாக உள்ளது என்று நினைக்கின்றேன்.


"நூல் வெளியீடு" என்ற விடயத்தில் ஓரு படைப்பாளி சந்திக்கும் சவால்கள்?

நூல்களை வெளியிடுவது என்பது ஒரு எழுத்தாளன் தன் எதிர்காலத்தை அடகு வைப்பதற்கு ஒப்பானது. சுமார் 500 பிரதிகளை அச்சிடுவது என்றாலே 80,000 ரூபாவுக்கு மேல் செலவு காத்திருக்கின்றது. அதையும் தாண்டி நூல் வெளியீட்டுக்காகவும், மண்டப வாடகை, அழைப்பிதழ், இத்தியாதிகளுக்காகவும் ஒரு தொகை செலவு காத்திருக்கின்றது. காசு என்ற விடயத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் விழாவுக்கு வருகை தருவோர் பற்றிய எண்ணம் பயத்தில் ஆழ்த்தி விடுகின்றது. இதுவும் அல்லாமல் அழைப்பிதழ்கள் இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டு விழாவுக்குப் பின்னர் கிடைக்கக் கூடிய துரதிர்ஷ்ட வசமான சூழ்நிலையும் காணப்படுகின்றது. 

அத்துடன் அழைப்பிதழில் பெயர் குறிப்பிடப்படுபவர்களின் பட்டம் பதவிகள் குறிப்பிடப்படாத பட்சத்தில் குறிப்பிட்ட சிலர் விழாவுக்கே வருகை தரமாட்டார்கள். வேறு சிலர் அழைப்பிதழில் தனது பெயர் குறிப்பிடப்படவில்லை என்று வருகை தர மாட்டார்கள். தனக்கு பிடிக்காதவர்களின் பெயர் அழைப்பிதழில் இருந்தால் இன்னும் ஒரு வகையினர் நிகழ்வுக்கு வருகை தரமாட்டார்கள். இவ்வகையான சவால்களையெல்லாம் தாண்டி ஒரு நூல் வெளியீடு சிறப்பாக இடம்பெற்றால் அது அந்த எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரமாகும்.


பூங்காவனம் சஞ்சிகை தொடங்க உந்துதலாய் அமைந்த விடயம் எது?

மல்லிகை, ஞானம் போன்ற சஞ்சிகை கள் அந்நாட்களில் மிகவும் பிரபல்யம் பெற்றவையாக இருந்தது. ஞானம் சஞ்சிகை எனக்கு அறிமுகமான புதிதில் மாதா, மாதம் ஒரு எழுத்தாரை அறிமுகப்படுத்தி, அவரது கவிதையையும் பிரசுரித்து வந்தது. அதில் எனது அறிமுகமும் எனது கவிதையும் பிரசுரமாகியது. அந்த மகிழ்ச்சியை இன்றும் அளவிட்டுச் சொல்ல முடியாது. எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை எனது எழுத்தாள நண்பர்களுக்கும் வழங்கினேன். அதாவது அவர்கள் பற்றிய அறிமுகத்தையும், அவர்களது கவிதையையும் பிரசுரமாக நான் உதவியாக இருந்தேன்.

2004 ஆம் ஆண்டு தினமுரசுப் பத்திரிகையில் நிர்மூலம் என்ற எனது கவிதை பிரசுரமானதைத் தொடர்ந்து எழுத்துத் துறையில் 17 வருடங்களைக் கடந்து நின்றாலும் ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த களங்கள் மிகவும் பெறுமதியானவை. அவையே என்னை ஊக்குவித்தன.

என்றாலும்  புதிய எழுத்தாளர் களுக்கு வாய்ப்புக் குறைவாக அமைந்ததைக் காணமுடிந்தது. அதன் விளைவால் 2010 ஆம் வருடம் பூங்காவனம் என்ற சஞ்சிகையைத் தொடங்கி அதில் மூத்த எழுத்தாளர்களின் படைப்புக்களையும் உள்வாங்கி, கூடுதலாகப் புதிய எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தேன்.


இப்படைப்புலகில் தனித்துவமாக சளைக்காமல் பயணிக்கும் தங்களின் வெற்றியின் ரகசியம் என்ன?

