Sunday, January 20, 2019

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'விடியல்' ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்

யாழ். ஜுமானா ஜுனைட்

பன்னூலாசிரியராகத் திகழும் வெலிகம ரிம்ஸா முஹம்மத் தனது கலையுலகப் பயணத்தின் அடுத்த கட்டமாக 'விடியல்' எனும் தலைப்பிடப்பட்ட நூலை வெளியிட்டுள்ளார். அழகானதொரு முன்னட்டைப் படத்தைக் கொண்ட 'விடியல்' ஓர் ஆய்வு நூலாகத் திகழ்கின்றது.

கவிஞர் மூதூர் முகைதீனின் பிட்டும் தேங்காய்ப் பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய மூன்று கவிதை நூல்களை அழகாக ஆய்வு செய்யும் இந்த விடியல் ஆய்வு நூல் இலக்கிய அபிமானிகளுக்கு மட்டுமன்றி மாணவர் உலகிற்கும் பயனளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. ஐந்து அத்தியாயங்களை அடுக்கடுக்காகக் கொண்ட 'விடியல்', ஆய்வு நூலின் ஒழுங்கு முறைகளுக்கு இசைவாக அமைந்திருப்பதுடன் கட்டுக்கோப்பான ஒரு நூலுருவில் நூலாசிரியரால் யாத்தமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன ஒற்றுமைக்குப் பாலமிடும் கவிதைகளை தனது ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்திருப்பது இக்கால கட்டத்திற்கு உசிதமான ஓர் அம்சமாகும்.

வைத்தியக் கலாநிதி எம்.கே. முருகானந்தன் சிறப்பானதொரு முன்னுரையை இந்நூலிற்காக வழங்கியுள்ளார். அதில் அவர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். 'இளம் - வளர்ந்து வரும் எழுத்தாளர் அதேநேரம் கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் கதை என்ற இலக்கிய உலகிற்கு அப்பால் கணக்கியல் துறையிலும் படைப்பாற்றல் பெற்ற பெண் எழுத்தாளரின் இப்புதிய நூலுக்கு முன்னுரை எழுதக் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது' என தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியவராக, தொடர்ந்து பல கருத்துக்களைக் கூறிக்கொண்டு செல்லும் அவர் இன்னுமோர் இடத்தில், 'ஆய்வுக்காக கடமை நிமித்தம் படித்து எழுதியது போலன்றி ஒவ்வொரு கவிதையிலும் மூழ்கி முத்தெடுத்து சிலாகித்து எம்மையும் அக்கவிஞரின் உலகிற்குள் அழைத்துச் செல்கிறார்.' என ரசனையுடன் படித்ததை சுவாரஸ்யமாகக் குறிப்பிடுகின்றார்.

மேலும் வைத்தியக் கலாநிதி முருகானந்தன் தன் முன்னுரையில், 'இன ஒற்றுமைக்குப் பின்பு தவறான முடிவுகளால் சந்தேகமும் பிரிவும் ஏற்பட்டமை, இதனைத் தாண்டி மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை கவிதைகள் ஊடாக மூதூர் முகைதீன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை வெலிகம ரிம்ஸா முஹம்மத் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.' எனத் தொடர்ந்து செல்லும் அவர், 'ஆய்வு நூல் என்பதற்கப்பால் சகல தரப்பு வாசகர்களும் சுவாரஷ்யமாக வாசிக்கக்கூடிய முறையில் இந்த நூலை ஆக்கிய நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்| என்றவாறு தனதுரையை முடிக்கின்கிறார்.

கிண்ணியா எஸ். பாயிஸா அலி தனது வாழ்த்துரையில், 'சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் நம் நாட்டு முஸ்லிம் பெண் படைப்பாளிகள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வரிசையில் முன்னிலையில் தனித்துவப் போக்கோடு மிளிர்பவர். கவிதை, மெல்லிசைப்பாடல், சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் என சமூகத் தளத்தில் தனக்கெனப் பல அடையாளங்களை வெளிப்படுத்தி வருபவர். பூங்காவனம் எனும் கலை இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு பல்வேறு படைப்பாளிகளுக்குக் களம் அமைத்துக் கொடுப்பவர்.' எனக்கூறிச் சென்று இறுதியில் 'இன ஒற்றுமையையும் சமூக நல்லுறவையும் வலியுறுத்தும் மூதூர் முகைதீனின் கவிதைகள் பல்வேறு இலக்கியத் திறனாய்வாளர்களினாலும் ஆராயப்பட்டிருப்பினும் சகோதரி ரிம்ஸாவின் திறனாய்வுப் பார்வையும் அவரது அழகிய மொழி நடையும் கவிஞர் மூதூர் முகைதீனின் கவிதைகளுக்கு மென்மேலும் அழகையும் பொலிவையும் புதுப்புது ஆற்றல்களையும் காட்டி நிற்பதனைக் காண முடிகின்றது.' என்று முடிக்கிறார்.

