Thursday, November 20, 2025

03. 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை


நூல் கண்ணோட்டம்:- 

பவானி சச்சிதானந்தன், கொழும்பு.


மீண்டும் ஓர் நூலாய்வின் ஊடாக தங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இன்று நான் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூல் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'பிஞ்சு மனம்' என்ற சிறுகதைகளடங்கிய நூலாகும்.

வெள்ளை மஞ்சள் சிகப்பு கலந்த பல அழகிய வண்ணத்தில் சிறு குழந்தையின் புன்னகைக்கும் முகத்துடன் 'பிஞ்சு மனம்' சிறுகதைகள் என தலைப்பிட்டு வண்ணாத்துப் பூச்சிகள் இரண்டையும் பதிவிட்டு முன்னட்டை அழகுற, பின்னட்டை ஆசிரியரின் புகைப்படத்துடன் கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களின் வாழ்த்துரை சிறந்திட பூங்காவனம் இலக்கிய வட்ட முகவரி அடங்கலுடன் வெளிவந்திருக்கின்றது இந்த சிறுகதை நூல். உள்ளே நூலாசிரியரின் ஏனைய வெளியீடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு பதிவுத் தரவுகளை அடங்கியுள்ளார். 

நூலுக்கான அணிந்துரையை கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களும், முன்னுரையை கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுப் பிரிவு பிரதி ஆணையாளர் லெனின் மதிவானம் அவர்களும், வாழ்த்துரையை முன்னாள் உளவியல் (வருகைதரு) விரிவுரையாளர் அல்ஹாஜ். யூ.எல்.எம். நௌபர் அவர்களும் எழுதியுள்ளார்கள். ஈற்றில் என்னுரையை முன்வைத்த நூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத், தனது மாமாவான எழுத்தாளர் எஸ்.ஐ.எம். ஹம்ஸா அவர்களுக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.

நூலின் உள்ளடக்கம் பதினெட்டு சிறுகதைகளின் தலைப்புகளைத் தாங்கியதாக 152 பக்கங்களில் வெளிவந்துள்ளது. நான் ஏழு சிறுகதைகளை மட்டுமே இங்கு எனது ஆய்வுக்காக எடுத்து, வாசகர்களுக்காக முன்வைத்துள்ளேன். 

முதலாவது சிறுகதை 'பிஞ்சு மனம்' என்ற நூலின் தலைப்பிலேயே நூலை அழங்கரித்து நிற்கின்றது. இக்கதையில் ஏதோ ஒரு காரணமாக சிறார்கள் வளரும் போது தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும் இறுக்கமான மனதோடும் இருக்கிறார்கள். ஒப்பீடு வகையிலும் மனம் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களால் சிறுபராயம் தொட்டே கவலைப்படும் நிலையில் நிறம் ஒரு பிரச்சினையாகக் காண்பிக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதன் பின்னர் வளர்ந்து பெரியவளான நிலையில் தெளிவான சிந்தனையோடு தன் மனதை இலகுவாக்கிய விதத்தில் கூறியுள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது.

'மனிதம் வாழும்' என்ற கதை ஏழ்மையை மதிக்கத் தெரிந்த அற்புதமான மனிதராக ராஸிக் மௌளவியை விவரித்துள்ள விதமும் ஒரு நல்லவரின் மரணம் எத்தனை இதயங்களை வலிக்க வலிக்க பேச வைக்கின்றன என்ற கருத்தையும் கூறி, இறுதியாக மூன்று பெண் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்த தகப்பனாரான ராஸிக் மௌளவி சுவர்க்கம் புகுவார் என்பதற்கு இணங்க நஸீராவுடன் இணைந்து நாமும் இணைந்து துஆக் கேட்போம் என்று கதையை அழகாக நிறைவு செய்துள்ளார். 

அடுத்த கதையாக 'பலன்' என்ற கதை ஏழையானவர்களிடம் திறமை கலந்த நல்ல பண்பை நிதர்சனமாக உணர கடவுள் பல சந்தர்ப்பங்களைக் கொடுப்பார் என்ற கருத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பணக்கார வர்க்கத்தினரின் தேவைப்பாடுகள் முழுமையுமே பணத்தைக் கொண்டே ஈடு செய்ய பணக்காரர்கள் பழகியிருப்பார்கள். அங்கே ஏழைக்கு மரியாதை என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரமாய் நிற்க, ஏழ்மையை இகழ சாதாரணமாக ஒழுக்கத்தையே நிந்தனை செய்து குறை சொல்ல துணிந்திடுவது யதார்த்தமே. இருந்தும் அதற்கான பலன்களை இம்மையிலேயே இறைவன் கொடுத்துவிடுகிறான் என்ற உண்மையை இக் கதை சுட்டிக்காட்டுகின்றது. 

இன்னும் ஒரு சிறந்த கதையாக 'உறவுகள்' என்ற கதை நூலை அலங்கரித்து நிற்கின்றது. காவியா - ஹாசினியுடனான நட்பில் வழிகாட்டியாகி எந்தவிதமான எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல் உதவும் மேன்மையான குணம் கொண்ட காவியா, ஹாசினியின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பல சுகமான வழிகளை அமைத்துக் கொடுத்து அகம் மகிழ்கின்றாள். வயது வித்தியாசமற்ற நட்பின் அழகை உயிரோட்டமாகக் கூறுகின்ற இனிய கதையாக இக்கதை அமைந்துள்ளது. 

'மௌனம' இன்னுமொரு உயர்வான சமூக ரீதியாக நிரூபிக்க பால்ய சிநேகிதர்களான சாமில் - சாஜித் இருவரையும் காண்பித்து சுயநலமாக தனது தேவைகளை நிறைவேற்றி பெற்றோரையும் சகோதரங்களையும் எண்ணிட மறந்த சாமிலுக்கு, சாஜித் கூறும் அறிவுரை மற்ற சுயநலமிகளும் படிப்பினையாக உணர்ந்து செயல்பட சிறந்த கதையாக அமைகின்றது.

'வாழ்க்கை வளைவு' என்ற கதையில் தனது மனைவி இறைவனடி சேர்ந்ததும் காதர் நானாவின் வாழ்நாள் தலைமைத்துவத்தை இழந்து வயதுக்கேற்ற சாப்பாடு, தண்ணீர் கிடைக்காது தடுமாறி பால்ய நண்பன் மக்கீனிடம் கூறி கவலைப்படும் நிலை பரிதாபமாகரமானதாக இருக்கிறது. பிள்ளைகளுக்காக சொத்து பிரிக்கப்பட்டுள்ள நிலையில் தனக்காக எதுவும் வைத்துக்கொள்ளாத தந்தை தனிமைப்பட மறைந்த மனைவியின் இடத்திலான வெற்றிடம் நிறைக்கப்படாத கொடுமை, கலங்கி நிற்க வைத்துள்ள கடினமான வாழ்க்கை ஆகியவற்றை தொட்டுக்காட்டி நகரும் இக்கதையும் சிறப்பாக அமைந்துள்ளது. 

அடுத்ததாக 'வீடு' என்ற கதை நிஸாம், பரீத், நவ்பர் ஹாஜி என சில நல்ல உள்ளம் கொண்டவர்களை நினைவில் நிறுத்தி வடித்த கதையாக நூலில் இடம்பிடித்துள்ளது. சமூக நலன்களுக்காக பலர் முயற்சிக்க சரியான முறையில் சிறப்பாக நடந்து வலுப்படுத்தினால் வெற்றிபெற முடியும் என்ற உண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. இக்கதையும் நூலாசிரியரின் சிறந்த சமூக நல சிந்தனையை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. 