ஒரு கலைஞன், அல்லது கவிஞன் முதலில் மனிதனாக இருக்க வேண்டும். ஓவ்வொரு கலைஞனும் மனிதனை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மனிதாபிமானத்தோடு செயற்பட வேண்டும். நாம் உலகத்தில் பல செல்வங்களைச் சேமித்தாலும் மனிதர்களின் அன்பை, மதிப்பை சேமிக்காவிட்டால் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்காது. எனவே நான் நேசிக்கும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை எமது எழுத்துக்களினூடாக பிரதிபலிக்கின்றபோது அது அவர்களுக்கு ஆறுதலாகவும் மற்றவர்களுக்கு பாடமாகவும் அமைந்து விடுகின்றது. 

நாம் எழுதும் படைப்புக்கள் நூலுருவாக்கம் பெற்றால்தான் அது காலத்தால் நிலைத்திருக்கும். ஆதனால் நான் எழுதும் படைப்புக்களை நூல்களாக வெளியிடுவதில் கரிசனை காட்டி வருகின்றேன். அவ்வாறு நூல்களை வெளியீடு செய்யும் போது அதனை வாசிப்பவர்கள் தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் என்னை வாழ்த்துகின்றார்கள். 

மேலும் எனது நூல்களை வெளியீடு செய்யும் போது ஏற்படுகின்ற பல சிக்கல்களையும் சவால்களையும் சமாளித்து அவற்றை சிரமமாக நினைக்காமல் பொறுத்துக்கொண்டு தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றேன்.

எனது நூல் வெளியீடுகள் சிலவற்றின் முதற்பிரதிகளை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பெற்று என்னை ஊக்கப்படுத்தியுள்ளார். அதேபோன்று எனது நூல் வெளியீடுகளின் போது என்னையும், என் எழுத்துக்களையும் நேசிக்கும் நல்ல உள்ளங்கள் சிரமம் பாராமல் வருகை தந்து எனக்கு உதவிக் கரம் நீட்டுகிறார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் என் புத்தக வெளியீட்டு நிகழ்வுகளுக்கு வருகை தர முடியாதவர்கள் கூட பிரிதொரு தினத்தில் என் நூல்களை வாங்கி உதவி செய்கின்றார்கள். 

பத்திரிகைகள், சஞ்சிகைகள், வலைத்தளங்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எனது படைப்புக்களுக்கு களம் தந்து என்னை ஊக்குவிக்கின்றார்கள். இவ்வாறான சகல விடயங்களுமே எனது வெற்றிக்கான தூண்களாகும்.


இலக்கியம், பத்திரிகை தவிர, மற்ற துறைகளில் உங்களுக்கிருக்கும் ஆர்வம் பற்றி..?

கணக்கீட்டுத் துறையில் உயர் தரம் கற்றதால் கணக்கீட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இந்த ஈடுபாட்டின் காரணமாக பாடசாலை மாணவர்களை நோக்கியதாக கணக்கீட்டுத் துறையில் மூன்று நூல்களை என்னால் வெளியிட முடிந்தது. இந்த நூல்கள் அந்தப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரவாதமாகவே அமைந்துள்ளன. அத்துடன் கொரோனாக் கால விடுமுறையில் அடிப்படைக் கணக்கீடு என்ற புதிய நூலொன்றையும் தயார் செய்தேன் இதனையும் விரைவில் வெளியிட முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக இந்த நூலும் கணக்கீடு பாடம் கற்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.


உங்கள் வாழ்க்கையில் ரோல் மாடலாக நினைப்பது யாரை?

அவ்வாறு குறிப்பாக சொல்வதற்கு யாருமில்லை. ஒவ்வொரு விடயங்களிலும் பலதரப்பட்டவர்களை முன்னுதாரணமாகக் கொள்கின்றேன் அவ்வளவே. புதுக் கவிதைகளைப் பொறுத்தவரை கவிஞர் மு. மேத்தா அவர்களின் கவிதைப் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும். சிறுகதைகளைப் பொறுத்தவரை திக்குவல்லைக் கமால் அவர்களின் சிறுகதைகளின் உள்ளடக்கம் மற்றும் பேச்சு வழக்கு மிகவும் பிடிக்கும். நூல் விமர்சனங்களைப் பொறுத்தவரையில் கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் திறனாய்வுப் போக்கு மிகவும் பிடிக்கும். இப்படிச் சில துறைகளில் சிலரை முன்னுதாரணமாகக் கொள்கிறேன்.


