'பிஞ்சு மனம்' சிறுகதைத் தொகுதி பற்றிய ஒரு பார்வை
நூல் கண்ணோட்டம்:-
பவானி சச்சிதானந்தன், கொழும்பு.
வெள்ளை மஞ்சள் சிகப்பு கலந்த பல அழகிய வண்ணத்தில் சிறு குழந்தையின் புன்னகைக்கும் முகத்துடன் 'பிஞ்சு மனம்' சிறுகதைகள் என தலைப்பிட்டு வண்ணாத்துப் பூச்சிகள் இரண்டையும் பதிவிட்டு முன்னட்டை அழகுற, பின்னட்டை ஆசிரியரின் புகைப்படத்துடன் கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் அவர்களின் வாழ்த்துரை சிறந்திட பூங்காவனம் இலக்கிய வட்ட முகவரி அடங்கலுடன் வெளிவந்திருக்கின்றது இந்த சிறுகதை நூல். உள்ளே நூலாசிரியரின் ஏனைய வெளியீடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு பதிவுத் தரவுகளை அடங்கியுள்ளார்.
நூலுக்கான அணிந்துரையை கொழும்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களும், முன்னுரையை கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுப் பிரிவு பிரதி ஆணையாளர் லெனின் மதிவானம் அவர்களும், வாழ்த்துரையை முன்னாள் உளவியல் (வருகைதரு) விரிவுரையாளர் அல்ஹாஜ். யூ.எல்.எம். நௌபர் அவர்களும் எழுதியுள்ளார்கள். ஈற்றில் என்னுரையை முன்வைத்த நூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத், தனது மாமாவான எழுத்தாளர் எஸ்.ஐ.எம். ஹம்ஸா அவர்களுக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்துள்ளார்.
நூலின் உள்ளடக்கம் பதினெட்டு சிறுகதைகளின் தலைப்புகளைத் தாங்கியதாக 152 பக்கங்களில் வெளிவந்துள்ளது. நான் ஏழு சிறுகதைகளை மட்டுமே இங்கு எனது ஆய்வுக்காக எடுத்து, வாசகர்களுக்காக முன்வைத்துள்ளேன்.
முதலாவது சிறுகதை 'பிஞ்சு மனம்' என்ற நூலின் தலைப்பிலேயே நூலை அழங்கரித்து நிற்கின்றது. இக்கதையில் ஏதோ ஒரு காரணமாக சிறார்கள் வளரும் போது தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும் இறுக்கமான மனதோடும் இருக்கிறார்கள். ஒப்பீடு வகையிலும் மனம் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களால் சிறுபராயம் தொட்டே கவலைப்படும் நிலையில் நிறம் ஒரு பிரச்சினையாகக் காண்பிக்கப்பட்டு, பல சந்தர்ப்பங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அதன் பின்னர் வளர்ந்து பெரியவளான நிலையில் தெளிவான சிந்தனையோடு தன் மனதை இலகுவாக்கிய விதத்தில் கூறியுள்ளமை சிறப்பாக அமைந்துள்ளது.
'மனிதம் வாழும்' என்ற கதை ஏழ்மையை மதிக்கத் தெரிந்த அற்புதமான மனிதராக ராஸிக் மௌளவியை விவரித்துள்ள விதமும் ஒரு நல்லவரின் மரணம் எத்தனை இதயங்களை வலிக்க வலிக்க பேச வைக்கின்றன என்ற கருத்தையும் கூறி, இறுதியாக மூன்று பெண் பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்த தகப்பனாரான ராஸிக் மௌளவி சுவர்க்கம் புகுவார் என்பதற்கு இணங்க நஸீராவுடன் இணைந்து நாமும் இணைந்து துஆக் கேட்போம் என்று கதையை அழகாக நிறைவு செய்துள்ளார்.
அடுத்த கதையாக 'பலன்' என்ற கதை ஏழையானவர்களிடம் திறமை கலந்த நல்ல பண்பை நிதர்சனமாக உணர கடவுள் பல சந்தர்ப்பங்களைக் கொடுப்பார் என்ற கருத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பணக்கார வர்க்கத்தினரின் தேவைப்பாடுகள் முழுமையுமே பணத்தைக் கொண்டே ஈடு செய்ய பணக்காரர்கள் பழகியிருப்பார்கள். அங்கே ஏழைக்கு மரியாதை என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரமாய் நிற்க, ஏழ்மையை இகழ சாதாரணமாக ஒழுக்கத்தையே நிந்தனை செய்து குறை சொல்ல துணிந்திடுவது யதார்த்தமே. இருந்தும் அதற்கான பலன்களை இம்மையிலேயே இறைவன் கொடுத்துவிடுகிறான் என்ற உண்மையை இக் கதை சுட்டிக்காட்டுகின்றது.