ஆக நூலில் இடம்பெற்றுள்ள அத்தனை கதைகளும் பல நல்ல விடயங்களை ஒப்புவித்து வாசிப்போரை சளைக்காத வகையில் இழுத்துச் செல்கின்றது. இப்படியாக இன்னும் பல சமூக நலக் கதைகளை நூலாசிரியர் படைக்க வேண்டுமென்ற வேண்டுதலை முன்வைத்து வாழ்த்துகளைக் கூறுவதில் மகிழ்கின்றேன்.


நூல் - பிஞ்சு மனம்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

தொலைபேசி - 0775009222

வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்

விலை - 1,000 ரூபாய்



நூல் கண்ணோட்டம்:- 

பவானி சச்சிதானந்தன், கொழும்பு.


02. 'பிஞ்சு மனம்' நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்

 'பிஞ்சு மனம்' நூல் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்


நூல் விமர்சனம்:- மரீனா இல்யாஸ் ஷாபீ


இனிப்பும் கசப்புமான அனுபவங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் ஏற்படுகின்றன. நாம் வாழும் சூழலில், பழகும் மக்கள் மத்தியில் நிகழும் அன்றாட அவலங்களும் ஆச்சரியங்களும் வெறும் செய்தித் துணுக்குகளாக எம்மைக் கடந்து செல்கின்றன. ஆனால், ஓர் எழுத்தாளன் அத்தகைய அனுபவங்களை வெறும் கண்களால் பார்த்துவிட்டுக் கடந்து செல்வதில்லை. அவன் அதை இதயத்துக்கு எடுத்துச் செல்கிறான். மூளைக்கும் கடத்துகிறான். சமூகப் பின்னணியுடன் சேர்த்துப் பிசைந்து, அதற்கு உணர்வுகள் ஊட்டி வேறு ஒர் உருவம் கொடுத்து மீண்டும் நம்மிடமே கொண்டு வந்து சேர்க்கிறான். அந்தவகையில் 'பிஞ்சு மனம்' என்னை வந்தடைந்தபோது நான் ஒரு நீண்ட பயணத்தில் இருந்தேன். நூலில் சேர்த்துக்கொள்வதற்கு ஒரு கருத்துரை கேட்டார்  நூலாசிரியை ரிம்ஸா முஹம்மத். ஆனால் அவர் கேட்கும் அவசரத்தில் நூலை வாசிக்கவோ, கருத்துரை எழுதவோ எனக்கு அவகாசம் இருக்கவில்லை. அதற்குப் பிரதியுபகாரமாக இன்று இந்த நூல் கண்ணோட்டத்தை எழுதுகிறேன்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் கணக்கீட்டுக் கற்கை நூல்கள், கவிதை நூல்கள், நூல் விமர்சனங்களடங்கிய தொகுதிகள், சிறுவர் நூல்கள், ஆய்வு நூல் என்பவற்றை வெளியிட்டுள்ளதுடன் 'பூங்காவனம்' என்ற காலாண்டு இலக்கிய சஞ்சிகையையும் வெளியிட்டு இலக்கிய உலகுக்கு வளம் சேர்த்து வருகிறார்.

சிறுகதைத் துறையில் 'பிஞ்சு மனம்' என்ற இந்தச் சிறுகதைத் தொகுதி அவரது கன்னி நூலாகவே வெளிவருகிறது. இலங்கை வாழ் தமிழ் பேசும் சமூகங்கள் மத ரீதியாக வேறுபட்டிருந்தாலும் மொழி ரீதியாக ஒன்றுபட்டவர்கள். அதனால் ஒரு சமூகத்தின் வாழ்வியல் அம்சங்கள் அடுத்த சமூகத்துக்குள்ளும் இயல்பாக ஊடுருவிச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு மதம் கடந்து நிற்கும் மானுட வாழ்வின் அனுவபவங்களை தன் எழுத்துக்கு உரமாக்கி இருக்கிறார் ரிம்ஸா முஹம்மத்.

'பிஞ்சு மனம்' தொகுதியில் இடம்பெற்றுள்ள 18 கதைகளுள், 9 கதைகள் தமிழர் வாழ்வியல் பின்னணியில் தமிழ்க் காதாபாத்திரங்களைக் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளன. ஏனைய 9 கதைகளும் முஸ்லிம் சமூகப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. 

இந்தத் தொகுதியில் இருக்கும் கதைகளில் முக்கியமான கருப்பொருள்களில் ஒன்றாக குழந்தை உளவியல் காணப்படுகிறது. மகுடத் தலைப்பிலமைந்த முதல் சிறுகதையான 'பிஞ்சு மனம்' (பக்கம் 17) என்ற கதையில் வரும் பவித்ரா என்ற சிறுமி தன் தங்கைகளை விடவும் நிறம் குறைந்தவளாக இருப்பதால், பாரபட்சமாக நடாத்தப்படுகிறாள். அதனால், அவளுக்குள் தாழ்வுச் சிக்கல் ஏற்படுகிறது. பொறாமை அவளை ஆட்டிப் படைக்கிறது. எங்கள் சமூகத்தில் எங்களுடன் ஒட்டி உறவாடும் பெரியவர்களின் எண்ணங்களும் சின்னச் சின்னச் செயல்களும் எப்படி குழந்தைகளைப் பாதிக்கின்றன என்ற குழந்தை உளவியலின் தெளிவான மற்றும் யதார்த்தமான சித்தரிப்பாக 'பிஞ்சு மனம்' என்ற சிறுகதை இந்தத் தொகுதிக்கு நல்லதொரு ஆரம்பத்தைக் கொடுக்கிறது.

இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் சில கதைகள், உண்மைச் சம்பவங்களாக இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு யதார்த்தமாக எழுதப்பட்டிருக்கின்றன. 'மனிதம் வாழும்' (பக்கம் 34) என்ற கதையில் ராசிக் மௌலவிக்காக துஆ கேட்போம் என்று கதையை முடித்திருக்கும் பாணி, அந்த எண்ணத்துக்கு வலுவூட்டுகின்றது.

'இறையச்சம்' (பக்கம் 48) என்ற கதையில் வரும் ஆயிஷா என்ற சிறுமி தொழுவதில்லை என்பதற்காக பலர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படுகிறாள். வீட்டில் ஆயிஷாவின் தந்தை தொழுவதில்லை. வீட்டுக்குள் அதற்கான சூழலையோ, முன்மாதிரியையோ உருவாக்காமல் ஒரு காரியத்தை செய்வதற்கு குழந்தைகளை வற்புறுத்தினால் அவர்களிடம் உண்மையையும் நேர்மையையும் எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்த்த முற்படுகிறது 'இறையச்சம்' என்ற சிறுகதை. 

'சப்பாத்து' (பக்கம் 70) என்ற சிறுகதை வறுமையில் வாடும் ஒரு சிறுமியின் சப்பாத்துக் கனவுகளை மட்டும் சிதைத்து விட்டுச் செல்லவில்லை. பாடசாலைகளில் போட்டி நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும்போது, ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, திறமையான ஏனைய மாணவர்கள் ஓரம்கட்டப்படும்போது, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும்  மாணவர்களின் நிலையை நாசுக்காக சுட்டிக் காட்டுகிறார் கதாசிரியர். அது மட்டுமல்ல, பாடசாலைகளில் கொண்டு வரப்படும் நிர்வாக ரீதியான மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கூட, பாடசாலையை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள். காய்ச்சல் என்று பொய்ச்சாக்குச் சொல்லிப் படுத்திருக்கும் பரீனாவின் உளவியல் போராட்டம் பாடசாலை நிர்வாகத்துக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இவ்வாறு குழந்தைகளின் உளவியல் போராட்டங்களை வைத்தே சில கதைகளை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார் ரிம்ஸா முஹம்மத்.