நூலாசிரியர் தனதுரையில் தான் இதழியல் டிப்ளோமாப் பாடநெறியைக் கற்ற காலப்பகுதியில் சமாதானத்தை வலியுறுத்தி நிற்கும் மூதூர் முகைதீனின் கவிதைகள் பற்றி ஆய்வை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் அத்தியாயத்தில் கவிதைகள் பற்றிய அறிமுகத்தை வழங்கும் நூலாசிரியர், ஆய்வின் பிரச்சனை, நோக்கம், ஆய்வு முறையியல், ஆய்வின் வரையறை, ஆய்வு உள்ளடக்கம் என்பன பற்றி சிறப்பாக விளக்குகிறார். இரண்டாம் அத்தியாயத்தில் முதலாவதாக கவிதைக்கான வரைவிலக்கணத்தினை அலசும் அவர், 'கவிதைக்குத் திட்டவட்டமான வரைவிலக்கணங்கள் கிடையாது, எனினும் பொதுவாக கவிதை பற்றிச் சொல்வதென்றால் உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடு எனச் சுருக்கமாகச் சொல்லலாம்' என்கிறார். ஒரு கவிதையைப் படித்துவிட்டு குறிப்பிட்ட நான்கு கேள்விகள் கேட்கும் போது அதற்கு ஆம் எனும் விடை கிடைத்தால் அது நல்ல கவிதை என முடிவு செய்யலாம் என்று கூறும் நூலாசிரியர் அவற்றில் முதலாவது கேள்வி கவிதையின் வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒரு தரம் ஒலித்து உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பதாகும் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு கவிதை பற்றி தொடர்ந்து சுவாரஷ்யமான பல விளக்கங்களைக் கொடுக்கின்றார். அடுத்து கவிதைகளின் வகைப்பாடுகளை அழகாகவும் எளிதாகவும் முன்வைக்கும் நூலாசிரியர் நவீன கவிதை பற்றியும் கூறியுள்ளார்.

மூன்றாம் அத்தியாயத்தில் கவிஞர் மூதூர் முகைதீனைப் பற்றிய அழகானதொரு இலக்கியப் பார்வையை வாசகர்களுக்குத் தந்துள்ளார். அவரால் வெளியிடப்பட்ட பல நூற்களுள் ஆய்வுக்காக பிட்டும் தேங்காய்ப்பூவும், இழந்துவிட்ட இன்பங்கள், ஒரு காலம் இருந்தது ஆகிய 03 கவிதைத் தொகுதிகளையும் நூலாசிரியர் தெரிவு செய்திருப்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. ஏனெனில் அக்கவிதைகள் பிளவுற்றிருக்கும் சமூகங்களுக்கிடையில் சமாதானத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றன.

நான்காம் அத்தியாயம் விடியல் இப்புத்தகத்தின் இதயமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் தான் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ரிம்ஸா முஹம்மதினால் அழகுற அலசி ஆராயப்படுகின்றது. மேற்கூறப்பட்ட மூன்று கவிதைத் தொகுதிகளிலும் ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளுக்கு நூலாசிரியர் அற்புதமான விளக்கங்களை முன்வைத்துள்ளார். அத்தியாயம் ஐந்தில் கவிதைகளின் சமூக கலாசார பங்களிப்புக்களைப் பற்றிக் கூறியுள்ளார். 'இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்று சொல்லப்படுகின்றன. அதிலும் கவிதைகள் உணர்ச்சி பூர்வமாக மனிதனின் வாழ்வியலைப் பற்றி பேசக்கூடியனவாகும். வரலாறுபற்றி பல புத்தகங்களைப் படித்து விளங்குவதைவிட ஓர் ஆழ்ந்த கவிஞனின் கவிதையைப் படிப்பதனூடாக புரிந்துகொள்ளுதல் இலகுவாகின்றது| எனக் கூறும் நூலாசிரியர் அதே அத்தியாயத்தில் 'கவிதைகளை இரசிக்கும் ஆற்றல் உள்ளவர்கள் தம் மனதை சந்தோசப்படுத்தத் தெரிந்தவர்கள்' என கவிதைகளின் முக்கியத்துவம் பற்றி அழகுற வார்த்தைகளால் வார்க்கின்றார்.

