Wednesday, October 7, 2015

அறுவடைகள் விமர்சன நூலுக்கான வாழ்த்துரை - வவுனியூர் இரா. உதயணன் (இலண்டன்)

அறுவடைகள் விமர்சன நூலுக்கான வாழ்த்துரை

ஈழத்து இலக்கிய வரலாற்றில் படைப்புக்களை எழுதுபவர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆனால் அந்த படைப்புக்கள் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லும் பணியைச் செய்பவர்கள் மிகவும் குறைவு. கே.எஸ். சிவகுமாரன், மா. பாலசிங்கம், கே. விஜயன், தம்பு சிவசுப்பிரமணியம் போன்ற மூத்த தலைசிறந்த விமர்சகர்களின் வரிசையில் தற்போது வெலிகம ரிம்ஸா முஹம்மதும் இணைந்திருக்கிறார்.

அறுவடைகளின்போது சிறந்த விளைச்சல்களே பெற்றுக்கொள்ளப்படும். அதேபோல ஒரு படைப்பு குறித்த சிறந்த பதிவுகளே  ‘அறுவடைகள்என்ற இந்தத் தொகுதியிலும் வியாபித்திருக்கின்றது. பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த நூல்களின் விமர்சனங்களே இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

எழுத்தாளர்கள் விடுகின்ற சிறியசிறிய தவறுகளை பூதாகரமாக்கி அவர்களை இலக்கிய உலகத்தைவிட்டே ஓட வைக்கின்ற விமர்சனங்கள்கூட இன்று ஒருசிலரால் எழுதப்பட்டு வருகின்றன. அவை சுயவிமர்சனம் செய்யபட்டு வெளியிடப்படுகின்றனவா என்ற ஐயம் எழுகின்றது.

ஒரு படைப்பை உருவாக்குதல் என்பது இலகுவான காரியமல்ல. மனதில் தோன்றுகின்ற உணர்வுகளுக்கு உயிரளித்து எழுதப்படுவதே இலக்கியமாகும். அவ்வாறு எழுதும் படைப்பு பற்றி தரக்குறைவாக பேசுவதை விடுத்து பக்கச்சார்பின்றி நடுநிலமையாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.
ஏனைய எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்களைச் செய்வதற்கு பரந்துபட்ட மனது இருக்க வேண்டும். அத்தகையோர்களால்தான் சமநிலையில் நின்றுகொண்டு, தான் வாசித்த படைப்பு குறித்த ஆழமான தகவல்களை பக்கச்சார்பின்றி தர முடிகின்றது. அந்த வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத், தான் வாசித்த நூல்கள் குறித்த தனது பார்வையை வாசகர்களுக்கு விருந்தாக்கியிருக்கும் பாங்கு சிறப்பானது. அவரது பணி மகத்தானது. கண்டன விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மனிதநேயக் கருத்துக்களடங்கிய விடயங்களே இதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமை அவதானத்துக்குரியது.

பல்துறைகளிலும் விற்பன்னர்களாயிருக்கின்றவர்கள் இலக்கியவாதிகளாகவும் செயற்படுகின்றனர். அதனால் பற்பல அனுபவங்களை ஏந்திய படைப்புக்கள் அவற்றுக்கூடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம். சமாந்தரமான தளங்களிலிருந்து எழுதுவதற்கு அப்பாற்பட்ட மிக முக்கியமான முயற்சிகள் இப்படைப்புக்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். அவற்றையெல்லாம் தற்போது ரிம்ஸா முஹம்மத் வெளியிட்டுள்ள அறுவடைகள் தொகுதியில் ஒருசேர தரிசிக்கின்ற வாய்ப்பு நம் அனைவருக்கும் வாய்த்திருக்கின்றது.
இவ்வாறான முயற்சிகளில் மனம் தளராமல் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் இப்பெண் எழுத்தாளர் பாராட்டுக்குரியவர். அவரது முயற்சிகள் மேலும் விண்ணை எட்ட வேண்டும். அவருக்காக நாங்கள் கைதட்ட வேண்டும். அவரது இலக்கிய முயற்சிகள் மேலும் மேலும் சிறப்பாக தொடர்வதற்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்!!!

வவுனியூர் இராஉதயணன் - இலண்டன்

தலைவர் - இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம்

அறுவடைகள் விமர்சன நூலுக்கான அணிந்துரை

அறுவடைகள் விமர்சன நூலுக்கான அணிந்துரை - சோபத்மநாதன்

தென் மாகாணத்தின் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் ரிம்ஸா முஹம்மத். இதழியல் மற்றும் கணக்கீட்டுத் துறைகளில் பட்டம் பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துத் துறையில் தீவிரமாக இயங்கி வருகிறவர். வலைத்தளம் மற்றும் இணைய இதழ்களினூடாகப் பரந்ததொரு வாசகர் கூட்டத்தோடு தொடர்பாடல் செய்து வருபவர் ரிம்ஸா.  இந்த இளம் வயதிலேயே பல விருதுகளையும் பரிசுகளையும் வாங்கிக் குவித்திருக்கும் இப்பெண் எழுத்தாளர் நம்மையெல்லாம் வியக்க வைக்கிறார்பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவர் அவ்வப்போது எழுதிய விமர்சனங்களின் தொகுப்பேஅறுவடைகள்என்ற பெயரில் தற்போது நூலுருப் பெற்றுள்ளது.




கவிதை நூல்கள், சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், சிறுவர் இலக்கியம் மற்றும் நானாவித வெளியீடுகள் பற்றிய ரிம்ஸாவின் பார்வைகளை  ‘அறுவடைகள்பதிவு செய்கிறது.