எழுத்தாளர்கள் சமூகத்தின் வழிகாட்டிகள், நேர்மையானவர்கள் என்ற பிரமை பொதுவாக மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் அவர்களைத் தரம் தாழ்த்தி விடுகின்றன. இன்றைய இலக்கிய உலகில் விருது வழங்கும் நிகழ்வுகள் திறமைக்கான அங்கீகாரம் என்ற நிலை மாறி, காசுக்கு விற்கப்படும் கலாச்சாரமாக உருமாறி வருவதை 'பொறாமை' (பக்கம் 123) என்ற கதை மூலம் தோலுரித்திக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்.

மனிதனின் தார்மீகக் குணங்கள் மரித்துவிட்டதா என்று நினைக்கும் அளவுக்கு நம்மைச் சுற்றி அருவருக்கத் தக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்பதை ரிம்ஸாவின் சில கதைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதே வேளை, 'உறவுகள்' (பக்கம் 77), 'வீடு' (பக்கம் 146)  போன்ற கதைகள் மூலம் மனிதம் மீது நம்பிக்கையை விதைக்கவும் கதாசிரியர் ரிம்ஸா முஹம்மத் முயற்சித்திருக்கிறார். 

சில இடங்களில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை வைத்தும் தன் கதைகளை நகர்த்தி இருக்கிறார் ரிம்ஸா. இறையச்சம், வாழ்க்கை வளைவு போன்ற சிறுகதைகள் இதற்கு நல்ல உதாரணங்களாகும். சில கதைகள் நேரடியாகப் பிரச்சாரம் செய்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துவதாக நான் நினைக்கிறேன். அதாவது, கதாபாத்திரங்களில் இருந்து பிரிந்து, கதாசிரியராக அவரே சில இடங்களில் பேசி இருக்கிறார். இதில் தவறு இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.

'ஒரு எழுத்தாளன் தன் சமூகத்தை, அவனது உலகத்தை பிரதிபலித்து விளக்க வேண்டும்;. அவனது எழுத்துக்கள் உத்வேகம் அளிக்க வேண்டும். வழிகாட்ட வேண்டும்' என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் இ.பி. வைட் அவர்கள். ஆனால், வாசகரிடம் பிரசங்கிப்பது போல் அல்லாமல்,   கதையை கதாபாத்திரங்களின் பார்வையில் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. 

தென்னிலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களான மர்ஹூம் எம்.ஐ.எம். ஹம்ஸா, மர்ஹூம்  திக்குவல்லை ஷம்ஸ், திக்குவல்லை கமால், திக்குவல்லை ஸப்வான், திக்குவல்லை ஸும்ரி  போன்றோர் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்த்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வரிசையில் வெலிகம ரிம்ஸா முஹம்மதும் இன்னும் காத்திரமான படைப்புகளை இலக்கிய உலகுக்குத் தரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்!


நூல் - பிஞ்சு மனம்

நூல் வகை - சிறுகதை

நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்

வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்

விலை  - 1,000 ரூபாய்

தொலைபேசி - 0775009222



நூல் விமர்சனம்:-

மரீனா இல்யாஸ் ஷாபீ



Wednesday, November 19, 2025

01. 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

 'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை

நூல் கண்ணோட்டம்:- சுமைரா அன்வர்


சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 15 ஆவது நூலாக அண்மையில் வெளியிட்ட 'பிஞ்சு மனம்' (சிறுகதைகள்) நூலை வாசிக்கும் வாய்ப்பெனக்குக் கிடைத்தது. 'பிஞ்சு மனம்' தொடங்கி 'வீடு' வரை 152 பக்கங்களில் பதினெட்டு சிறுகதைகளை உள்ளடக்கியிருக்கும் இந்த நூல் அழகான அட்டைப் படத்துடன் கருத்தைக் கவர்ந்துவிடுகிறது. இந்தக் கதைகளை வாசித்து நான் பெற்ற அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நாம் வாழும் சூழலிலுள்ள சமகால நிகழ்வுகளை மையமாகக் கொண்ட நம்மோடு உலவும் சக மாந்தர்களையே காத்திரமான கதாபாத்திரத்திரங்களாக்கி, உயிரோட்டமும் உணர்வும் மிக்க சிறந்த கதைகளைப் படைத்துள்ளார் சகோதரி ரிம்ஸா முஹம்மத். இந்த நூலில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சிறுகதைகளுமே நிறைய செய்திகளைச் சொல்லுகின்றன. மனதில் பதிந்து நிற்கின்றன. சமூகத்துள் இலைமறை காயாக இருக்கும் பல பிரச்சினைகளைத் சகோதரி ரிம்ஸா முஹம்மத் துணிவுடன் முன்வைத்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

நூலில் முதல் சிறுகதையாக பக்கம் 17 இல் இடம் பெற்றுள்ள 'பிஞ்சு மனம்' என்ற அருமையான சிறுகதை மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. உரிய அன்பு கிடைக்காது அநியாயமாக நிராகரிக்கப்பட்ட பிஞ்சு மனம் படும் அவஸ்தையை  யதார்த்தமாக வெளிப்படுத்தும் கதாசிரியை எம்மையும் அழ வைக்கிறார். அதேவேளை கதையின் நிறைவு எம் மனதையும் சற்று ஆறுதல் படுத்துகிறது. இக்கதையில் பிரச்சினையையும் எடுத்துக் காட்டி அதற்கான தீர்வையும் வெளிப்படுத்தியுள்ளமை சிறப்பாக உள்ளது.

பக்கம் 24 இல் அமைந்துள்ள 'பணம் பந்தியிலே', 'நன்றிக்கடன்' (பக்கம் 138) ஆகிய இரு கதைகளின் மூலம்; 'கடன்' படுத்தும் பாட்டையும் உறவுகளின் முறிவுக்கு எப்படியெல்லாம் கடன் காரணமாகின்றது என்பதையும் அச்சொட்டாக கதாசிரியர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

'மனிதம் வாழும்' (பக்கம் 34), 'வீடு' (பக்கம் 146) ஆகிய சிறுகதைகள் மூலம் மனித நேயம் மிக்க மனிதர்களும் எங்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை, மனதை ஆகர்ஷிக்கும் வகையில் கதாசிரியர் சகோதரி ரிம்ஸா முஹம்மத் எடுத்துக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

'சப்பாத்து' (பக்கம் 70) என்ற தலைப்பிலான சிறுகதையும் பிஞ்சு மனமொன்றின் 'வலிகளை' மிக ஆழமாகப் பதித்துள்ளது. புறக்கணிப்பும் அடுத்தவர் நிலையைப் புரிந்துகொள்ளாமையும் திறமைக்கு வாய்ப்பளிக்காமையும் எமது சமூகத்தில் சாதாரணமாக நிகழும் சம்பவங்களாகி வருவதைக் கண்கூடாகவே காண்கிறோம். இந்த சிறுகதை மூலம் அவ்வாறான ஒரு சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டு நிற்கின்றது.