மலையகத்தை பொறுத்தவரையில் எழுத்தாளர்களின் பங்களிப்பு, வளர்ச்சி, அவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் பற்றி கூறமுடியுமா?

மலையகத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் கொடி கட்டிப் பறக்கின்றார்கள். அவர்களின் ஆத்திரமெல்லாம் இன்று முன்னேற்றங்களாக மாறி வருவது ஆரோக்கியமானது. தலைநகரில் வீட்டு வேலைகளுக்காக ஒது(டு)க்கப்பட்டவர்கள் இன்று பல உயர் பதவிகளை வகிக்கின்றார்கள். மலையக எழுத்தாளர்களின் வளர்ச்சிக்காக பல மலையக அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. அவை மலையக எழுத்தாளர்களுக்காக போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்றன.


இன்றைய பெண்கள் சமுதாயம் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினை எது? உங்கள் பார்வையில் அதற்கான தீர்வு என்னவென நினைக்கிறீர்கள்?

தற்காலத்தைப் பொறுத்தவரை பொது வெளியில் பேசக் கூடிய அல்லது பேச வேண்டிய ஒரு விடயமாக பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு முக்கிய இடம்பெறுகிறது. குறிப்பாக தொழிலுக்குச் செல்லும் பெண்கள் பஸ்களிலும், அலுவலகத்திலும் மட்டமான சில ஆண்களின் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. பலர் எதிர்த்தும் சிலர் வெளியே சொல்ல முடியாமல் கண்ணீரோடும் வாழ்கிறார்கள். குழந்தைகளைப் பொறுத்தளவில் சொந்த பந்தத்திலுள்ள சில ஆண்கள், சில ஸ்கூல் சேர்விஸ் சாரதி, சில ஆண் ஆசிரியர்கள் போன்றவர்களின் தகாத தொடுகைகளுக்கு உள்ளாகி சில குழந்தைகள் பெற்றோரிடம் சொல்லப் பயந்து ஒரு வகையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்.

எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெண்கள் தைரியமாக தம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அலுவலகங்களில் தம் சக பெண் ஊழியர்களிடம் தமக்கு நடந்த அநீதியைத் தெரிவித்து அவர்களையும் பாதுகாக்க வேண்டும். அத்துடன் பெண் மேலதிகாரிகளிடமும் இதுபற்றி முறையிட வேண்டும். குழந்தைகளுக்கு ஷகுட் டச்|, ஷபேட் டச்| சொல்லிக்கொடுப்பதைவிட ஷடோன்ட் டச்| என்று சொல்லிக் கொடுங்கள். பெண் பிள்ளைகள் ஆண் நண்பர்களுடன் பழகுவதை பெற்றோர்கள் கண்டிப்பாக அவதானியுங்கள். மிக முக்கியமாக ஸ்மார்ட் போன்களை பிள்ளைகளுக்கு கொடுக்காதீர்கள். அதேபோன்று தற்காலத்தைப் பொறுத்தவரை பெண் பிள்ளைகளுக்குப் போன்றே ஆண் பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.


எழுத்துத் துறையில் ஈடுபடும் பெண்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?

பொதுவாக பெண்கள் என்று நோக்குமிடத்து தமது கலாசாரத்தை சீரழித்துக் கொண்டு யாரும் எழுத முன்வரக் கூடாது. ஏனெனில் நமது வாழ்க்கை பூஞ்சோலையில் ரோஜாக்கள் பூத்துக் கொண்டிருக்கும்போது நாம் எமது எழுத்துக்களினூடாக ஏன் முட்களைத் தேடிக்கொள்ள வேண்டும்? 

வரம்பு அல்லது வரைமுறைகள் என்பதெல்லாம் பெண்களை முடக்கிப் போடுபவை என்ற சிந்தனையிலிருந்து விடுபடுங்கள். உண்மையில் அந்த வரைமுறைகள் எமக்கு முன்னோர்கள் போட்டுவிட்ட முள்வேலி. முள்வேலியைப் பயிர்கள் கடந்தால் அவை காளைகளின் பசிக்கு இரையாக நேரிடும். எனவே எமக்கென்றொரு பாதையை நாம் போட்டுக்கொள்வதில் தவறில்லை. அதில் தனித்துவம் இருக்க வேண்டுமே தவிர ஒழுக்க வரைமுறைகளைத் தவறிவிடக் கூடாது.