இன்னும் ஒரு சிறந்த கதையாக 'உறவுகள்' என்ற கதை நூலை அலங்கரித்து நிற்கின்றது. காவியா - ஹாசினியுடனான நட்பில் வழிகாட்டியாகி எந்தவிதமான எதிர்ப்பார்ப்புகளும் இல்லாமல் உதவும் மேன்மையான குணம் கொண்ட காவியா, ஹாசினியின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பல சுகமான வழிகளை அமைத்துக் கொடுத்து அகம் மகிழ்கின்றாள். வயது வித்தியாசமற்ற நட்பின் அழகை உயிரோட்டமாகக் கூறுகின்ற இனிய கதையாக இக்கதை அமைந்துள்ளது.
'மௌனம' இன்னுமொரு உயர்வான சமூக ரீதியாக நிரூபிக்க பால்ய சிநேகிதர்களான சாமில் - சாஜித் இருவரையும் காண்பித்து சுயநலமாக தனது தேவைகளை நிறைவேற்றி பெற்றோரையும் சகோதரங்களையும் எண்ணிட மறந்த சாமிலுக்கு, சாஜித் கூறும் அறிவுரை மற்ற சுயநலமிகளும் படிப்பினையாக உணர்ந்து செயல்பட சிறந்த கதையாக அமைகின்றது.
'வாழ்க்கை வளைவு' என்ற கதையில் தனது மனைவி இறைவனடி சேர்ந்ததும் காதர் நானாவின் வாழ்நாள் தலைமைத்துவத்தை இழந்து வயதுக்கேற்ற சாப்பாடு, தண்ணீர் கிடைக்காது தடுமாறி பால்ய நண்பன் மக்கீனிடம் கூறி கவலைப்படும் நிலை பரிதாபமாகரமானதாக இருக்கிறது. பிள்ளைகளுக்காக சொத்து பிரிக்கப்பட்டுள்ள நிலையில் தனக்காக எதுவும் வைத்துக்கொள்ளாத தந்தை தனிமைப்பட மறைந்த மனைவியின் இடத்திலான வெற்றிடம் நிறைக்கப்படாத கொடுமை, கலங்கி நிற்க வைத்துள்ள கடினமான வாழ்க்கை ஆகியவற்றை தொட்டுக்காட்டி நகரும் இக்கதையும் சிறப்பாக அமைந்துள்ளது.
அடுத்ததாக 'வீடு' என்ற கதை நிஸாம், பரீத், நவ்பர் ஹாஜி என சில நல்ல உள்ளம் கொண்டவர்களை நினைவில் நிறுத்தி வடித்த கதையாக நூலில் இடம்பிடித்துள்ளது. சமூக நலன்களுக்காக பலர் முயற்சிக்க சரியான முறையில் சிறப்பாக நடந்து வலுப்படுத்தினால் வெற்றிபெற முடியும் என்ற உண்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. இக்கதையும் நூலாசிரியரின் சிறந்த சமூக நல சிந்தனையை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.
ஆக நூலில் இடம்பெற்றுள்ள அத்தனை கதைகளும் பல நல்ல விடயங்களை ஒப்புவித்து வாசிப்போரை சளைக்காத வகையில் இழுத்துச் செல்கின்றது. இப்படியாக இன்னும் பல சமூக நலக் கதைகளை நூலாசிரியர் படைக்க வேண்டுமென்ற வேண்டுதலை முன்வைத்து வாழ்த்துகளைக் கூறுவதில் மகிழ்கின்றேன்.
நூல் - பிஞ்சு மனம்
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
தொலைபேசி - 0775009222
வெளியீடு - பூங்காவனம் இலக்கிய வட்டம்
விலை - 1,000 ரூபாய்
நூல் கண்ணோட்டம்:-
பவானி சச்சிதானந்தன், கொழும்பு.