'வாழ்க்கை வளைவு' (பக்கம் 100) அருமையான 'பேசுபொருளை' உள்ளடக்கிய சிறுகதையாகும். வாழ்க்கைத் துணையை இழந்த ஒருவரின் (கணவனின்) மனத் துயரங்களை, சகோதரி ரிம்ஸா மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறான கருப்பொருளை தேர்ந்தெடுத்த சகோதரியை பாராட்டியேயாக வேண்டும்.

இந்நூலிலிருந்த 18 சிறுகதைகளில் சில கதைகளையே எனது பார்வையில் நானிங்கு பதிவேற்றியுள்ளேன். எளிமையான மொழிநடையில், எதுவித அலட்டலுமில்லாமல், மிக யதார்த்தமான முறையில், ஆனால், கனதியான 'கருப்பொருளாக்கி', சமூகத்துள் தன் சிறுகதைகளைப் பேசுபொருளாக்கி தன் திறமையைப் புடம்போட்டிருக்கும் இலக்கிய ஆளுமை, பன்னூலாசிரியர் சகோதரி ரிம்ஸா முஹம்மத் அவர்களின் திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அத்தோடு, இனிவரும் காலங்களில் மேலும் பல சிறுகதை நூல்களை வெளியிட வேண்டுமென்பதென் அன்பான வேண்டுகோள். 


நூல் - பிஞ்சு மனம்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 1,000 ரூபாய்


நூல் கண்ணோட்டம்:- சுமைரா அன்வர்

Friday, January 10, 2025

2025.01.05 தினகரன் வாரமஞ்ரியுடன் வெளிவரும் இணைப்பிதழான செந்தூரம் இதழில் எனது அட்டைப் படம் தாங்கி வெளிவந்த நேர்காணல்.

 தெற்கிலிருந்து புலர்ந்த புதுமை இலக்கியப் புலரி 

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


செந்தூரம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர். இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், விமர்சகர், சஞ்சிகையாசிரியர்  மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.


'பிஞ்சு மனம்' நூல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, பன்னூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்களுடனான சிறப்பு நேர்காணல்

நேர்கண்டவர்:- கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான்


உங்களை நான் எப்படியாக தெரிந்து கொள்ள முடியும்?



நான் ஈழத்தின் தெற்குப் பகுதியிலுள்ள வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்டவள். ஊரின் பெயரை எனது பெயரோடு சேர்த்துக்கொண்டு வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரிலேயே இலக்கிய உலகில் அறிமுகமாகினேன். எனது குடும்பத்தில் நான் மட்டுமே இலக்கியத் துறையுடனும் ஊடகத் துறையுடனும் தொடர்புடையவள். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியும், தேசிய கல்வி நிறுவக முன்னாள் செயற்திட்ட அதிகாரியும், அபிவிருத்திப் புவியியல் நூலின் ஆசிரியருமான திக்குவல்லை ஹம்ஸா என்று இலக்கியத் துறையில் நன்கு பெயர் பதித்த, உறவு முறையில் எனக்கு மாமாவான மறைந்த எஸ்.ஐ.எம். ஹம்ஸாவின் மூலமே எனக்குள் கலை இலக்கிய ஆர்வம், எழுத்துத் துறை, படைப்பாக்கத் துறை போன்றவை ஊடுகடத்தப்பட்டதாக நினைக்;கின்றேன்.


இலக்கியமானது எப்படியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?

போராட்டகரமான மனித வாழ்வில் ஒரு சாதாரண மனிதனுக்கு மன அமைதி தருவதாகவே இலக்கியம் இருக்க வேண்டும். ஒரு பயனுள்ள பொழுதுபோக்காகவும் இருக்க வேண்டும். அத்துடன் அறிவை வளர்த்துக்கொள்ளவும் வாசிப்பு, இலக்கியம் போன்றவை உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை அதாவது அவர்களின் துன்ப துயரங்கள், அவலங்கள், போராட்டங்கள் போன்றவற்றை எடுத்துச் சொல்லி அவர்களின் வாழ்வின் எழுச்சிக்கு நல்லதொரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தித் தரக்கூடியதாகவே இலக்கியம் இருக்க வேண்டும். மொத்தத்தில் வாசிக்கின்றவர்கள் மனதில் ஒரு உந்துசக்தியை ஏற்படுத்துவதாகவே இலக்கியம் இருக்க வேண்டும்.


தனிப்பட்ட வாசிப்புகள் எந்தவகையில் உங்களின் எழுத்துகளுக்கு உதவியாக இருக்கிறது?

வாசிப்பு ஒரு மனிதனை பூரணமாக்கும் என்று சொல்லப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை தீவிர வாசிப்பு ஒரு மனிதனை நிச்சயமாக எழுத வைக்கும் என்றும் நான் சொல்வேன். உள்நாட்டு மூத்த எழுத்தாளர்களது நூல்கள் பலவற்றையும் நான் விரும்பி வாசிப்பேன். அவற்றுள் ஒரு சில நூல்கள், நான் புத்தக விமர்சனங்களை பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதி வருவதால் நூலாசிரியர்களிடமிருந்து எனக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. ஏனையவை புத்தக வெளியீட்டு நிகழ்வுகளுக்கு அழைப்புக் கிடைக்கும் பட்சத்தில் அந்தந்த வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்குச் சென்று, காசு கொடுத்து, வாங்கி வந்து வாசிக்கும் பழக்கமாகவே இருக்கிறது.

இந்திய எழுத்தாளர்களது நூல்களை காசு கொடுத்து வாங்கி அல்லது வாசிகசாலையால் பெற்றே வாசிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து ஒரு சில நூல்களையும் வாசித்திருக்கிறேன். ஆனால் தரவிறக்கம் செய்யப்பட்ட நூல்களை வாசிப்பதில் சில அசௌகரியங்கள் இருக்கின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை. இவ்வகையிலான வாசிப்பே எனது எழுத்து முயற்சிகளுக்கு பெரிதும் உதவியாக அமைந்தது என்று உறுதியாகக் கூறலாம். 


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக ஊடகங்களில் எழுதி வரும் நான் இதுவரை 15 நூல்களைப் பிரசுரித்துள்ளேன். நான் எழுதி பிரசுரித்துள்ள நூல்களை பின்வருமாறு பட்டியலிட்டுக் குறிப்பிடலாம்.


01. வங்கிக் கணக்கிணக்கக் கூற்று (கணக்கீடு) 2004

02. கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) 2008

03. கணக்கீட்டின் தெளிவு (கணக்கீடு) 2009

04. தென்றலின் வேகம் (கவிதை) 2010

05. ஆடம்பரக்கூடு (சிறுவர் கதை) 2012

06. என்ன கொடுப்போம் (சிறுவர் கதை) 2012

07. பாடல் கேட்ட குமார் (சிறுவர் கதை) 2013

08. இதுதான் சரியான வழி (சிறுவர் கதை) 2013

09. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்) 2013

10. வண்ணாத்திப் பூச்சி (சிறுவர் பாடல்) 2014

11. அறுவடைகள் (விமர்சனம்) 2015

12. எரிந்த சிறகுகள் (கவிதை) 2015

13. விடியல் (ஆய்வு) 2017

14. எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம் (ஆவணம்) 2021

15. பிஞ்சு மனம் (சிறுகதை) 2024


இதில் கிடைசியாக பிரசுரமான 'பிஞ்சு மனம்' என்ற நூலே 2025 ஜனவரி 05 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.