இலக்கியத் துறையில் உங்களது நோக்கம் என்ன?

என் வாழ்வில் நான் கண்ட முதல் சோகம் 2003 இல் எனது தாயார் இறையடி சேர்ந்ததுதான். அதிலிருந்துதான் எனது இதயத்தின் ஓசைகளைப் பாஷைகளாக நான் மொழி பெயர்த்தேன். கவி வடித்தேன். அவ்வாறு எழுதும்போது எனது நோக்கம் என் துயரத்தை காகிதத்துக்கும் சுமக்கக் கொடுப்பதுதான். ஆனால் காலவோட்டத்தினால் கவிதையின், இலக்கியத்தின் போக்கு என் மனதில் ஒரு ஆறுதலையும் தேறுதலையும் தந்ததுண்மை. அந்த மாறுதலினால் என் சிந்தனை இலக்கியத்தில் சிக்கிக் கொண்டது. 

அதன் பின்னர் நான் கடந்து வந்த காலத்தில் பல சம்பவங்கள் எனக்கு படிப்பினையாக அமைந்தன. சிலரது வாழ்க்கை எனக்கு பாடமாக அமைந்தது. அவற்றையெல்லாம் அவதானித்து அந்தப் பிரச்சினைகளில் மற்றவர்கள் சிக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலும், யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலும் பேனா என்ற ஆயுதத்தை ஏந்தினேன். சமூகத்துக்கு எதிராகச் செயற்படும் விடயங்களுக்காக அந்தப் பேனாவை வாளாக மாற்றினேன். எனது நோக்கம் ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் வாசிப்பவரின் இதயத்தைத் தொட வேண்டுமென்பதே தவிர சுட வேண்டும் என்பதல்ல.


நூற்றுக் கணக்கானவர்களை நீங்கள் பத்திரிகை, சஞ்சிகை, இணையத் தளங்கள் வாயிலாக நேர்காணல் செய்துள்ளீர்கள். உங்களது அறிமுகம் மற்றும் நேர்காணல்கள் ஊடகங்களில் வெளிவந்தது தொடர்பாகப் பகிர்ந்து கொள்ளலாமே?

திக்குவல்லை ஸப்வான் என்ற ஆசிரியரே முதன் முதலாக என்னைப் பற்றிய அறிமுகத்தை தினகரனின் இணைப்பிதழான செந்தூரத்தில் முதன் முதலில் (2004.07.04) இடம் பெறச் செய்து என்னை ஊக்கப்படுத்தினார். அதைத்தொடர்ந்து இன்றுவரை 25 க்கும் மேற்பட்ட நேர்காணல்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சிகளில் வந்துள்ளது. 

ஊவா சமூக வானொலியில் நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியில் எனது நேர்காணல் ஒலிபரப்பப்பட்டுள்ளன. சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஒலிபரப்பான இந்த நேர்காணலை பாத்திமா ரிஸ்வானா செய்தார். இந்த நேர்காணல் மூலமே எனக்குத் தாராளமாகக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள அவகாசம் கிடைத்தது.

பிரான்ஸிலிருந்து வெளிவரும் தமிழ் நெஞ்சம் சஞ்சிகையின் 2020 ஜுன் மாத இதழிலும் எனது நேர்காணல் வெளிவந்தது.


இலக்கியத் துறையில் உங்களால் மறக்க முடியாத சம்பவம்?

விருது வழங்கும் ஒரு தனியார் அமைப்பு, பத்திரிகைகளில் ஆய்வு நூல் மற்றும் மொழி பெயர்ப்பு நூல் போன்றவற்றுக்கு விருது கொடுப்பதாக தகவல் தந்து, நூல்களை அனுப்பி வைக்கும்படி கோரியிருந்தார்கள். அதற்கிணங்க நானும் எனது விடியல் நூலைக் குறிப்பிட்ட அமைப்புக்கு நேரில் கொண்டு போய்க் கொடுத்தேன். சில நாட்களில் தொடர்பாளர் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி ஒரு இலக்கிய நிகழ்வைக் குறிப்பிட்டு அதற்கு வருமாறும், நிகழ்வு முடிந்த பின்னர் விடியல் நூல் பற்றிக் கதைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதன்படி நானும் குறிப்பிட்ட நிகழ்வுக்;குச் சென்றிருந்தேன்.