ஈற்றில் தனது முடிவுரையில் 'உண்மையான ஒரு சமாதானம் வளர வேண்டுமானால் கவிஞர்கள் மாத்திரமன்றி ஒவ்வொருவரும் சமாதானத்தை விரும்ப வேண்டும் அதன் மூலம் ஐக்கியமான ஒரு நாடு, ஓர் உலகம் இனியாவது அரும்ப வேண்டும்' என சமாதானத்தின் முக்கியத்துவத்தை வாசகர்களுக்கு வலியுறுத்தியுள்ளார் நூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத்.

பின்னட்டைக் குறிப்பில் பன்னூலாசிரியர், மொழிபெயர்ப்பாளர் திக்குவல்லைக் கமால் அவர்கள், வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களைப் பற்றி 'தளிர்விட்டதும் தரித்துவிடும் மூடுதிரைக் கலாசாரத்துக்குள்ளிருந்து ஒரு கையில் எழுதுகோலும் மறு கையில் ஒளிச் சுடருமாய் முகிழ்ந்தெழுந்தவள் இவள்.. கதையாய்க் கவிதையாய் மதிப்புரையாய் தொடர்கிறது இவள் சுவடுகள்.. புத்தங்கள் பூத்தன ஒரு பூங்காவனமாய்ப் பூரித்தாள் இவள்..' எனத் தொடர்கின்றார்.

'விடியல்' நூல் ஆசிரியரான ரிம்ஸா முஹம்மத் அவர்கள் ஒரு பன்னூலாசிரியரும் பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மிகவும் பயனுள்ள இந்நூல் மூலம் தனது அடுத்த கட்ட சேவையை சமூகத்துக்கு இவர் சிறப்பாக ஆற்றியுள்ளார். இந்த விடியல் நூலானது, நூலாசிரியரின் 13 ஆவது நூல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவரது அடுத்தகட்ட நகர்வை ஆவலுடன் எதிர்பார்த்து பன்னூலாரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்களின் பணி தொடர வாழ்த்துகின்றேன்!!!

நூல்:- விடியல்
நூல் வகை:- ஆய்வு
நூலாசிரியர்:- ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி:- 0775009222
மின்னஞ்சல்:- poetrimza@gmail.com
விலை:- 400 ரூபாய்


யாழ். ஜுமானா ஜுனைட்

Friday, January 4, 2019

விடியல் நூலுக்காக கிண்ணியா எஸ். பாயிஸா அலி அவர்கள் வழங்கிய வாழ்த்துரை

விடியல் நூலுக்காக கிண்ணியா எஸ். பாயிஸா அலி அவர்கள் வழங்கிய வாழ்த்துரை

சகோதரி ரிம்ஸா முஹம்மத் நம் நாட்டு முஸ்லிம் பெண் படைப்பாளிகளில், இலக்கியச் செயற்பாட்டாளர்கள் வரிசையில் தனித்துவப் போக்கோடு மிளிர்பவர். கவிதை, மெல்லிசைப் பாடல், சிறுகதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம் என சமூகத் தளத்தில் தனக்கெனப் பல அடையாளங்களை வெளிப்படுத்தி வருபவர். பூங்காவனம் எனும் கலை இலக்கியச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகச் செயற்பட்டு பல்வேறு படைப்பாளிகளுக்கும் களம் அமைத்துக் கொடுப்பவர்.

மேலும், கணக்கீட்டுத் துறையில் MAAT, MIAB பட்டங்களைப் பெற்றிருப்பதோடு க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர் தரம் கற்கும் மாணவருக்குப் பயனளிக்கும் வகையில் கணக்கீடு தொடர்பான பல்வேறு நூல்களை வெளியிட்டிருப்பதை இவரது துறைசார் புலமைக்கும் சான்றெனக் கொள்ளலாம்.