நீங்கள் வெளியீடு செய்துள்ள படைப்புகளின் முழுமையான பட்டியலைப் பார்த்தால் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உங்களது இந்த வயதுக்குள் நீங்கள் அதிகமாக எழுதிக் குவித்துள்ளீர்கள் என்று நினைக்கத் தோன்றுகின்றதே?

இலக்கியத் துறையில் மிகவும் ஆர்வமாக ஈடுபாடு காட்டி வருகின்றேன். வாசிப்புப் பழக்கம் என்னில் ஆரம்பித்தது நான் தரம் 08 இல் படிக்கும் காலத்திலாகும். அதிகமான வாசிப்பே என்னை எழுத வைத்தது. அப்படி ஆயிரக் கணக்கில் எழுதியவற்றை அவ்வப்போது கால இடைவெளிவிட்டு நூலாக வெளியிட்டு வருகின்றேன். கொரோனாக் காலங்களில் நூல் வெளியீடுகளைச் செய்ய முடியவில்லை. சுமார் 06 வருடங்களுக்குப் பின்னர் இப்போதைய காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொண்டேன்.


சிறுகதைகள் என்றால் அவற்றில் முக்கியமாக எந்தெந்த அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்று சொல்லுங்கள்?

முதலில் கதைக்காக நல்ல கரு அமைய வேண்டும். அதன்பின் அதனைச் சுற்றிப் பின்னப்படும் இசைவான சம்பவங்கள், சம்பவத்தின் துணையோடு அவற்றைக் கொண்டு செல்லும் ஆற்றொழுக்கமான எழுத்து நடை, பிரதேசப் பேச்சு வழக்கிலமைந்த கதைக்கு வலுவூட்டும் உரையாடல்கள், எல்லாவற்றிற்கும் மேலாக சிறுகதையாசிரியரின் மொழியாட்சி போன்றன எல்லாம் நல்லதொரு சிறுகதைக்கு அவசியமாகவே இருக்கின்றன.


ஒரு நல்ல சிறுகதையின் பண்புகளாக எவற்றை முன் வைப்பீர்கள்? பொதுவாக சிறுகதைகளில் வர்ணனைகள் இடம் பெறலாமா?

சிறுகதைகளின் முக்கியமான பண்புகளாக பின்வருவனவற்றை முன்வைக்கலாம். தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு சிறுகதைகள் பிரதிபலிக்க வேண்டும். சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் போன்றவைதான் தலை தூக்கியிருக்க வேண்டும். விரிவான வர்ணனைகளுக்கு சிறுகதைகள் இடம் கொடுக்கக்கூடாது. குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக் காட்டப்பட வேண்டும்.

பாத்திரங்களின் உரையாடல்களில் சிறப்பான முறையில் சொற்கள் அமைக்கப்பட வேண்டும். சிறுகதை அளவிற் சிறியதாய் இருப்பதோடு முழுமை பெற்றிருக்க வேண்டும். சிறுகதைகள் நம்பக் கூடிய உண்மைத் தன்மை பொதிந்ததாகக் காணப்பட வேண்டும். மொத்தத்தில் நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் (நாவலாக) விரிவாகக் கூடிய கதைக் கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல சிறுகதை என்பது மனதோடு கலந்த இசை போன்றது. கேட்ட மாத்திரத்திலேயே மனம் அதில் இலயிக்க வேண்டும். பாடலின் இறுதிவரை அதே குதூகலம் இருக்க வேண்டும். இசையும் இதயத் துடிப்பும் இரண்டரக் கலக்க வேண்டும். அதுபோலவே சிறுகதையும் வாசித்த மாத்திரத்திலேயே ஒரே அமர்வில், முழுவதும் வாசித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைத் தர வேண்டும்.

வர்ணனைகளைப் பொறுத்தவரை சிறுகதைகளில் அமையும் பாத்திரங்களின் தேவைக்கு ஏற்ப இடம்பெறச் செய்யலாம். ஆனால் வர்ணனைகளை அதிகமாகப் பயன்படுத்துவது சிறுகதைகளின் காத்திரத் தன்மையைப் பாதிக்கச் செய்வதாகவே அமையும்.

 

உங்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை எழுத்தாளர் என்று யாரைக் கூறுவீர்கள்?

பொதுவாக எனக்குக் கிடைக்கும் எல்லாக் கதாசிரியர்களது சிறுகதை நூல்களையும் நான் வாசிப்பேன். ஒருவரது பெயரை மட்டும் இங்கு குறிப்பிட முடியவில்லை. குறிப்பாகச் சொல்வதென்றால் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம், வண்ணதாசன் என்ற புனை பெயரில் சிறுகதைகளை எழுதுகின்ற சி. கல்யாண சுந்தரம், கு.ப.ரா என பரவலாக அறியப்பட்ட கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, தியாகராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, பாலகுமாரன், சுஜாதா, ரமணி சந்திரன் ஆகியோரது சிறுகதைத் தொகுதிகளை வாசித்துள்ளேன்.

உள்நாட்டு எழுத்தாளர்களான மறைந்த எழுத்தாளர்களான நீர்வைப் பொன்னையன், கவிஞர் ஏ. இக்பால், எஸ். முத்துமீரான், எ.எஸ்.எம். நவாஸ் மற்றும் திக்குவல்லைக் கமால், சி. சிவசேகரம், சுதாராஜ், இரா. சடகோபன், மு. சிவலிங்கம், அஷ்ரப் சிஹாப்தீன், பதுளை சேனாதிராஜா, மலரன்பன், திக்குவல்லை ஸப்வான், உ. நிசார், தீரன் ஆர்.எம் நௌசாத், சூசை எட்வேட், உமா வரதராஜன், டாக்டர் நௌஷாத் முஸ்தபா, காத்தநகர் முகைதீன் சாலி, செங்கதிரோன், நஜ்முல் ஹுசைன், மருதூர் ஜமால்தீன், திக்குவல்லை ஸும்ரி, எஸ்.ஆர். பாலசந்திரன், பவானி சிவகுமாரன், சுலைமா சமி இக்பால், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, எம்.ஏ. ரஹீமா, கெக்கிறாவ ஸஹானா, வசந்தி தயாபரன், மரீனா இல்யாஸ் ஷாபி, கீதா கணேஷ், இன்னும் பலரது சிறுகதை நூல்களையும் நான் விரும்பி வாசித்துள்ளேன். 

அத்துடன் தமிழ்நாட்டில் இலக்கியம் படைக்கும் கா.சி. தமிழ்க்குமரன் என்ற மூத்த எழுத்தாளர் ஒருவர் எனக்கு அவருடைய நான்கு சிறுகதைத் தொகுதிகளையும் ஒரு நாவலையும் கூடவே கவிப்பேரரசு வைரமுத்துவின் கருவாச்சி காவியத்தையும் அண்மையில் இந்தியாவிலிருந்து எனக்கு அனுப்பி வைத்தார். இந்த 06 புத்தகங்களடங்கிய பொதியைக் கண்ட நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவ்வப்போதைய ஓய்வு நேரங்களில் இவ்வகையான நூல்களின் வாசிப்பே எனக்கு மிகுந்த ஆறுதலைத் தருகின்றது என்ற உண்மையையும் இங்கு பதிவு செய்யத்தான் வேண்டும்.


உங்களது படைப்புகளுக்குக் கிடைத்த விமர்சனங்கள் எவ்வாறு இருந்தன?

