தகவல் பொக்கிஷமாக வெலிகம முஹம்மதின் விடியல் ஆய்வு நூல்
- கே.எஸ். சிவகுமாரன்
ஈழத்தில் பிறந்த எழுத்தாளர்களும், இலங்கையில் பிறந்து பிற நாடுகளில் குடிபுகுந்த பல கவிஞர்களும், நம்நாட்டு ஊடகங்களிலும், மின்னியக்க முகநூல்களிலும் நிறையவே எழுதி வருகிறார்கள். இவர்களுள் கணிசமான எண்ணிக்கையுடையவர்கள் முஸ்லிம் பெண்களாவர். இது வரவேற்கத் தக்க ஒரு போக்கு. அவர்களுள் ஒருவர், வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், "பூங்காவனம்" என்ற சஞ்சிகையை நடத்தி வருபவருமான ரிம்ஸா முஹம்மத் என்பவராவார். இவர் கவிதை, கட்டுரை, கதைகளோடு, நேர்காணல்களையும், திறனாய்வுகளையும் எழுதி வருகிறார்.இதுவரை 14 நூல்களை எழுதியுள்ளார். அவருடைய நூல்களில் ஒன்று 'விடியல்' (2017) என்பதாகும். வைத்திய கலாநிதி எம்.கே. முகுகானந்தன் இந்த நூல் என்ன கூறுகின்றது? எப்படிக் கூறுகின்றது? ஏன் அப்படிக் கூறுகின்றது? என்பதை அழகாக விபரித்துள்ளார். வாசகர்கள் இவரது முன்னுரையை அவசியம் வாசித்துப் பயன்பெற வேண்டும்.
இந்த நூல், மூதூர் முகைதீன் என்ற கவிஞரின் கவிதைகளை கச்சிதமாக பகுப்பாய்வு செய்கிறது. கவிஞரின் மூன்று கவிதைத் தொகுப்புகளை ரிம்ஸா ஆராய்கிறார்.
ரிம்ஸாவின் தகைமைகள், முகைதீனின் ஆளுமை போன்ற பொருள்கள் பற்றி, ஆசிரியை கிண்ணியா எஸ். பாயிஸா அலி சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.
நூலாசிரியர் ரிம்ஸா கூறுகிறார்: "கொழும்பு பல்கலைக் கழகத்தின் இதழியல் டிப்ளோமா பாட தெறிக்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை "விடியல்" என்ற தலைப்பில் சில விடயங்களை சேர்த்தும், சில விடயங்களைத் தவிர்த்தும் இந்நூலை வெளியிடு செய்கிறேன்."
நூலாசிரியர் மொத்தமாக ஐந்து அத்தியாயங்களில் தனது பார்வையைச் செலுத்தியுள்ளார். எவற்றை விரிவுபடுத்தி விளக்கமாக அமைகிறது என்பதையறிய, வாசகர்கள், குறிப்பாக பல்கலைக்கழக, மாணவர்கள் 'விடியல்' என்ற நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும்.
உள்ளடக்கச் சிறப்புகளை நான் வேறு எடுத்துக் கூறுவது அவசியமில்லை. முடிவுரையும், உசாத்துணை நூல்கள், பின்னினைப்புகள் ஆகியனவும் பயன் தருவன.
மறைந்த திறனாய்வாளரும் (விமர்சகரும் கூட) நாவலாசிரியரும், சஞ்சிகை ஆசிரியருமான க.நா.சு. அவர்களின் கூற்றுக்களை, நூலாசிரியர் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
நூலாசிரியர் தமிழிலக்கியத்தில் புலமை பெற்று உள்ளார் என்பதை விளக்க அவரது கூற்று ஒன்று போதுமானது. அதாவது:
"தொண்ணூறுகளுக்குப் பின் வந்த கவிதைகளின் போக்குகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்: திராவிட இயக்கத் தாக்கம், இனக் குழு அடையாளம், தொன்மம், மண் சார்ந்த படைப்பு என வெளிப்படும் பின் நவீனத்துவக் கவிதைகள், மண்சார்ந்த கவிதைகள் போன்றனவாகும்."
சில குறிப்பிட்ட தமிழகக்காரர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, "சிற்றூர், கிராமம் சார்ந்த வாழ்க்கைச் சித்திரங்கள் நகரமயமாதலின் விளைவு, வாய்மொழி வழக்கில் எழுதும் தன்மை, உள்ளூர் அனுபவங்களை உலகளாவிய போக்குகளுடன் இணைத்தல் எனப் புதிய மாற்றங்களை இக்கவிஞர்களால் தமிழ் கவிதை பெற்றது" என்கிறார் ரிம்ஸா.
கவிதையின் வெளிப்பாடுகள் என்ற தலைப்பில் தமிழகக் கவிஞர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அவை எனக்குப் பல தகவல்களைத் தருகின்றன.
அத்தியாயம் 03 இல், கவிஞர் மூதூர் முகைதீன் பற்றிய முழுவிபரங்களும் தரப்படுகின்றன. அதுவே கட்டுரையாசிரியரின் நோக்கமாகும். அக்கவிஞர் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள இந்த ரிம்ஸாவின் நூல் பெரிதும் உதவுகிறது.
சிறந்த சிங்கள இலக்கிய மொழி பெயர்ப்பாளராகவும், திறனாய்வாளராகவும், கவிஞராகவும், பேச்சாளராகவும் விளங்கும் திக்குவல்லை கமால் பின் அட்டையில் குறிப்பிடும் சில வரிகள் அழகாய் அமைந்துள்ளன. அவர் கூறுகிறார்:
ரிம்ஸா "வேதனைகளையும் சோதனைகளையும் வென்றபடி, சாதனைகளை அடுக்கிச் செல்லும் அபார திறமைசாலி என்பதை அடிக்கடி உறுதிப்படுத்திக் கொள்கிறார். தென்னிலங்கை என்று நாம் கொண்டாட எமக்கிருந்த இடைவெளியை நிரப்பிக் கொண்டு கம்பிரமாக நிமிர்ந்து நிற்கிறார்."
படித்துப் பயன்பெற 'விடியல்' நூலை வாசித்துப் பாருங்கள்.
நன்றி - தினகரன் வாரமஞ்சரி
No comments:
Post a Comment