அத்தோடு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாவைப் பயின்ற காலப் பகுதியில் இவர் மேற்கொண்ட ஊடகத்தின் வாயிலாக இன ஒற்றுமைக்குப் பாலமிடும் கவிஞர் மூதூர் முகைதீனின் கவிதைகள் தொடர்பான ஆய்வை ''விடியல்'' என்ற தலைப்பில் நூலாக்கியிருப்பது இலக்கிய அபிமானிகளுக்கு மாத்திரமன்றி உயர் தர, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்குத் தமது ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பான தேடல்களை இலகுபடுத்தக் கூடியதும் பயனளிக்கக் கூடியதுமான ஒரு அரிய முயற்சியாகும் என்பதில் ஐயமில்லை.

இத்திறனாய்வு நூலானது கவிஞர் மூதூர் முகைதீன் அவர்களின் இலக்கிய அனுபவங்களையும் அவரது கவித்துவ புலமையையும், அரசியல், சமூக, கலாசார சிந்தனைத் திறனையும் நமக்குத் தெளிவாகப் புலப்பட வைக்கின்றது. அவரது சாதனைகளுக்குக் கிடைத்த கௌரவங்களுக்கும், சமூகத்தோடு அவர் கொண்டுள்ள நெருங்கிய உறவுகளுக்குமான அடையாளச் சின்னமாக இந்த ஆய்வு நூல் திகழ்கின்றது. ஒருமுறை மூதூரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற போது அவருக்குக் கிடைத்த கௌரவங்களைக் கண்டு அசந்து போன சொந்த அநுபவமொன்றையும் இங்கு பதிவிட்டே ஆக வேண்டும்.

இன ஒற்றுமையையும் சமூக நல்லுறவையும் வலியுறுத்தும் அவரது கவிதைகள் பல்வேறு இலக்கியத் திறனாய்வாளர்களினாலும் ஆராயப்பட்டிருப்பினும் சகோதரி ரிம்ஸாவின் திறனாய்வுப் பார்வையும் அவரது அழகிய மொழி நடையும் கவிஞர்  மூதூர் முகைதீனின் கவிதைகளுக்கு மென் மேலும் அழகையும் பொலிவையும் புதுப் புது அர்த்தங்களையும் காட்டி நிற்பதனைக் காண முடிகிறது.

மிகுந்த மரியாதைக்குரிய எமது மூத்த இலக்கிய செயற்பாட்டாளரான முகைதீன் ஆசியருக்கும் எழுத்தாளர் ரிம்ஸாவுக்கும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!!!

நூல்:- விடியல் 
நூலின் வகை:- ஆய்வு
நூலாசிரியர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு:- 0775009222
மின்னஞ்சல்:- poetrimza@gmail.com
விலை:- 400/=

விடியல் நூலுக்காக வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன் அவர்கள் வழங்கிய முன்னுரை

விடியல் நூலுக்காக வைத்திய கலாநிதி எம்.கே. முருகானந்தன் அவர்கள் வழங்கிய முன்னுரை

திசை எல்லாம் தமிழ்க் கவிதை. விழி படும் தாள் எல்லாம் கவிதைகளும் கவிஞர்களும். பத்திரிகை, சஞ்சிகை,   நூல்கள், இணையம் எங்கணும் நிறைந்து வழிகின்றன.  நீக்கமற வியாபித்தும் கிடக்கின்றன. சற்றே மலிந்தும் என்றும் சொல்லலாம்.

இத்தகைய சூழலில் தேர்ந்தெடுத்த ஒரு கவிஞனின் படைப்பாளுமைiயும் சமூக நோக்கையும் நோக்குவதோடு  இன ஐக்கியம் நோக்கிய அவனது உன்னத பயணத்தையும் ஆய்வு செய்கின்ற நூல் ஒன்று உங்கள் முன் விரிந்து கிடக்கிறது.

கவிதைக் கடலில் ஆழக் கால் பதித்ததுடன் உருவகக் கதை, விமர்சனம், இலக்கியக் கட்டுரை என பல துறையில் தன் ஆற்றலைப் பதிவு செய்த மூத்த எழுத்தாளர் ஒருவரது படைப்புகள் பற்றி, இளம் வளர்ந்து வரும் அதேநேரம் கவிதை, சிறுகதை, விமர்சனம், சிறுவர் கதை என்ற இலக்கிய உலகுக்கு அப்பால் கணக்கியல் துறையிலும் படைப்பாற்றல் பெற்ற பெண் எழுத்தாளரின் இந்தப் புதிய நூலுக்கு அணிந்துரை எழுதக் கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது.