நான் கதைகளை எழுதி முடிந்தவுடனே எனது நண்பியும் படைப்பாளியுமான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு அனுப்பி வைப்பேன். ரிஸ்னா சுடச்சுடவே கதைக்கான விமர்சனங்களைச் சொல்வார். அத்தோடு எனது புத்தக வெளியீடுகள் பலவற்றில் கலந்து கொண்ட பேச்சாளர்கள் பலரும், எனது பல படைப்புகளைப்பற்றி கருத்துக்களைச் சொல்லும் போது சிலாகித்துப் பேசினார்கள். இப்படி எனது படைப்புகளுக்குக் கிடைத்த விமர்சனங்கள் எல்லாம் என்னை உற்சாகமூட்டும் டொனிக்காக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்துடன் எனது ஆக்கங்கள், நூல் விமர்சனங்கள் போன்றவை பலரையும் கவர்ந்திருக்கிறது. அப்படி அவர்களைக் கவர்ந்ததால்தான் மூத்த எழுத்தாளர்களும் இளந்தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் அவர்களது நூல்களை எனக்கு விமர்சனம் எழுதுவதற்காக அனுப்பி வைக்கின்றார்கள். அவர்களது நூல்களுக்கு நான் எழுதிய நூல் விமர்சனங்களைப் பார்த்துவிட்டு அவர்கள் திருப்தியடைகிறார்கள். எனது இரசனைக் குறிப்பு தொடர்பாக அவர்களது மகிழ்ச்சியை எனக்கு தெரியப்படுத்துகிறார்கள்.


முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தில் ஓர் அங்கத்தவராக இருந்திருக்கின்றீர்கள். இந்த அமைப்பு ஈழத்து இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய அதிர்வுதான் என்ன?

திரு நீர்வை பொன்னையன் அவர்களைத் தலைவராகக் கொண்டு செயல்பட்ட ஒரு இலக்கிய அமைப்பே முற்போக்கு கலை இலக்கிய மன்றமாகும். இந்த இலக்கிய அமைப்பில் 2007 ஆம் வருடம் மறைந்த கவிஞர் ஏ. இக்பால் அவர்களே என்னை அங்கத்தவராகச் சேர்த்துவிட்டார். இந்த மன்றத்தில் மறைந்த ஆளுமையாளர்களான ஜனாப் ஏ. முகம்மது சமீம், தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் திரு சிவா சுப்ரமணியம், திரு. பாலசிங்கம், கவிஞர் ஏ. இக்பால், திரு. கே. ராசரத்னம், திரு. கே. சோம சுந்தரம் போன்றவர்களுடன் வாழும் ஆளுமையாளர்களான திரு கே. சிவபுத்திரன், திரு வீ. கருணைநாதன், திருமதி சுமதி குகதாசன், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ஆகியோருடன் நானும் அங்கத்துவம் வகித்திருந்தோம். 

இலக்கியத் துறைக்கு பெரும் பங்களிப்புச் செய்த மறைந்த முற்போக்கு எழுத்தாளர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கான நினைவுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, அவர்களை கௌரவிப்பதில் இம்மன்றம் முன்நின்று செயற்பட்டது. அதேபோன்று இலக்கிய நூல் வெளியீடுகள், அறிமுக விழாக்கள் போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்ததோடு கருத்தாழமிக்க திரைப்படங்களையும் இம்மன்றம் அவ்வப்போது திரையிட்டது. இலக்கிய ரீதியான செயல்பாடுகளில் என்றும் முன்னணியாக செயல்பட்ட இம்மன்றத்தின் மூலமே 2010 ஆம் ஆண்டில் 'தென்றலின் வேகம்' என்ற எனது முதலாவது கவிதை நூலும் வெளிவந்தது என்பதையும்  நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.


நேர்கண்டவர்:- கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான்


2024.12.29 தமிழன் பத்திரிகையுடன் வெளிவரும் இணைப்பிதழான தமிழ் முரசு இதழில் எனது அட்டைப் படம் தாங்கியதாக வெளிவந்த நேர்காணல்

தெற்கில் விளைந்த விலைமதிக்க முடியாத இலக்கிய முத்து

வெலிகம ரிம்ஸா முஹம்மத்


தமிழ் முரசு இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர். இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர், விமர்சகர்,  சஞ்சிகையாசிரியர்  மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், பூங்காவனம் கலை இலக்கிய சமூக சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத்.


பன்னூலாசிரியர் ரிம்ஸா முஹம்மத் அவர்களுடனான சிறப்பு நேர்காணல்

நேர்கண்டவர்:- கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா


உங்களைப் பற்றிய அறிமுகத்தை எமது வாசகர்களுக்காகக் கூறுங்கள்? உங்கள் கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றியும் குறிப்பிடுங்கள்?


தென் மாகாணத்தில் அமைந்துள்ள வெலிகமயைப் பிறப்பிடமாகக் கொண்ட நான் குடும்பத்தின் மூத்த பிள்ளை. எனது தந்தை ஏ.எச். முஹம்மத், தாயார் காலஞ்சென்ற எம்.ரீ.எப். லரீபா ஆவர். வெலிகம அறபா தேசிய பாடசாலையில் தரம் ஒன்றில் சேர்ந்து இரண்டு மாதங்கள் கற்ற பின்னர் மீண்டும் தரம் ஒன்றிலேயே வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் சேர்ந்து உயர் தரம் வரையும் கல்வி கற்றேன். தொழில் ரீதியாக தனியார் நிறுவனத்தில் கணக்கீட்டுத் துறையில் பணி புரிந்துகொண்டே, கணக்கீட்டுப் பாடத்தைப் பிரத்தியேகமாக கற்பித்த அனுபவத்தையும் பெற்றுக்கொண்டேன். அத்துடன் இலக்கியத் துறையில் மிகுந்த ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றேன். எனது ஓய்வு நேரங்களில் பெரும் பகுதியை இலக்கியத் துறைக்காகவே அர்ப்பணித்துள்ளேன்.


கணக்கீடு, எழுத்து ஆகிய இருவேறுபட்ட துறைகள் உங்களை எப்படி வசப்படுத்தின?

தரம் ஒன்பது கற்கும் காலத்தில் வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் என்ற பாடம் எனக்கு அறிமுகமாகியது. இந்தப் பாடத்தில் எனக்கு கணக்கீட்டுப் பகுதி மிகவும் பிடித்துப் போனது. வரக்காப்பொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் எனக்குக் கற்பித்த ஆசிரியர்களையே இதற்குக் காரணமாகக் கூறலாம். இந்த இடத்தில் எனக்குக் கணக்கீட்டுக் கல்வியைக் கற்பித்த ஆசிரியர்களான ஜனாப். எம்.வை.எம். புகாரி, திருமதி. எம்.எச்.எஸ். ஆசியா, ஜனாப். எம்.ஏ.எம். ரூமி, ஜனாப். எம்.வை.எம். இக்ரான், திரு. ஐ.பீ. சதாரூபன், திரு. வீ. சரவணபவன், திரு. ஜீ. ஜெயசீலன் ஆகியோரை மனம் நிறைந்த நன்றிகளோடு இப்போதும் நினைத்துக்கொள்கிறேன். உயர் தரத்தை வணிகப் பிரிவில் கற்றதனால் கணக்கீட்டை ஒரு முக்கியமான பாடமாகக் கற்றேன். உயர் தரத்துக்குப் பின்னரும் ஐஏபீ மற்றும் ஏஏரீ ஆகிய கற்றை நெறிகளை விரும்பிக் கற்றேன். பின்னர் இத்துறையில் எனது தொழிலையும் அமைத்துக்கொண்டேன். அத்துடன் கணக்கீட்டுப் பாடத்தை சாதாரண தர மாணவர்களுக்காக பிரத்தியேகமாகக் கற்பித்த அனுபவமும் எனக்கு இருக்கிறது.