அந்த நிகழ்வு முடிவடைந்த பின்னர், தொடர்பாளர் என்னை ஒரு தனிப்பட்ட ரீதியாக நேர்காணல் செய்தார். இந்த நேர்காணலில் முழுக்க, முழுக்க எனது வருமானம், குடும்பப் பொருளாதார நிலைமை, தந்தையின் தொழில், ஆண் சகோதரர்களின் தொழில், அதிலும் வெளிநாட்டில் யாராவது குடும்பத்தவர்கள் வசிக்கின்றார்களா போன்ற கேள்விகள் முக்கிய பேசு பொருளாக அமைந்தன. அவர் எதிர்பார்த்த கேள்விகளில் அவருக்கு சாதகமாக எந்தப் பதிலும் அமையவில்லை.

நான் மிகவும் வறுமையான குடும்பத்திலிருந்து வந்தவள் எனும் உண்மையைச் சொன்னேன். அவரைப் பொறுத்தவரை அந்த நேர்காணலில் நான் தோல்வியடைந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். ஆகக் குறைந்தது அவரது பெயரை எனது விடியல் நூலில் குறிப்பிடவில்லை என்றும் கடிந்துகொண்டார்.

என்ன ஆச்சரியம் எனது விடியல் நூல் தேர்வுக் குழுவுக்கே போகவில்லை. இதுபற்றி மிகவும் உறுதியாகத் தெரிந்து கொண்ட நான், அவரிடம் எனது நூல் தொடர்பாக வினவினேன். அவர் மிகவும் காரசாரமாகப் பேசினார். உங்கள் நூலை தேர்வுக் குழுவுக்குப் அனுப்புவோம் அல்லது அனுப்பாமல் விடுவோம். அதனை முடிவு செய்வது நாங்கள். மட்டுமல்லாமல் நாங்கள் நினைத்தவர்களுக்குத்தான் விருதும் கொடுப்போம் என்று குறிப்பிட்டார். இதனை ஒரு கேள்வியாக கேட்டுக்கொண்டு நீங்கள் வருவது தான் சரியில்லை என்று கடுமையாகக் கடிந்துகொண்டார். 

அவர்கள் விரும்பியவர்களுக்கு விருதுகளைக் கொடுக்கட்டும். அதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை. ஏன் அதனைப் பத்திரிகையில் விளம்பரம் செய்து, பொதுமைப்படுத்திக் காட்டி, உலகை ஏமாற்றுகிறார்கள்? 

பின்னர் எனது இந்தப் பிரச்சினையை நான் அமைப்பின் தலைவருக்கு தெரியப்படுத்தினேன். அமைப்பின் தலைவரும், தொடர்பாளர் பேசியது போலவே என் கார், என் பெற்றோல், என் விருப்பம் என்ற அதிகாரத் தோரணையில்தான் பேசினார்.

சத்தியமாக எனக்கு விருது கிடைக்கவில்லை என்பது எனது கவலையல்ல. எனது நூல் தேர்வுக் குழுவுக்குப் போய், விருது கிடைக்காமல் இருந்தால் அது நியாயமானதே. அந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் ஒருவரும் எனது நூலைக் கண்ணாலும் காணவில்லை என்பதுதான் எனது வருத்தம். இப்படியான ஒரு போலிக் கும்பலுக்கு எனது நூலைக் கொடுத்தேன் என்று நினைக்கையில்தான் கவலையாக இருக்கிறது.

நூல் தரமாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குறிப்பிட்ட நபரை ஏதோ ஒரு (பொருளாதார) காரணத்துக்காக பிடித்திருந்தால் விருது கொடுப்பார்கள். இப்படி விருதுகள் பற்றி பலரும் பலதையும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்த ஒரு புதுமையான அனுபவம். இந்த நிகழ்வை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை.

இப்படித்தான் 2018 இல் முகநூல் நுட்(அற்)பமான குழுமமொன்று விழாவமைத்து எனக்கு ஷஷகலைப்பொழில்|| நுட்ப விருது தருவதாக அறிவித்து மூன்று மாதம் முகநூலில் பதிவுகள் போட்டு அமர்க்களப்படுத்தினார்கள். இவர்களை நம்பி பலரும் வெளிநாட்டிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். அவர்களிடம் நன்கொடையென்று சொல்லி பணம் எடுத்திருக்கிறார்கள். இறுதியில் விருது தயாரிப்பில் தாமதமாகி விட்டதென்று சொல்லி அவர்களைச் சமாளித்திருக்கிறார்கள். பெரும் செலவு செய்து இந்த விருது விழாவுக்காகவென்றே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மிகவும் வேதனைப்பட்டதாக பின்னர் நான் கேள்விப்பட்டேன். 