இது ஒரு ஆய்வு நூல். மூதூர் முகைதீன் அவர்களது கவிதை உலகை ஆய்வு செய்ய முற்படுகிறது. ஏனோதானோ என்ற ஆய்வாக இல்லாமல் விமர்சனத் துறையில் புலமையும் வித்தகமும் கொண்ட ஒருவரால் வரன் முறையாகச் செய்யப்படும் ஆய்வாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்கின்றேன். ஆனால் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில் அவரது இலக்கிய ஈடுபாடு பற்றியும், அர்ப்பணிப்பு பற்றியும் ஏற்கனவே நன்கு அறிந்திருக்கிறேன். நீர்வை பொன்னையனின் வழிகாட்டலில் இயங்கிய இலக்கிய குழுவில் மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்து செய்பட்ட இவருக்கு அதற்கான ஆற்றல் நிச்சயம் இருக்கவே செய்கிறது.

முதல் அத்தியாயமானது மூதூர் முகைதீன் அவர்களின் படைப்புகளை எந்த வகையில் இந்த நூல் ஆய்வுக்கு உட்படுத்துகிறது என்பதைக் விளக்குகிறது. அடுத்த அத்தியாயமானது கவிதை என்றால் என்ன, அதன் வகைகள் எவை, கால மாற்றத்துடன் கவிதை உலகில் ஏற்பட்ட மாற்றங்களையும் வளரச்சியையும் பேசுகிறது. மூன்றாவது அத்தியாயம் கவிஞர் மூதூர் முகைதீன் பற்றியும் அவரது படைப்புலகம் பற்றியுமான அறிமுகத்தைத் தருகிறது.

நூலின் முக்கிய பகுதி நாலாவது அத்தியாயம்தான். கவிஞரின் மூன்று கவிதை நூல்களை அடிப்படையாக வைத்து அவரது படைப்புலகையும் ஆற்றலையும் மிகவும் விரிவாகவும் ஆழமாகவும் பார்க்கும் பகுதி. மூதூர் முகைதீன் அவர்களின் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த உதாரணங்களின் துணையோடு தன் கருத்துக்களை முன்வைக்கிறார்.

ஆய்வுக்காக கடமை நிமிர்த்தம் படித்து எழுதியது போலன்றி அந்த நூலின் ஒவ்வாரு கவிதையிலும் மூழ்கி முத்தெடுத்து சிலாகித்து எம்மையும் அந்தக் கவிஞனின் உலகிற்குள் நுழைந்து ரசனையுடன் மூழ்க வைக்கும் பகுதியாக உள்ளது.

இன ஒற்றுமை பின்பு தவறான முடிகளால் சந்தேகமும் பிரிவும் ஏற்பட்டமை இதனைத் தாண்டி மீண்டும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை தனது கவிதைகள் ஊடாக மூதூர் முகைதீன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பதை வெலிகம ரிம்ஸா முஹம்மத் சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.

காலத்தின் தேவையான முக்கிய கருத்தை கவிஞரும் ஆய்வாளரும் முன்னிலைப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உதாரணத்திற்கு, இனங்கள் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் புரிந்துணர்வுடன் வாழ்ந்த காலம் இருந்தது. ஒருவரது இன்பங்களிலும் துன்பங்களிலும் ஓருயிர் போல பங்கெடுத்த காலம்.

சின்னராசாவின் பக்கத்தில்
அன்வர் இருந்து
மோதகம் உண்பான்
ஐயர் வந்து சிரித்தபடியே..
அவித்த கடலையையும்
அள்ளிக் கொடுப்பார்..

எத்துணை நிஜமான வரிகள்.

ஷஷமுஸ்லிம்களின் நோன்புப் பெருநாளைக்கு தமிழர்கள் வந்து சாப்பிடுவதும், தமிழரின் பண்டிகைகளின் போது முஸ்லிம் மக்கள் ஒன்று கூடி விரும்பிச் சாப்பிடுவதும் அந்தக் காலம் தொட்டே நிகழ்ந்து வந்திருக்கின்றது. பாரபட்சம் பார்க்காமல், இன மதம் பார்க்காமல் ஒற்றுமையை எந்தளவுக்கு கடைப்பிடித்திருக்கின்றார்கள் என்பதை மேலுள்ள கவிதை வரிகளில் நன்கு உணர முடிகின்றது.' என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

ஓவ்வொருவரது வாழ்விலும் இத்தகைய நிகழ்வுகள் அந்நாளில் சகஜமாயிருந்தன. போர் வந்தது. சந்தேகங்கள் உதயமாயின. வலுக்கட்டாய இடப் பெயர்வு எல்லாவற்றையும் அடியோடு குலைத்தது.