அதேபோல எனக்கு பாலர் வகுப்பில் கல்வி கற்பித்த ஆசிரியையான திருமதி. எப்.ஐ.எம். இப்றாஹீம் என்று அழைக்கப்பட்ட காலஞ்சென்ற பௌசுல் இனாயா இப்றாஹீம் ஆசிரியை அவர்களே தமிழ் பாடத்தை சிறப்பாகக் கற்பித்தார். அகரம் கற்பித்த இந்த ஆசிரியையை இப்போதும் மிகுந்த அன்போடு நினைவுகூர்ந்து பிரார்த்தித்துக் கொள்கின்றேன். இத்தோடு எனக்கு ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ்ப் பாடத்தை சிறப்பாகக் கற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகள் எப்போதும் உண்டு. எனக்கு இலக்கிய உலகை அறிமுகப்படுத்தி, தனது சிறுகதையை வாசித்துக் காட்டிய எனது மாமா, தேசிய கல்வி நிறுவக முன்னாள் செயற்திட்ட அதிகாரியும் எழுத்தாளருமான காலஞ்சென்ற திக்குவல்லை எஸ்.ஐ.எம். ஹம்ஸா அவர்களும் ஒரு முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார். அவ்வப்போது சிறந்த ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து தந்த திக்குவல்லை ஸப்வான் அவர்களையும் நான் இந்த இடத்தில் நன்றியோடு நினைத்துக்கொள்கின்றேன். இந்த ஸப்வான் ஆசிரியரே இலக்கிய உலகுக்கு 2004 ஆம் ஆண்டில் செந்தூரம் இதழ் மூலமாக என்னை முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தார்.


உங்களது எழுத்துலக பிரவேசம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

1998 இல் பாடசாலையில் கற்கும் காலங்களிலேயே சூரியன், சக்தி ஆகிய தனியார் வானொலி நிகழ்ச்சிகளுக்கு எனது ஆக்கங்களை அனுப்பியுள்ளேன். அவை ஒலிபரப்பாகும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். 2004 இல் தினமுரசு பத்திரிகையில் நிர்மூலம் என்ற எனது சிறிய கவிதையை எழுதியதிலிருந்தே தீவிரமாக எழுத ஆரம்பித்தேன். தொடர்ந்து தேசியப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறேன். இவ்வாறு களப்படுத்திய எனது படைப்புகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் சுமார் ஆயிரத்தையும் தாண்டியதாக இருக்கும். இவற்றில் பெரும்பகுதி எனது சேமிப்பில் கைவசம் உள்ளது.


உங்களது பால்யத்தின் நாட்களுக்கும் உங்களது எழுத்துகளுக்கும் எவ்வளவு தொடர்புகள் இருக்கிறது?

தரம் எட்டு படிக்கும் காலத்திலேயே வாசிப்பின் மீது ஒருவகையான ஈர்ப்பு என்னிடம் இருந்தது. இதற்குக் காரணம் வரக்காப்பொலயைச் சேர்ந்த அக்ரம் ஜுனைட் என்ற ஆசிரியர்தான். அவர் எமது பாடசாலையின் அல் ஹிக்மா வாசிகசாலையிலிருந்து வாரா வாரம் புத்தகங்களை எடுத்துச் சென்று வாசிக்க வேண்டும் என்று கூறினார். மட்டுமல்லாமல் வாசிகசாலையின் முகப்புச் சுவரில் ஓர் அறிவித்தல் பலகையைத் தொங்க வைத்திருந்தார். அதில் ஒவ்வொரு வாரமும் மாணவர்களின் பல்வேறு வகையான ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்படும். எமது வகுப்பு மாணவர்களது ஆக்கங்களும் அதில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறி அவர் எங்களை உற்சாகப்படுத்தினார். அந்த ஊக்குவிப்பின் காரணமாகவே மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று ஆக்கங்களை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. இப்படி எழுதிக்கொண்டு போன ஆக்கங்களை காட்சிப் பலகையில் காணும் போது உள்ளம் மகிழ்ச்சியில் குதூகலிக்கும். எனவே பாடசாலைக் காலத்திலேயே எனக்கு வாசிப்புப் பழக்கமும் எழுத்துப் பழக்கமும் ஏற்பட்டது.


இதுவரை வெளிவந்த உங்களது நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

கணக்கீடு, கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் படைப்பு, ஆய்வு ஆகிய துறைகளில் இதுவரை 15 நூல்களை வெளியிட்டுள்ளேன். இதில் கடைசியாக வெளிவந்த நூலே எனது 'பிஞ்சு மனம்' என்ற சிறுகதைத் தொகுதியாகும். எனது இந்த நூல்களை பின்வருமாறு பட்டியல் படுத்திக் குறிப்பிடலாம்.


01. வங்கிக் கணக்கிணக்கக் கூற்று (கணக்கீடு) 2004

02. கணக்கீட்டுச் சுருக்கம் (கணக்கீடு) 2008

03. கணக்கீட்டின் தெளிவு (கணக்கீடு) 2009

04. தென்றலின் வேகம் (கவிதை) 2010

05. ஆடம்பரக்கூடு (சிறுவர் கதை) 2012

06. என்ன கொடுப்போம் (சிறுவர் கதை) 2012

07. பாடல் கேட்ட குமார் (சிறுவர் கதை) 2013

08. இதுதான் சரியான வழி (சிறுவர் கதை) 2013

09. கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை (விமர்சனம்) 2013

10. வண்ணாத்திப் பூச்சி (சிறுவர் பாடல்) 2014

11. அறுவடைகள் (விமர்சனம்) 2015

12. எரிந்த சிறகுகள் (கவிதை) 2015

13. விடியல் (ஆய்வு) 2017

14. எழுதாத பேனாவுக்கு எழுதிய சரித்திரம் (ஆவணம்) 2021

15. பிஞ்சு மனம் (சிறுகதை) 2024


சிறுகதைகள் மீதான ஆர்வம் எப்போது இருந்து ஆரம்பித்தது?

பொதுவாக பாடசாலையில் கற்கும் காலத்திலிருந்து ஆரம்பித்தது என்றுதான் சொல்ல முடியும். பின்நாட்களில் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்ற போது சிலரது சிறுகதை நூல்கள் பற்றியும் கலந்துரையாடல்கள் நடக்கும். அங்கு சிலாகிக்கப்பட்டு பேசப்பட்ட நூல்களை நான் எப்படியாவது பெற்று வாசித்து விடுவேன். சிறுகதைகள் பலவற்றை பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வாசிப்பேன். சிறுகதைகளில் ஆர்வம் ஏற்பட்ட போது மூத்த எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிறுகதை நூல்களை வாங்கி வாசிப்பேன்.