ஆழியாளுடையகருநாவுதொகுதியில் வரும் கவிதை இது:

வார்த்தைகளாலும் பாஷைகளாலும்
பேசித் தீர்த்துக் கொள்ள முடியாத
எல்லாவற்றையும்
மிகச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடிகிறது
துப்பாக்கிச் சன்னங்களால்

இலங்கை அரசியலில் சில தசாப்தங்களாக இதுவே நியதியாகிவிட்டாலும், லஸந்த விக்கிரமதுங்க என்ற துணிச்சல் மிக்கநீதிக்காகப் போராடியஒரு பத்திரிகையாளனுடைய அநியாயச் சாவு பற்றிய எதிர்வினை இது என்றறியும்போது நெஞ்சு அதிரவே செய்கிறது.

இந்தத் தலைமுறைக் கவிஞர்களுடைய படைப்புக்களில் ஆங்காங்கே மின்னும் புதிய கற்பனைகள் ஆச்சரியமூட்டுபவை.
               
பகலவன் வெம்மையில்
படியிறங்கக் காணுமொரு பொலித்தீனாய்
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு
உன் தொடர் புறக்கணிப்புக்களால்

என பாயிஸா அலி பயன்படுத்தும் உவமை தற்புதுமையானதுகவிஞர்கள் - எல்லாக் கலைஞர்களுமே தம் சூழலைக் கூர்ந்து நோக்குபவர்களாக இருப்பர். அப்படி அவதானிப்பவர்களால் தான் நல்ல படைப்புக்களைத் தரமுடியும்.

எஸ். முத்துமீரான் நிந்தவூரைச் சேர்ந்தவர், வழக்கறிஞர். சிறுகதைகள், உருவகக் கதைகள், கவிதைகள் எனப் பரந்துபட்டுக் கிடக்கின்றன அவர் படைப்புக்கள்கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள், வாய்மொழிக் கதைகள் மற்றும் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டு அரும்பணி புரிந்தவர் முத்துமீரான்.

அவருடைய  ‘அண்ணல் வருவானா?’ என்ற கவிதைத் தொகுப்பு தமிழ் நாட்டின் நேர்நிரைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளதுஎதையெதையோ கவிதையென்று படிக்க வேண்டியிருக்கிறதே என்று நொந்து போயிருக்கும் என் மனசுக்கு முத்துமீரான் கவிதைகள் ஒத்தடமாயிருக்கின்றன.

வண்ணக்குருவியாய் என்னைப் படைத்து நீ
வானில் பறக்கவிடு - நான்
கண்ணீரில் வாடிக் கதறியழும் மக்கள்
கவலையைப் போக்கிவர.
வையம் செழித்து வளங்கள் பெருகிட
வாழ்த்தி எனையனுப்பு..
படைப்புக்கள் எல்லாமே பிரமனின் சொத்தென்று
பறையை அடிப்பதற்கு - நான்
பாடிப் பறந்துபோய் ஓடியே வந்திட
பாதையைக் காட்டிவிடு!

என வீறுநடை போடுகிறது முத்துமீரான் கவிதை.

கல்வியுலகிலும் எழுத்துலகிலும் தம்பெயர் நிறுவியவர் கலைவாதி கலீல். அவருடைய  ‘ பலஸ்தீனமே நஜீ அல் அலியும் ஹன்ஸல்லாவும்’(மன்னார் படிப்பு வட்ட வெளியீடு) என்ற நூலை அறிமுகம் செய்கிறார் ரிம்ஸா. பலஸ்தீன விரோதப் போக்கைக் கடைப்பிடிப்போரைக் கண்டித்து நஜீ அல் அலி வரைந்த கூடார்த்த சித்திரங்களுக்கு கலீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பே இந்நூல். இது புதுமையானதொரு முயற்சி.

பதுளை சேனாதிராஜாவின்  ‘குதிரைகளும் பறக்கும்மற்றும் நீர்வை பொன்னையன் எழுதியநினைவுகள் அழிவதில்லைஆகிய சிறுகதைத் தொகுதிகள் பற்றிப் பயனுள்ள குறிப்புக்கள் தந்துள்ளார் ரிம்ஸா.

ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தடம்பதித்தவர், சாகித்திய விருதுகள் பெற்ற சாதனையாளர்  திக்வல்லை கமால். ‘வீடுஎன்ற அவருடைய அற்புதமான நாவல் ரிம்ஸா தேர்ந்துள்ள அறிமுகங்களில் மிக முக்கியமானது எனலாம். இரண்டு தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களைவீடுஎன்ற பிரச்சினை எவ்வாறு ஆட்டிப் படைக்கிறது என்பதை வாசகர் மனசைத் தொடுமாறு சித்திரிக்கிறார் கமால்.

இலங்கையின் தென்கோடியிலுள்ள இரண்டு முஸ்லிம் பிரதேசங்களைக் களமாகக்கொண்டு கதை நகர்கிறதுஇஸ்லாமியருடைய வாழ்வியல் - பண்பாட்டு அம்சங்கள் யதார்த்தமாக இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.

அறுவடைகள்சிறுவர் இலக்கியம், திறனாய்வு முதலிய துறைகளையும் உள்ளடக்குகிறதுதியத்தலாவை எச்.எப். ரிஸ்னா, கே.எஸ். சிவகுமாரன் முதலியோருடைய படைப்புக்கள் குறித்த மதிப்பீடுகள் பயனுள்ளவை.

மொத்தத்தில், இந்நூல் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் பரந்துபட்ட வாசிப்புக்கும் ஓயாத உழைப்புக்கும் சான்றாக மிளிர்கிறது. அவரை வாழ்த்துகிறேன்!!!

ஏரகம்’,
பொற்பதி வீதி,
கொக்குவில்.