இந்நிலை மாற வேண்டும். மக்கள் பகைமைகளை மறந்து மீண்டும் ஒன்று கூடிவாழ வேண்டும் என்பதைக் கவிஞனின் பின் வரும் வரிகளை எடுத்துக் காட்டி வலியுறத்துகிறார்        நூலாசிரியர்.

இனத்தின் பெயரால் நாம் பிரிந்து
இணங்கி வாழும் வழி மறந்து
மனதில் பகைமை தான் வளர்த்து
மனித நேய மாண்பிழந்து
பிணக்கில் வாழும் பிழைதீர
பிறப்பின் நோக்கைப் புரிந்திங்கே
குணத்தை மாற்றிக் குறை நீக்கி
கூடி ஒன்றாய் வாழ்வோம் நாம்

கவிஞர்கள் என்போர் தத்தமது காலத்தில் நிகழும் விடயங்கள் பற்றி எழுதி வைப்பவர்கள். அப்போதுதான் எதிர்காலத்தவர்களுக்கு முன்னைய காலம் பற்றி அறிந்து
கொள்ளக் கூடியதாய் இருக்கும். பிரச்சனை பற்றித் தமது எழுத்துக்களினூடாக சமூகத்தாருக்கு பெற்றுக்கொடுப்பதே ஒரு எழுத்தாளனின் பணியாகும். அத்தகையவர்களுக்கு கவிஞர் மூதூர் முகைதீனின் கவிதைகள் என்று தனது அவதானத்தை செலுத்துகிறார் நூலாசிரியர்.

சிறுவர்களிடமும் இன ரீதியான ஒற்றுமை வளர்ந்தோங்க வேண்டும். அவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் வாழக் கற்றுக் கொள்வார்கள். வீடுகள் பாடசாலைகள் அறநெறிப் பாடசாலைகள் சிறுவர்களிடத்தில் மாணவர்களிடத்தில் இத்தகைய நல்ல பண்பை வளர்க்க உதவி புரிய வேண்டும். போன்ற உயரிய கருத்துக்களை கவிஞரின் படைப்புகளிலிருந்து உதாரணங்களோடு எடுத்துக் காட்டியிருப்பது முக்கியமானது.

வெறும் ஆய்வாக இல்லாமல் இந் நாட்டின் சமூகங்கள் பயணிக்க வேண்டிய வழியை சொல்லும் நூலாகவும் இது அமைகிறது.

ஷஷதிரும்பிப் பார்க்க முடியாத
தூரத்தில் இருக்கும்
சமாதான மலர்களின் மணத்தை
மறுபடியும் நுகரும் ஆவலில்'

எனக் கவிஞர் முகைதீன் ஒருகாலம் பாடியிருந்தார். இல்லை.
காலம் கனிந்து விட்டது. ஐக்கியம் புரிந்துணர்வு இனங்களின் சௌஜன்யம் யாவும் புலர்வற்கான ஒளிக் கீற்றுகள் பரவத் தொடங்கிவிட்டன என்பதற்கு கவிஞர் முகைதீனின் சில கவிதைகளும் வெலிகம ரிம்ஸா முஹம்மத்தின் ஆய்வு வரிகளும் சாட்சியமாக இருக்கினறன என்பதை இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது.

ஆய்வு நூல் என்பதற்கு அப்பால் சகல தரப்பு வாசகர்களும் சுவாரஸ்மாக வாசிக்கக் கூடிய முறையில் இந்த நூலை ஆக்கிய நூலாசிரியருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அவரது எதிர்கால இலக்கிய முயற்சிகள் மேலும் மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்!!!

நூல்:- விடியல் 
நூலின் வகை:- ஆய்வு
நூலாசிரியர்:- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொடர்புகளுக்கு:- 0775009222
மின்னஞ்சல்:- poetrimza@gmail.com
விலை:- 400/=