ஆகக் குறைந்தது எனக்கு ஒரு அழைப்பிதழையாவது இவர்கள் அனுப்பி வைக்கவில்லை. மட்டுமல்லாமல் அந்த குழுவினர் எனக்கு எந்த விதமான விருதுகளையும் இதுவரை அனுப்பி வைக்கவில்லை. இப்படியான அமைப்புகள் பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவது கேவலமாக இல்லையா? எனது பெயரை, எனது அனுமதியில்லாமல் பேஸ்புக்கில் விருது கொடுப்பதாகப் போட்டு, அவர்களது நிகழ்வை கௌரவப்படுத்திக்கொள்ளும் அவர்கள் இனியாவது திருத்திக்கொள்ள வேண்டும்.


நீங்கள் இதுவரை சாதித்ததும், சாதிக்க நினைப்பதும்?

2010 இல் பூங்காவனம் இலக்கிய வட்டத்தை நிறுவி, அதன் மூலம் இதுவரை 37 பூங்காவனம் காலாண்டு சஞ்சிகைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டிருப்பதைப் பெரும் சாதனையாகவே நினைக்கின்றேன். ஏன் என்றால் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு விளம்பரங்களைத் தேடுவதிலுள்ள சிக்கல், ஆக்கங்களைக் குறிப்பிட்ட காலத்துக்குள் தட்டச்சு செய்து கொள்வது, அச்சகங்களின் தாமதம் போன்றவற்றைத் தாண்டி குறிப்பிட்ட காலத்துக்குள் சஞ்சிகையை வெளியிடுவது ஒன்றும் அவ்வளவு இலேசான காரியமல்ல. எனவே அதை நான் சீராக வெளியிட்டு வருவதே ஒரு சாதனை என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது.

ஒரே துறையில் அல்லாது கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் இலக்கியம், ஆய்வு போன்ற பல தளங்களிலும் இலக்கியம் படைப்பதோடு மேலதிகமாக கணக்கீட்டுத் துறையையும் இணைத்து இதுவரை 13 நூல்களை வெளியிட்டிருப்பதும் என்னைப் பொறுத்த அளவில் ஒரு சாதனையாகவே நினைக்கிறேன்.

கணினி வடிவமைப்பும் முழுமையாக செய்த நிலையில் அச்சுக்குத் தயாராக இருக்கும் இன்னும் 5 நூல்களை எதிர்காலத்தில் ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும்.


ஊடகத் துறையிலும், இலக்கியத் துறையிலும் கால் பதிக்க ஆர்வத்துடன் காத்திருக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

இலக்கியம் என்பது ஒரு அழகான பூஞ்சோலை. அதிலே பலர் தேனெடுத்துக் கொண்டிருப்பார்கள். சிலரோ அப்பூஞ்சோலையை அழிக்க வாளெடுத்துக் கொண்டிருப்பார்கள். இலக்கியத் துறையில் சாதிப்பதற்கு பலர் எமக்கு கைகொடுத்தாலும் சில நேரங்களில் வெட்டுக் கொத்துக்கள் நிறைய இடம் பெறும். முதலில் அவற்றை எதிர்கொள்ள தைரியம் வேண்டும். அவ்வாறானவர்களைக் கண்டு ஒதுங்கி விடாமல் தன் முயற்சியில் உறுதியாக நிற்க வேண்டும். சமூகத்திற்காக தான் சொல்ல வந்ததை துணிவோடும் உளத் தூய்மையோடும் படைப்பாக்கம் செய்வதில் உறுதியாக நின்று முன்னேற வேண்டும்.


உங்கள் இலக்கியப் (இலட்சியப்) பயணம், மேலும் சாதனைகளுடன் தடம் பதித்து, வெற்றிவாகை சூட, செந்தூரம் இதழ் சார்பாக எம் இனிய வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறோம். 

- கலைஞர் கே. ஈஸ்வரலிங்கம்

No comments:

Post a Comment