சிறுகதை வாசிப்பினால் ஏற்பட்ட ஒரு வகையான அருட்டுணர்வின் காரணமாகவே நான் சிறுகதைகளை எழுதினேன். இப்படி எழுதிய சிறுககைளை பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும் அனுப்பி வைத்தேன். அவை பிரசுரமாகின. நான் எழுதிய ஒரு சில சிறுகதைகளை போட்டிகளுக்கும் அனுப்பி வைத்தேன். அவற்றுள் முக்கியமாக ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை தேசிய ரீதியாக நடாத்தும் அமரர் செம்பியன் செல்வன் (ஆ. இராஜகோபால்) ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த சிறுகதைப் போட்டி, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இரத்மலானை பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த சிறுகதைப் போட்டி, தென் மாகாண கலாசார மற்றும் கலை விவகார அமைச்சு ஏற்பாடு செய்த திறந்த சிறுகதைப் போட்டி, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தேசிய ரீதியாக நடத்திய வியர்வையின் ஓவியம் - உழைக்கும் மக்கள் கலை விழா சிறுகதைப் போட்டி போன்றவற்றுக்கு எனது சிறுகதைகளை அனுப்பி வைத்தேன். அவற்றுக்கு முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்கள் என்றும் ஆறுதல் பரிசுகளும் கிடைத்துள்ளன.

மட்டுமல்லாமல் 2024 நன்னூல் பதிப்பகத்தால் சர்வதேச ரீதியாக நடாத்தப்பட்ட பன்னூலாசிரியர், எழுத்தாளர் டாக்டர் ஹிமானா சையத் நினைவு சிறுகதைப் போட்டியில் எனது 'இறையச்சம்' என்ற சிறுகதைக்காக இரண்டாம் இடமும் 7,500 ரூபா இந்தியப் பணப் பரிசும் கிடைத்தமை மிகுந்த மனநிறைவைத் தருகிறது. எனவே எனது எழுத்துக்களுக்கு ஓர் அங்கீகாரம் இருப்பதாய் உணர முடிந்தது. இதுவே சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆவலை என்னுள் விதைத்தது. மட்டுமல்லாமல் சிறுகதை நூல் வெளியிட வேண்டும் என்ற உந்துதலையும் தந்தது.


முதல் சிறுகதை எப்போது வெளியானது? அந்த நேரத்தில் எப்படிப்பட்ட மனநிலை இருந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிட அதுவே உந்துதலாக அமைந்ததா?

நான் எழுதிய சிறுகதைகள் பலவற்றில் 'மனிதம் வாழும்' என்ற தலைப்பில் அமைந்த எனது சிறுகதையே 2013.10.10 இல் விடிவெள்ளி பத்திரிகையில் முதன் முதலாகப் பிரசுரமானது. பிரசுரமான சிறுகதையின் பத்திரிகைப் பக்கத்தைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த உற்சாகத்தோடு அவ்வப்போது சிறுகதைகளையும் எழுதி வந்தேன். தொடர்ந்து எழுதிய கதைகளில் ஒரு சில ஏனைய தேசியப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. நான் எழுதிய இன்னும் சில கதைகளை சிறுகதைப் போட்டிகளுக்கு அனுப்பி வைத்தேன். அவற்றுக்கு பரிசுகளும் கிடைத்துள்ளன. எனது கதைகளுக்குக் கிடைத்த பாராட்டுகள், சான்றிதழ்கள், பணப் பரிசுகள் எல்லாம் எனக்கு மேலும் பல கதைகளை எழுத வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது.


உங்கள் சிறுகதைகளில் யதார்த்தமான விடயங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. யதார்த்தம் படைப்பாகின்ற போதுதான் அது முழுமையாகின்றது என்று எண்ணுகின்றீர்களா?

ஆம் நிச்சயமாக. யதார்த்தத்தைப் பிரதிபலிக்காத எந்தவொரு இலக்கியமுமே முழுமை அடைவதில்லை. சிறுகதைகளின் முக்கியமான பண்புகளில் ஒன்றாக அமைவது, தான் சார்ந்த சமூகத்தை அது பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்பதுதான். நான் பார்த்த, நான் கேள்வியுற்ற, ஏதோ ஒரு வகையில் என்னைப் பாதித்த சம்பவங்களையே கதை வடிவில் வெளிக்கொண்டு வருகின்றேன். எனது 'பிஞ்சு மனம்' என்ற கன்னிச் சிறுகதைத் தொகுதியை வாசிப்பதனூடாக இதனைப் புரிந்துகொள்ளலாம்.


பெண்கள் மீதான ஒடுக்குமுறை என்பது ஆண் சமூகத்திலிருந்து மட்டுமே வருகிறது என்று சொல்ல முடியுமா?

ஒட்டுமொத்தமாக அவ்வாறு கூறிவிட முடியாது. சில பல காரணங்கள் இவ்விடத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. திருமணத்தின் பின்னரான வாழ்வில் இலக்கியத்தில் கூட நிலைத்து நிற்பவர்கள் சொற்பமே. ஒடுக்குமுறை என்று இல்லாவிட்டாலும் தம்மீது சுமத்தப்படுகின்ற பொறுப்புகளைத் தவறவிடாமல் தம்மை வருத்திக் கொள்பவர்களும் உண்டு. அல்லாமல் மாமியார் மருமகள் பிரச்சினை பற்றியும் இவ்விடத்தில் கோடிட்டுக் காட்டுவது பொருத்தமாக அமையும். கணவரும் அவரது குடும்பத்தாரும் ஒரு பெண்ணின் மீது எதிர்பார்க்கும் விடயங்கள் சில வேலைகளில் ஒடுக்கு முறையாகவே காணப்படுகின்றது. மட்டுமின்றி வேலைக்குச் செல்லும் பெண்கள் தமது உயர் அதிகாரிகளாலும் (ஆண் அல்லது பெண்) ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிறார்கள். பெண்களால் ஒடுக்கப்படும் வீட்டுப் பணிப் பெண்கள் கூட சில வேளைகளில் இவ்வாறான அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். சூழ்நிலைகளே இவற்றுக்குக் காரணமாக அமைகின்றன என்பது எனது கணிப்பு. எனவே ஆணாதிக்கம் மட்டுமே, பெண்கள் மீதான ஒடுக்கு முறைக்குக் காரணம் என்று கூற முடியாது. 


இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எனது இலக்கியப் பயணத்தில் எனது வெற்றிகளுக்கு உதவிய அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை நான் இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன். விசேடமாக எனது நூல் வெளியீடுகளின் போது முதற்பிரதிகளை வாங்கியவர்கள், சிறப்புப் பிரதிகளை வாங்கியவர்கள், எனது படைப்புகளுக்கான இரசனைக் குறிப்புகளை எழுதித் தந்தவர்கள், எனது படைப்புகளைக் களப்படுத்திய ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகைகளின் பிரதம, துணையாசிரியர்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையங்களில் என்னை நேர்காணல் செய்தவர்கள், சஞ்சிகைகளில் எனது அட்டைப் படத்தைப் பிரசுரித்து என்னைப் பற்றிய ஆக்கத்தையும் எனது நேர்காணலையும் பிரசுரித்த சஞ்சிகையாசிரியர்கள் போன்ற எல்லோருக்கும் பொதுவாகவே எனது நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன். அவர்களது பெயர்கள் விடுபடக் கூடாது என்பதற்காக அந்தப் பெரிய பெயர்ப் பட்டியலை நான் இங்கு முன்வைக்க விரும்பவில்லை.

அத்துடன் எனது இந்த நேர்காணலை நடத்திய கிண்ணியாவை சேர்ந்த மூத்த ஆளுமையாளர், கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸுக்கும், தமிழன் பத்திரிகையின் தமிழ் முரசுக்கும் நன்றி!!!


நேர்கண்டவர்:- கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ், கிண்ணியா